Saturday, September 17, 2011

ஊமைச்செந்நாய் - ஜெயமோகன் எழுதியது

யானைத்துப்பாக்கியை தூக்கி தனக்கு இணையாக நிறுத்திக்கொண்டு துரை என்னைப்பார்த்து கண்ணைச்சிமிட்டினான். பெரும்பாலான துரைகளுக்கு கண்களைச் சிமிட்டும் பழக்கம் உண்டு. சின்னவயதில் நானும் என்ன செய்வதென்று தெரியாமல் பதிலுக்கு கண்களைச் சிமிட்டிக் காட்டுவேன். அது துரைகளுக்கு கோபத்தை உருவாக்கும் என்று சீக்கிரமே புரிந்து கொண்டேன். அதன்பின் முப்பதுவருட வேட்டைத்துணைவனின் வாழ்க்கையில் நான் மிகமிக அமைதியாக இருக்கக் கற்றுக்கொண்டேன். வேட்டை நாய் எப்படி இருக்குமோ அப்படி இருப்பேன். நான் கூடச்செல்வதே தெரியாது. தேவையான இடத்தில் மட்டும் சைகை செய்வேன். சைகைமூலம் சொல்லமுடியாத விஷயத்துக்கு மட்டும் குரல். அதுவும் ஒருசொல் அல்லது இரண்டு சொல். எனக்கு ஆங்கிலம் சொற்களாகத்தான் தெரியும். ஆகவே என்னை ‘ஊமைச்செந்நாய்’ என்று அவர்கள் அழைத்தார்கள்.

”என்னை வில்சன் என்று கூப்பிடு” என்றான் துரை. அவனுக்கு நாற்பது வயதுதான் இருக்கும். ஆனால் நம்மூரில் நாற்பதுவயதில் இருபது வயதான மகன் வந்து அவனுக்கும் பிள்ளை பிறந்து தாத்தா ஆகி மிச்சமிருக்கும் நாட்களை எண்ண ஆரம்பித்திருப்பார்கள். தொப்பை சரிந்து தடைக்கு கீழே சதை தொங்கி கண்ணுக்கு கீழே கறை விழுந்து தெரிவார்கள். துரை இறுக்கமாக பனைநாரால் பின்னிச் செய்தவன்போல இருந்தான். நரம்புகள் பச்சை நிறமாக தோளிலும் கழுத்திலும் கைகளிலும் தெரிந்தன. உதடே கிடையாது.காட்டுபூனையின் கண்கள். இரு பக்கங்களிலும் கைகளைக் கொடுத்து அழுத்திச் சப்பியது போன்ற முகம் அவனுக்கு. மூக்கு நீளமாக வயதான கழுகின் அலகு போல. தேங்காய்நார்போன்ற தலைமுடி. சேற்றுப்பாறை போல மடிப்பு மடிப்பாக இறுகி இருந்த அவன் வயிற்றைப் பார்ப்பவர்கள் அவன் ஒரே வேளையில் இரண்டு காட்டுச்சேவல்களைத் தின்பவன் என்று நம்ப மாட்டார்கள்.

துரையளவுக்கு உயரம் இருந்தது துப்பாக்கி. அதன் கட்டைக்கு நல்ல ஈட்டியை போட்டிருந்தார்கள். கைபட்டு கைபட்டு எண்ணை ஊறி வழவழப்பாக கறுத்திருந்த அந்த தடி ராஜநாகம் போலிருந்தது. அதன்மீது நல்ல மினுமினுக்கும் உருக்கில் இரட்டைக்குழாய்கள். துப்பாக்கியின் விசைக்கொண்டி பித்தளை. அதில் விரல்படும் இடம் பொன்னிறமாக இருந்தது. சொந்த தம்பியை கூட நிறுத்தி அணைத்துக் கொள்பவன்போல துரை நின்று புளியங்கொட்டைகள் போன்ற பற்களைக் காட்டி சிரித்தான். ”எப்படி இருக்கிறது?” என்றான். நான் புன்னகை செய்தேன்.”ஒரே குண்டுபோதும். மத்தகம் பிளந்து மூளை வெளியே கொட்டும்….வெண்ணைப்பானை உடைவது போல” நான் அவன் சொன்னதைப் புரிந்துகொண்டாலும் அதே புன்னகையை மட்டும் காட்டினேன்.

”நாம் நாளைக்காலை கிளம்புவோம். விடிவதற்கு முன்பாக…”என்றான் துரை. நான் அதற்கும் புன்னகை மட்டுமே செய்தேன். துப்பாக்கியை மெல்ல சாற்றிவிட்டு அவன் நாற்காலியில் அமர்ந்தான். கால்மேல் கால் போட்டுக்கொண்டு ஒரு வெள்ளி சம்புடத்தை எடுத்து திறந்து உள்ளிருந்து ஒரு சுருட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டான். கரிய ஆண்குறி போல பெரிய சுருட்டு. அதை பற்றவைக்க அவனிடம் ஒரு கருவி இருந்தது. அதை பலமுறை சொடுக்குவான். சிட்டுக்குருவி சிலைப்பு போன்ற அந்த ஒலி எனக்குப் பிடிப்பதில்லை. என் முதுகு சிலிர்த்துக் கொண்டிருக்கும். அதில் சுடர் அடியில்சிவப்புள்ள நீலநிறத்தில் சங்குபுஷ்ப இதழ் போல எரிய ஆரம்பித்ததும் அதில் சுருட்டை கருக்குவான். சுருட்டு புகைய ஆரம்பிப்பது எனக்குப் பிடிக்கும். பின்னர் புகையை ஊதி உள்ளிழுத்து மூக்கு வாய் வழியாக வெளியே விடுவான். அவன் வரும் மோட்டாரின் பின்பக்கம் அதேபோலத்தான் புகை எழுகிறது.

நான் நின்றுகொண்டிருந்தேன். துரை என்னைப் பார்த்து ”ஒரு சுருட்டு எடுத்துக்கொள்”என்றான். நான் அதை மறுத்தேன். மறுக்க வேண்டும் என்றுதான் துரைகள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அந்தச்சுருட்டு அதன் காகிதச் சுருள் வரை வந்ததும் எனக்கு தந்துவிடுவார்கள். நான் அப்படி நிறைய சுருட்டு வைத்திருந்தேன். என் மடியில் கூட இரண்டு சுருட்டுத்துண்டுகள் இருந்தன. தினம் இரு முறை நான் சுருட்டு பிடிப்பேன். சாராயம் குடித்தபின் சுருட்டை இழுக்க மிகவும் பிடிக்கும். துரையின் பற்களில் சுருட்டுக்கறை அடுப்புக்கல் போல பழுத்திருந்தது. அவன் சுருட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு திசையைக் கூர்ந்து பார்ப்பான். மெல்ல ஆங்கிலத்தில் முனகிக் கொள்வான். அது பெரும்பாலும் ஏதாவது பாட்டாக இருக்கும்.

துரை என்னிடம் மிஞ்சிய சுருட்டைத் தந்ததும் நான் அதை வாங்கி குத்தி அணைத்து மடியில் வைத்துக் கொண்டேன். மெதுவாக பின்னுக்கு நகர்ந்து பங்களாவின் பின்பக்கம் சமையலறைக்குச் சென்றேன். தோமா சமையல் செய்துகொண்டிருந்தான். நான் வெளியே நின்றேன். ”எந்தா கோணா, எந்து காரியம்?” என்றான். நான் மெல்ல ”சோறு?” என்றேன். ”இரியெடே…சாயிப்பு உண்டிட்டில்ல….நினக்கு நாய்க்கும் பின்னீடு ஆவாம்…” என்றான்.

நான் சமையலறையின் சிறிய வராந்தாவிலேயே அமர்ந்திருந்தேன். பங்களாவின் முன்னால் நின்ற பெரிய இலந்தைமரத்தின் உச்சியில் ஒரு தேன்கூடு, அல்ல அது பழஉண்ணி. பெரியது. நிதானமாக, கொடிக்கயிறில் மழைத்துளி போவதுபோல, கிளைவழியாகச் சென்றது. பழ உண்ணியைப் பிடிக்கவேண்டுமென்றால் அதன் வழியை நன்றாக கவனித்தபின் அங்கே பொறி வைக்க வேண்டும். அதன் வழியைக் கண்டுபிடிப்பது எளியது. முகர்ந்துபார்த்தால் போதும். பழ உண்ணி தலைகீழாக கிளையில் நகர்ந்து இலைகளுக்குள் சென்றது.

பெரிய தட்டில் முழுதாகப் பொரித்த இரண்டு வான்கோழிகளுடன் தோமா முன் அறைக்குச் சென்றான். பிறகு சீமைப்பலாவும் பன்றியிறைச்சியும் போட்டுச்செய்த கறி, செங்கல் போன்ற பெரிய ரொட்டி, ஒரு பெரிய கண்ணாடி குடுவை நிறைய நிறைய பொன்னிறமான அன்னாசிப் பழச்சாறு. பெரிய வெள்ளைத்தகரப்பாத்திரம் நிறைய வெங்காயம் வெள்ளரிக்காய் உப்பு போட்ட முள்ளங்கி துண்டுகள். அவன் உள்ளே அவற்றை பரப்பி வைப்பதை என்னால் காண முடிந்தது. பங்களாவின் ஜன்னல்கள் மிகவும் பெரியவை. தாழ்வானவையும்கூட. தோமா அங்கே தொங்கிய ஒரு நாழிமணியின் நாவை பிடித்து ஒருமுறை அடித்தான்.

துரை எழுந்து வந்து ஒரு வெண்ணிறத் துண்டை கழுத்தில் கட்டிக்கொண்டு அமர்ந்து கொண்டான். மனைவி போல தோமா அருகே நின்று துரைக்கு முதலில் காய்கறிக¨ளை பரிமாறினான். துரை பூனைக்கால் கரண்டியால் அவற்றைக் குத்தி எடுத்து வாயிலிட்டு உதடுகளை மூடிக்கொண்டு மென்று தின்றான். அவனது சவரம் செய்யப்பட்ட தாடை உரித்த கோழியின் தொடை போல சிவப்பாக இருந்தது. அவன் மெல்வதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின் வான்கோழிகளை கத்தியால் வெட்டி பூனைக்கால் கரண்டியால் குத்தி பிய்த்து தின்றான். அவன் பழச்சாறை குடித்து முடித்ததும் அருகே நின்ற தோமா அவன் வாயை துடைத்தான்.

நான் காத்திருந்தேன். தோமா தட்டுகளுடன் வந்தான். அவற்றில் வான்மோழியின் எலும்புகளும் கொஞ்சம் சதையும் இருந்தன. தோமா தனக்காக சோறு பொங்குவான். தேங்காய் போட்டு வான்கோழிக் குழம்பும் வைப்பான். கொஞ்ச நேரத்தில் எனக்கு சட்டியில் சோறு வந்தது. வான் கோழிக்குழம்பு ஊற்றப்பட்டிருந்தாலும் துண்டுகள் இல்லை. துரை மிச்சம் வைத்த பொரித்த கோழி எலும்புகளை சோற்றுடன் சேர்த்து போட்டிருந்தான். நான் ஆவலுடன் சோற்றை வாரி வாரித் தின்றேன். நான் காலைமுதலே ஒன்றும் சாப்பிடவில்லை. மேலும் எனக்கு வேகமாக தின்றுதான் பழக்கம்.

சுருட்டை எடுத்து மூக்கில் வைத்து அதன் வாசனையை முகர்ந்த பிறகு நான் மெல்ல நழுவி கக்கூஸ் சுவருக்கு அருகே அமர்ந்து என் கச்சையில் இருந்து சிக்கிக்கல்லை எடுத்து உரசி நுங்கெண்ணை தோய்த்த பஞ்சுப் பிசிறை பற்ற வைத்து சுருட்டை கொளுத்தினேன். அதை ஆழமாக இழுத்து மெல்லமெல்ல விட்டேன். என் மனதில் சிந்தனைகள் நிறைந்தன. ஆனால் நான் எதைப்பற்றி சிந்திக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை.

தோமா என்னை அழைத்த ஒலி கேட்டு ஓடிச்சென்றேன். ”சாயிப்பினு பெண்ணு வேணும்…ஓடிப்போ”. நான் கொல்லைப்பக்கம் பள்ளத்தில் இறங்கி ஊடு வழியை அடைந்து அதன்வழியாக காட்டுக்குள் சென்றேன். காட்டுக்குள் மதிய வெயில் ஆறுவதன் வெக்கை இலைமணத்துடன் கலந்து வீசியது. ஒரு கீரி என் வழியை கடந்து சென்றது. செள்ளைப்பாறை ஏறி மறுபக்கம் சென்று ஒடைக்கரையில் இருந்த குடிகளை அடைந்தேன். என்னைக்கண்டதும் அங்கே கூவைக்காயை உரலில் இடித்துக்கொண்டிருந்த பெண்கள் வேலையை நிறுத்தி கூர்ந்து பார்த்தாகள்.

”துரையினு கூட்டு வரணும்” என்று சொன்னேன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. தரையில் இருந்த சேவப்பெண்ணை பார்த்தார்கள். சேவப்பெண்ணை நான் பையனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். அப்போது அவள் முலைகள் தேங்காய் போல இருக்கும். இப்போது அவை தூக்கணாங்குருவிக்கூடுகள் போல இருந்தன. சேவப்பெண்ணு என்னை பார்த்து ”நீயல்லடா எரப்ப நாயி?” என்றாள். நான் புன்னகைத்தேன். ”சோதி நீ போயிட்டு வாயெடீ” என்றாள் கிழவி. ”சோதி வேண்டா…” என்றேன் ”துரை அடிப்பான்” கிழவி தூ என்று துப்பி ”சோதி மதி…நீ போடி பெண்ணே”என்றாள்

சோதி என்னுடன் வரும்போது தலை குனிந்து மெல்ல அழுதபடியே வந்தாள். விசும்பல் ஒலி கேட்டு நான் ”நீ எந்தெடீ குட்டி கரையுந்நே?” என்றேன். அவள் தூ என்று தரையில் துப்பினாள். நான் அதன்பின் அவளைப் பார்க்கவில்லை. நாங்கள் மீண்டும் பங்களாவை அடைந்தபோது தோமா வாசலிலேயே நின்றான். ”இவளா? இவளை அந்நு சாயிப்பு சாட்டை கொண்டு அடிச்சானே”என்றான்.

தோமா சோதியை கூட்டிச்சென்று முற்றத்தில் வைத்தே அவளுடைய முண்டுகோந்தலையை அவிழ்த்து நிர்வாணமாக ஆக்கினான். அவள் தன் கையால் முலைகளை பொத்தியபடி கண்ணீருடன் என்னைப் பார்த்தாள். அவளுடைய பின்பக்கம் பருத்து இரு பலாக்காய்களை சேர்த்து வைத்தது போல் இருந்தது. தோமா அவள் புட்டத்த்¢ல் படீரென்று அடித்து ”போ போ” என்றாள். அவள் தயங்கி உள்ளே செல்வதற்கு முன் என்னை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

நான் வராந்தாவில் மீண்டும் கால் மடித்து அமர்ந்துகொண்டேன். தோமா பக்கவாட்டில் சென்று நின்று ஜன்னல் வழியாக உள்ளே பார்த்து சிரித்தான். திரும்பி என்னைப்பார்த்து வா வா என்று கைகாட்டினான். நான் எழுந்து தோமாவின் அருகே நின்றேன். உள்ளே துரை நிர்வாணமாக நின்று தரையில் அமர்ந்திருந்த சோதியின் முகத்தை தன் இடுப்புடன் சேர்த்து, அவள் தலைமயிரைப் பிடித்து இறுக்கி வேகமாக அசைத்தான். அவள் மூச்சுத்திணறி துடித்துக் கொண்டிருந்தாள்.

தோமா என்னிடம் பெரிய பற்களைக் காட்டி சிரித்தான். நான் பேசாமல் நின்றேன். கொஞ்ச நேரத்தில் துரை மாட்டுத்தோல் சாட்டையால் சோதியை அடித்துக்கொண்டே நரி குழறுவது போல ஏதோ சொன்னபடி அவளை துரத்தி வந்தான். அவள் முலைகள் குலுங்க ”என்றே தேவே…என்றெ தேவே”என்று அலறியபடி ஓடி வந்து முற்றத்தில் நின்றாள். நிர்வாணமாக வந்த துரை முற்றத்தில் துப்பி விட்டு உள்ளே போனாள். சோதி தரையில் குந்தி அமர்ந்து ஓங்கரித்து கோழையைத் துப்பினாள்.

தோமா அவளை தலைமுடியைப் பிடித்து தூக்கி சமையலறைக்குள் இழுத்துக் கொண்டு சென்றான். அவள் ”என்றெ தேவே என்றெ தேவே’ என்று சொல்லி அழுதுகொண்டிருந்தாள். அவன் உள்ளே சென்றதுமே அவளை கீழே தள்ளிப் போட்டு மேலே படுத்துக் கொண்டான். நான் அவன் செய்வதை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பழ உண்ணி கீழே இறங்கி வருவதைக் கண்டேன். அது அடுத்த மரம் நோக்கி வேகமாக ஓடிப்போய் ஏறிக் கொண்டது.

நிர்வாணமாக சோதி வந்து என்னிடம் அவளுடைய முண்டுதுணியை எடுத்து தரச்சொன்னாள். நான் எடுத்துக் கொடுத்ததும் அதை அவள் தோளில் முடிச்சிட்டு தற்றுடுத்துக் கொண்டாள். தோமா பீடி பற்ற வைத்தபடி உள்ளிருந்து வந்து ”இந்நாடீ , இதெடுத்தோ”என்றான். அவன் சுட்டிக்காட்டிய பெரிய சட்டியில் பழையசோறும் வான்கோழிக்கறியும் சேர்த்து கொட்டப்பட்டிருந்தது. சோதி அந்த சட்டியை எடுத்துக் கொண்டாள்.

நாங்கள் நடந்து செல்லும்போது அவள் தலைகுனிந்தே வந்தாள். நான் சட்டியை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். அவள் திரும்பியே பார்க்கவில்லை. முச்சலோடை அருகே வந்தபோது அவள் சட்டியை கீழே வைத்துவிட்டு முண்டுசுற்றை அவிழ்த்து கரையில் வைத்துவிட்டு நீரில் இறங்கினாள். அவளுடைய முலைகள் நீரில் மிதப்பதைப் பார்த்துக்கொண்டு இலஞ்சி மரத்து வேரில் அமர்ந்திருந்தேன். அவள் என்¨னைப் பார்க்கவில்லை. நீரில் இருந்தபடியே சேற்றுமண் எடுத்து பல் தேய்த்தாள். பிறகு எழுந்து வந்து என்னை தாண்டிச்சென்று உடையை எடுத்தாள். அவளை நான் திரும்பிப்பார்த்தபோது அவள் கூந்தல் புட்டத்தில் நீரைச் சொட்டிக்கொண்டிருந்தது.

சட்டென்று சோதி என்னை பின்னாலிருந்து வந்து அணைத்துக் கொண்டாள். அவளுடைய குளிரான கனத்த முலைகளை நான் என் முதுகில் உணர்ந்தேன். உடனே நான் அவளை திரும்பி தழுவிக்கொண்டேன். அவளுடைய கைகளும் கால்களும் என்னை இறுக்கிக் கொண்டன. அவள் என்னை ”நாயே நாயே” என்று திட்டிக்கொண்டும் என் முதுகை தன் நகங்களால் பிராண்டிக்கொண்டும் இருந்தாள். கடைசியில் என் தோளில் அத்தனை பற்களும் பதிந்து ரத்தம் வரும் அளவுக்கு கடித்தாள்.

பின்னர் நாங்கள் இருவரும் ஓடையில் இறங்கிக் குளித்தோம். இலவம்பஞ்சு வெடித்ததுபோல சிறிய வெண்பற்கள் காட்டி அவள் சிரித்து என் மீது வண்டலை வாரி வீசினாள். நான் குளித்தபின் என்னுடைய காக்கி நிக்கரையே மீண்டும் அணிந்துகொண்டேன். எனக்கு ஒரே நிக்கர்தான் உண்டு. அவள் எழுந்து தன் உடைகளை அணிந்து கொண்டு சட்டியை எடுத்தாள். என்னிடம் ”பயிக்கிணா?” என்றாள். எனக்குப் பசித்தது. ”ஆந்நே” என்றேன்.

அவள் ஒரு தேக்கிலையை பறித்து பரப்பி அதில் குழம்பு கலந்த பழைய சோற்றை போட்டாள். நான் வேகமாக தின்றேன். ”தோனே வேணுமா?” என்று கேட்டபோது தலையாட்டினேன். நானே எல்லா சோற்றையும் தின்றுவிட்டேன். அவள் சட்டியை ஓடையில் கழுவினாள். நான் ”நினக்கு நான் மானிறைச்சி தரும்”என்றேன். ”எப்போ?” என்றாள். ”நெலாவு கறுக்கும்போ…நாளையிலெ நான் ஆனை வேட்டைக்கு போகும்”என்றேன். அவள் என்னைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் இருந்துவிட்டு ”காரிக்கொம்பனையா?”என்றாள். ”ஓ” என்றேன்.

சோதி ”காரிக்கொம்பனுக்கு மலதெய்வம் மாதி துணையுண்டு….தீயுண்டை அவன்டெ மேலே கொள்ளுகில்ல”என்றாள். நான் மலைதெய்வங்கள் துரைகளைப் பார்த்தால் பயபப்டும் என்றேன். மலைதெய்வங்களெல்லாம் இப்போது மலைதாண்டி பாண்டிநாட்டுக்கு போய்விட்டன என்று தோமா என்னிடம் சொன்னான். சத்திய வேத தெய்வம் மட்டும்தான் இனி மலைகளுக்கு தெய்வம். அது துரைகளுக்குக் கட்டுப்பட்ட தெய்வம். அந்த தெய்வம் யானைகளுக்குக் காப்பு அல்ல. ஆகவே காரிக்கொம்பனை துரை கண்டிப்பாகக் கொல்வார்.

சோதி பேசாமல் எழுந்து சட்டியுடன் நடந்தாள். நான் அவள் பின்னால் சென்றேன். அவளை பின்தொடர்ந்து சென்று சத்தியவேத தெய்வத்தைப்பற்றி தோமா சொன்னதைச் சொல்ல விரும்பினேன். சோதியின் குழந்தைகளுக்கு தேன் கொண்டு கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பின்னர் நான் அந்த பழ உண்ணியைப்பற்றி நினைக்க ஆரம்பித்தேன்.

சோதியைவிட்டுவிட்டு நான் திரும்பி வந்தேன். தோமா சமையல் அறைக்குள் வாயை திறந்து வைத்து கனத்த குரட்டை விட்டுக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். நான் அவனைப்பார்த்தபின் மெல்ல உள்ளே போய் சட்டியை திறந்து மிஞ்சியிருந்த கோழிக்கறியின் துண்டுகளை எடுத்துத் தின்றேன். அதன்பின்னர் பங்களாவுக்கு வந்தேன். துரை உள்ளே குரட்டை விடும் ஒலி கேட்டது. நான் மெல்ல நடந்து உள்ளே சென்றேன்.

துரையின் மேஜைமீது நீலநிறமான வாத்துக்கழுத்து குப்பியில் சீமைச்சாராயம் இருந்தது. மெல்லிய கண்ணாடியால் ஆன கொக்குக்கால் கோப்பையில் கொஞ்சம் சாராயம் மிச்சம் இருந்தது. நான் சராயத்தை ஊற்றி நாலைந்து முறை குடித்தேன். பின் அந்தக் குப்பியில் இருந்தும் கொஞ்சம் குடித்தேன்.காட்டில் அம்மச்சிப்பலா அருகே பலாப்பழம் பழுத்து உதிர்ந்து அழுகி நாறுவது போல ஒரு இனிமையான குமட்டல் அதற்கு.

அதன் பின் மெல்ல உள் அறைக்குச் சென்றேன். அங்கே அந்த யானைத்துப்பாக்கி சுவரில் மாட்டப்பட்டு நின்றிருந்தது. அதை கையில் எடுத்துப்பார்த்தேன். பெண்ணின் கை போலவே மென்மையாக இருந்தது. அதன் குழாயில் என்னுடைய பிம்பம் சப்பிப்போய் தெரிந்தது. அதை திறந்து குழாய் வழியாக கண்ணை வைத்துப் பார்த்தேன். இரண்டு குண்டுகளை அதில் ஒரே சமயம் போட முடியும். குழாய்க்கு ஒரு குண்டு. அதன் வழியாக நான் ஜன்னலுக்கு அப்பால் தெரிந்த காட்டை பார்த்தேன். எனக்கு பாட வேண்டும் போலிருந்தது. எனக்கு சின்ன வயதில் என் தாத்தா சொல்லித்தந்த பாட்டை பாடினேன்.

கன்னங்கறுத்திட்ட பாறையாணே -ஓளே
பென்னம்பெரியொரு பாறையாணே
தும்பிக்கை உள்ளொரு பாறையாணே -ஓளே
அம்பரம் போலத்தே பாறையாணே…
[ 2 ]
மறுநாள் அதிகாலையில் நான் குளிருக்குள் எழுந்து தோமாவை எழுப்பினேன். அவன் என்னை ”புலையாடி மோனே” என்று திட்டியபடி எழுந்து சிலுவை போட்டபின்பு போய் அடுப்பில் ஒரு சில்லாட்டையை பற்றவைத்து காப்பிக்கு தண்ணீர் போட்டான். நான் சென்று துரையின் சப்பாத்துகளை எடுத்து வைத்தேன். அவற்றை நேற்றே பாலீஷ் போட்டு வைத்திருந்தேன். வராண்டாவில் நான் காத்து நின்றபோது தோமா கையில் பெரிய வெள்ளைத்தகரக் கோப்பையில் சூடான காப்பியுடன் சென்று துரையை எழுப்பினான். துரை தலைக்குமேல் கம்பிளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.

அவனருகே நின்று தோமா ”குட்மானிங்! குட்மானிங் !” என்று நிறைய தடவை சொன்னான். போர்வைக்குள் இருந்து துரை குழறலாக ஏதோ சொன்னான். தோமா அதற்கும் ”குட்மானிங்!” என்றான். துரை போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்து தோமாவின் கன்னத்தில் அறைந்தான். ”டாமிட் ஸ்டுபிட்….கண்ரி ·பூல்… ·பக் யுவர் ஆஸ்” என்று அவன் வழக்கமாகச் சொல்வதைச் சொன்னான். அடிபட்டபோதும் தோமா காபியை தளும்ப விடவில்லை. ”காபி சாய்பே”என்று பவ்யமாக நீட்டினான்.

துரை ஒன்றும் சொல்லாமல் காபியை ஊதி ஊதி குடிக்க ஆரம்பித்தான். தோமா அதற்குள் பக்கத்து அறைக்கு ஓடினான். துரை டீ குடித்த பின்னர் நிர்வாணமாக எழுந்து பின்பக்க அறைக்குச் சென்றான். அங்கே ஒரு மர முக்காலியில் ஓட்டை போட்டு வைத்திருந்தான். அதன் கீழே தோமா நாலைந்து தேக்கிலைகளை பரப்பி வைத்திருந்தான். துரை முக்காலியில் அமர்ந்து மலம் கழிக்க ஆரம்பித்தான். அப்போது தோமா அவனுக்கு பனையோலை போலிருந்த மென்மையான கூரிய கத்தியால் ஷேவ் செய்து விட்டான். முகத்தை தைலம்போட்டு துடைத்து முடித்த பின்னர் துரையின் பின்பக்கத்தை ஒரு பெட்டியில் இருந்து எடுத்த இலவம்பஞ்சால் நன்றாக நாலைந்து முறை துடைத்தான்

துரையை ஈரமான டவலால் தோமா துடைத்துவிடுவதை நான் பார்த்துக்கொண்டு நின்றேன். அந்த பங்களாவில் எல்லா கதவுகளும் மிக அகலமானவை. உயரமானவை. முன்வாசல் கதவை மட்டுமே இரவில் மூடுவார்கள். எல்லா அறையும் எல்லா இடத்திலும் தெரியும். துரை எழுந்து ஒரு மரத்தொட்டியில் தோமா கொண்டு வந்து வைத்த வெந்நீரால் தன் முகத்தையும் கைகளையும் அக்குளையும் கழுவிக்கொண்டான். அதன் பின் தோமா அவனை துடைத்தான்.

துரை தன் காக்கி கால்சட்டைக்குள் கால்களை நுழைத்து அதன் மீது நிறைய பைகள் தைத்த காக்கி சட்டையை அணிந்து உள்ளே செலுத்தினான். அப்போது அவன் ஒரு மரப்பொம்மை போல ஆகிவிட்டதாக எனக்குத் தோன்றியது. முழங்கால்களுடன்கூடிய பெரிய ரப்பர் சப்பாத்துக்களைப் போட்டபின் யானைத்துப்பாக்கியை எடுத்தான். அதன் குழாயை திறந்து உள்ளே கண்விட்டு பார்த்தான். சுவர் அடுக்குப்பெட்டியில் இருந்து சிறிய அலுமினியப்பெட்டியை எடுத்து அதில் இருந்த சிறிய கரிய புட்டியை எடுத்து திறந்தபோது எரியும் தைலமணம் எழுந்தது. அந்த கரிய குழம்பை பஞ்சில் தேய்த்து குச்சியில் பொருத்தி உள்ளே விட்டு இழுத்தான். அதே எண்ணைக்குழம்பை துப்பாக்கியின் விரல்வளையத்துக்கு உள்ளே இருந்த இடைவெளிவழியாக விட்டு உள்ளே இருந்த சிறிய சக்கரங்களில் பூசினான்.

என்னிடம் ” இவள் ரொம்ப அழகி இல்லையா?” என்று கேட்டு கண்ணைச் சிமிட்டினான். அப்போதுதான் துரை அந்த துப்பாக்கியை பெண்ணாக நினைப்பது எனக்குப் புரிந்தது. அதை மெல்ல முத்தமிட்டு விட்டு ”அவள் வெடி நிறைந்தவள்..”என்று என்னிடம் சொல்லி மடியில் கிடைமட்டமாக வைத்துக் கொண்டான். அதன் வளைவில் என் தோற்றம் ஒரு நிறமாக தெரிந்தது.

தோமா ரொட்டியும் பொரித்த கோழியும் பால் இல்லாத காபியும் கொண்டுவந்து பரிமாறிவிட்டு மணியை அடித்தான். துரை சாப்பிட ஆரம்பித்தபோது நான் பேசாமல் நின்றேன். துரை எனக்கு ஒரு ரொட்டித்துண்டை எடுத்து வீசினான். நான் அதைப்பொறுக்கி மண்போக ஊதிவிட்டு வேகமாக தின்றேன். அதற்குள் எனக்கு கோழித்தொடை ஒன்றை அவன் எறிந்தான். துரை சாப்பிட்டு எழுந்ததும் நான் வெளியே சென்றேன்.

எடை குறைவான பெரிய மரப்பெட்டியில் துரைக்கு தேவையான பொருட்கள் நான்குநாட்கள் முன்னரே எடுத்து வைக்கப்பட்டிருந்தன.மென்மையான காகிதங்களில் சுற்றப்பட்ட நன்றாக வெயிலில் உலர்த்திய ரொட்டிகள். டப்பாக்களில் காற்று புகாமல் அடைக்கப்பட்ட வெண்ணை. சாராயக்குப்பிகள். மாற்று உடைகள். இன்னும் ஒரு சப்பாத்து. கூடாரம் கட்டும் துணி என்று பலவகையான பொருட்கள். அவற்றை முறையாக உள்ளே அடுக்கவும் திருப்பி எடுக்கவும் என்னால் மட்டும்தான் முடியும்.

துரை தன் தோளில் மாட்டிய தோல்வார் கொண்ட கித்தான் பையில் வடக்குநோக்கி கருவி, பாட்டுபெட்டி ஆகியவற்றையும் துப்பாக்கிக்குரிய அலுமினியப்பெட்டியையும் புகையிலை டப்பாவையும் வைத்தான். தலையில் கட்டிக்கொள்ளும் விளக்குகள். கையில் பிடித்துக்கொள்ளும் விளக்கு ஆகியவையும் அவனிடம்தான் இருந்தன. என்னுடைய பெட்டிக்குள் பத்து பேட்டரிகள் மேலதிகமாக வைத்திருந்தேன். துரை ஒரு துவாலை பத்து கைக்குட்டைகள் ஆகியவற்றையும் எடுத்துக்கொண்டான். கழுத்தில் தூரநோக்கி குழாயை தொங்கவிட்டான். துப்பாக்கி தோளில் குறுக்காக தொங்கியது. இடுப்பில் கட்டப்பட்ட தோல்பட்டையில் ஒருபக்கம் தோலுறைக்குள் சிறிய கைத்துப்பாக்கியும் இன்னொரு பக்கம் குடிநீர் பையும் தொங்கின.அலுமியியத்தால் ஆன ஊன்றுகம்பு. அதை விரித்து குத்திவிட்டு முக்காலிபோல உட்கார்ந்தும் கொள்ளலாம். துரை தயாரானதும் தோமா கொண்டுவந்த இன்னொரு காப்பியை சூடாகக் குடித்துவிட்டு தன்னுடைய காக்கி நிறமான சட்டித்தொப்பியையும் வைத்துக்கொண்டான்.

நான் பெட்டியை என் தோளில் வார்களைப் போட்டு பின்பக்கம் தூக்கிக்கொண்டதும் நாங்கள் கிளம்பினோம். நான் முந்தைய நாளே நன்றாக கூர் தீட்டி வைத்திருந்த என்னுடைய நீளமான கத்தியை எடுத்துக் கொண்டேன். துரை படிகளில் கால் வைத்ததும் ”ஜீஸஸ்!”என்று சொல்லி சிலுவைக்குறி போட்டுக்கொண்டான். பங்களாவில் இருந்து இறங்கி இடுங்கலான பாதை வழியாக நாங்கள் காட்டுக்குள் நுழைந்தோம்.

காலைநேரத்தில் காடு தலைக்குமேல் பறவைகளின் ஒலியால் நிறைந்திருந்தது. இருட்டு விலகாத இலையடர்வின் உள்ளே இளமழை போல பனித்துளிகள் சொட்டின. நானும் துரையும் சில கணங்களிலேயே நன்றாக நனைந்து விட்டோம். குளிரில் என் உடம்பு சிலிர்த்து அசைந்து. துரை இருபக்கமும் பார்த்தபடி தனக்குள் ஏதோ முனகியபடி நடந்துவந்தான். துரை அவ்வளவு எளிதில் மூச்சுவாங்குவதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன். ஊரில் வாழ்பவர்கள் என்றால் சீராக மேடேறிச் சென்றுகொண்டே இருக்கும் இந்த ஒற்றையடிப்பாதையில் இதற்குள் மூச்சு திணறி நின்றிருப்பார்கள்.

காட்டில் அப்பகுதி முழுக்க காட்டிலந்தை, சீலாந்தி ,பெருநெல்லி, கொடுந்தை மரங்களும் தவிட்டைப்புதர்களும்தான். எவையுமே காயோ கனியோ கொட்டையோ தருவதில்லை. மேலே நெடுந்தூரத்துக்கு ஏறிய பின்பு காட்டுச்செடிகளின் அடர்த்திக்குள் சுழலிப்பாறை தெரிந்தது. பாறையின் வெடிப்பு வழியாக தண்ணீர் கசிந்து வழிந்தது. பாறையை அடைந்ததும் துரை மூச்சுவிட்டபடி சற்று அமர்ந்துகொண்டார். நான் பெட்டியை தரையில் வைத்துவிட்டு அமர்ந்து கொண்டேன். அப்போதெல்லாம் உடனடியாக தூங்கி விடுவேன். எனக்குதெரியாத எங்கெல்லாமோ சென்றுகொண்டிருந்துவிட்டு குரல் கேட்டதும் திரும்பி விடுவேன். அப்படி நான் போகும் இடங்களும் காடுகள்தான். ஆனால் நான் அங்கே நன்றாகவே ஆங்கிலம் பேசிக்கொண்டிருப்பேன்.

துரை ஒரு சுருட்டைப் பற்றவைத்தான்.சில நிமிடங்கள் ஆழமாக இழுத்துவிட்டு உடனே அதை குத்திஅணைத்து திரும்பி தன் இடுப்பு பைக்குள் வைத்துக் கொண்டபின் ”நேற்று அந்த பெண்ணை நீயா கூட்டி வந்தாய்?”என்றான். நான் ”அவள்தான் இருந்தாள்”என்றேன். ”அவளுக்கு நோய் இருக்கிறது. அவளை வரக்கூடாது என்று நான் சொல்லியிருந்தேன்…”என்றான். நான் ஒன்றும் சொல்லாமல் பார்த்தேன். ”பெருச்சாளி போல பார்க்காதே…இந்தியக் கறுப்புப் பெருச்சாளி… ”என்று சொல்லி துரை என் மீது ஒரு கல்லை எடுத்து எறிந்தான். ”கரடி போல நாற்றமடிக்கிறாள் அந்த வேசி…அவளை இனிமேல் கூட்டிவந்தால் உன்னையும் அவளையும் சுட்டுவிடுவேன்” துரை என் கண்களைப் பார்த்து ”டாமிட்”என்றான்.

மீண்டும் நாங்கள் கிளம்பி பாறைக்கு அப்பால் சரிந்து இறங்கும் காட்டுச்சாலையில் சென்றோம். அது யானைப்பாதை. அவ்வப்போது தேனெடுக்கும் காணிகளும் சென்றிருக்கலாம். மழைபெய்துகொண்டே இருப்பதனால் இலைகள் வளர்ந்து வழியை மூடியிருந்தன. சிலஇடங்களில் காட்டு ஈஞ்சையும் துடலியும் முள்கொடிகளை நீட்டியிருந்தன. அவற்றை வெட்டித்தள்ளி துரை வருவதற்கு வழிசெய்துகொடுத்தேன். துரை ஒரு செடியில் இருந்து பச்சைப்பாம்பு ஒன்றை சட்டென்று பிடித்தான். மிகவும் சின்ன பாம்பு. பச்சைநிறமான அரக்கால் செய்தது போல இருந்தது.

”பார் பச்சைக்கண்ணாடிக் குழாய் போல இருக்கிறது…”என்றான் துரை. அது அவன் பிடியில் நின்று நெளிந்து நாக்கை பறக்கச் செய்தது. அவனது முழங்கையில் வாலைச்சுற்றி வைத்துக்கொண்டது. நான் முன்னால் சென்றபோது பின்பக்கம் அந்த பாம்புடன் துரை மெல்ல ஏதோ சொன்னபடியே வந்து கொண்டிருந்தான். எனக்கு அந்த குரலை விட்டு கவனத்தை நீக்கவே முடியவில்லை. மெல்லமெல்ல என் பதற்றம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் நான் அவன் கையில் நெளியும் பாம்பைப்பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தேன்.

காட்டுக்குள் ஈரம் உலர்ந்து நீராவி எழ ஆரம்பித்தது. எனக்கு வியர்த்துக் கொட்டியது நான் நவரப்பச்சிலைகளைப் பறித்து மென்று சாற்றைக் குடித்து சக்கையை உமிழ்ந்து தாகத்தை தணித்துக்கொண்டு நடந்தேன். துரை தன் புட்டியில் இருந்து தண்ணீர் குடித்துக் கொண்டான். பாதையைக் கடந்து சென்ற கொடி காட்டுகும்பளம் என்று கண்டதும் நான் அதை தொடர்ந்துசென்று ஒரு கும்பளக்காயை பறித்தேன். அதன் சாறைக் குடித்து முடித்ததும் என்னுடைய தாகம் முழுமையாக நீங்கியது.

நாங்கள் மீண்டும் அமர்ந்தபோது துரை என்னிடம் ” இவள் நல்ல நடனக்காரி இல்லையா?”என்றான். பச்சைப்பாம்பு அதன் வாயைத்திறந்து மூச்சுக்காக ஏங்கியபடி எரியும் கயிறு போல முறுகியது. துரை அதை கீழே போட்டு தன் சப்பாத்தால் அதன் தலையை அழுத்தி தேய்த்தான் அதன் வால் தீயின் நாக்கு போல துடிதுடித்து சப்பாத்தின் பக்கவாட்டு ரப்பரில் அறைந்தபின் மெல்ல சொடுக்கிச் சொடுக்கி அசைவிழந்தது. துரை மீண்டும் அந்த எஞ்சிய சுருட்டை பற்றவைத்து இழுத்தான்.

நாங்கள் மீண்டும் கிளம்பி சுண்டுமலை நோக்கிச் சென்றோம். காட்டுக்குள் வெயில் கண்ணாடிக்குழாய்கள் போலவும், திரைசீலைகள் போலவும், காட்டருவி போலவும், பெரிய அடிமரங்கள் போலவும், சில இடங்களில் வெள்ளைச் சுவர் போலவும் விழுந்துகிடந்தது. வெயில் காற்றில் ஆடுவதைக் காட்டில்தான் காணமுடியும். இலைகள் மீது விழுந்த பச்சைநிற ஒளிவட்டங்கள் காற்றில் குளத்து நீரின் ஆம்பல் இலைகள் போல அலையடித்தன. வெயில் எங்கள்மீது அடிக்கவில்லை என்றாலும் நன்றாக புழுங்கியது. குளிர்ந்த காற்று மேலே பட்டபோது மெல்ல புல்லரித்தது.

மதிய உணவுக்கு என்று துரை ஒரு சிறிய ஓடையின் கரையில் நின்றான். ஓடையில் தெளிந்த நீர் பாசிபடிந்த உருளைப்பாறைகள் நடுவே சத்தமேதும் இல்லாமல் சாரைப்பாம்பு போல வழுக்கிச் சென்றுகொண்டிருதது. தண்ணீர் தேடி வந்த காட்டுச்செடிகள் நீரை நோக்கி அடர்ந்து வரம்பிட்டிருந்தன. பாறைகள் நடுவே கொக்குக்கால் விரல்கள் போல ஏராளமான வேர்கள் தெரிந்தன. துரை ஒரு பாறை மேல் அமர்ந்து கொண்டான்

நான் என் வாளுடன் காட்டுக்குள் புகுந்தேன். ஒரு நீளமான மூங்கிலை வெட்டி நுனியைச் செதுக்கி அதன் மீது என் இடுப்பில் இருந்து கூரிய ஈட்டிநுனியை எடுத்து ஒருமுறை பாறையில் தேய்த்துவிட்டு இறுகப்பொருத்தினேன். ஈட்டியுடன் தழைகள் நடுவே மெல்ல மெல்ல ஊர்ந்துசென்றேன். என்னை ஒரு சிறுத்தையாகக் கற்பனை செய்துகொண்டேன். சிறுத்தை செல்லும்போது மண் அதிரக்கூடாது. புல் அலையக்கூடாது. சிறுத்தை, மீன் நீரில் செல்வது போல காட்டுப்புதருக்குள் செல்லக்கூடியது

புதருக்குள் என் எதிரே நான் ஒரு மானைக்கண்டேன். கொம்பு விரியாத கேழைமான். அது படுத்திருந்த இடத்தில் இருந்தே என்னுடைய வாசனையைக் கேட்டு காதுகளை என்கப்பக்கமாக குவித்து முன்னங்காலை தூக்கி வைத்தது. என்னை அது பார்த்து உடல்சிலிர்த்து எழுவதற்குள் நான் ஈட்டியை எறிந்தேன். ஈட்டியுடன் அது பாய்ந்து ஒரு மரத்தில் முட்டி விழுந்து குளம்புகளை உதைத்துக் கொண்டது. நான் ஓடிச்சென்று அதை நெருங்கி ஈட்டியை பிடுங்கி அதன் இதயத்தைப்பார்த்து இருமுறை குத்தினேன். உடைந்த கருங்கல்சில்லு போல ஈரம் மின்னிய கரிய கண்களால் அது என்னைப் பார்த்தது. நேற்று நான் சோதியின் மேலே முரட்டுத்தனமாக இயங்கிகொண்டிருந்த போது அவள் கண்கள் அப்படித்தான் இருந்தன என்று தோன்றியது. அவளுக்கு உச்சம் வந்தபோது அந்த மானைப்போலத்தான் உலுக்கிக் கொண்டு தொண்டை கமறும் ஒலியை எழுப்பினாள். அதன் பின் அவள் கண்கள் அப்படித்தான் மெல்ல இமை மூடின

நான் அந்த மானை அங்கேயே போட்டு என் வாளால் அதன் தோலை உரித்தேன். சதையில் இளஞ்சூடும் துடிப்பும் இருந்துகொண்டே இருந்தது. தொடை நரம்பை வெட்டியதும் ரத்தம் என் கைகளை நனைத்தது. இதயத்தை வெட்டி எடுத்தபோது ஊற்றுபோல ரத்தம் என் மீது பீரிட்டு அடித்தது. தொடைச்சதைக¨ளையும் மார்புச்சதைகளையும் எலும்பு இல்லாமல் போதிய அளவு வெட்டி எடுத்து பரப்பிய தேக்கிலை மீது வைத்திவிட்டு கீழே கிடந்த கமுகுப்பாளை ஒன்றை எடுத்து பையாகக் கோட்டி அதில் இறைச்சியை நிறைத்து எடுத்துக்கொண்டு ஓடைக்கரைக்கு வந்தேன்.

காட்டில் எப்போதும் ஓடைக்கரையில்தான் காய்ந்த விறகு கிடைக்கும். ஓடைவழியாகச் சென்றபோது பாறைகள் ஓடையை திசை திருப்பிய இடத்தில் நீரில் வந்து மட்கி உலர்ந்த சுள்ளிகளும் மரங்களும் சிக்கி இருந்தன. உலர்ந்த மரங்களைப் பொறுக்கிக் கொண்டுவந்து குவித்தேன். தேக்கிலையில் மான்கறியை நன்றாக பொட்டலங்களாகக் கட்டி அதை ஓடையில் எடுத்த களிமண்ணில் பொதிந்து உருட்டி உருளைகளை அடுக்கி விறகு போட்டு தீயை மூட்டினேன். காட்டுக்குள் சென்று இலைகளை ஆராய்ந்து காய்ச்சிலைக் கண்டுபிடித்து, அதன் கொடியை தூக்கி வேரைக் கண்டுபிடித்து, கிழங்கை தோண்டி எடுத்து கொண்டுவந்து தீயில் போட்டேன்.

தீயருகே அமர்த்து கொண்டு கிழங்குகளையும் இறைச்சி உருண்டைகளையும் புரட்டிப்போட்டு சுட்டேன். களிமண் சிவந்து கருகியதும் உருட்டி எடுத்து ஓரமாக வைத்தேன் மூன்று உருண்டைகளைக் கொண்டுசென்று துரை அருகே தேக்கிலையில் வைத்தேன். துரை அதை சிறிய கல்லால் உடைத்தான். உள்ளிருந்து வெந்த வாசனையுடன் மானின் நெய் வழிந்தது. கறி உருகி வெந்து வெண்மை கொண்டிருந்தது. துரைக்கு என் பெட்டியில் இருந்து உலர்ந்த ரொட்டி வில்லைகளையும் சாராயக்குப்பியையும் எடுத்துக் கொண்டு சென்று வைத்தேன். அவன் மானிறைச்சியின் நெய்யில் உலர்ந்த ரொட்டியை தோய்த்து கடித்து மென்று தின்ன ஆரம்பித்தான்.நடுநடுவே சாராயத்தையும் ஓரிரு வாய் குடித்தான்.

துரைக்கு உப்பில்லாத கறி பிடிக்கும். எனக்கு கொஞ்சம் உப்பும் மிளகாயும் தேவைப்படும். வரும் வழியிலேயே காந்தாரி மிளகாய் பறித்து வைத்திருந்தேன். என்னிடம் எப்போதுமே உப்பு இருக்கும். மிளகாயையும் உப்பையும் சேர்த்து பாறையில் வைத்து இடித்து பசையாக ஆக்கி வைத்துக் கொண்டேன். காய்ச்சில்க்கிழங்கை உடைத்து சூடாக பிய்த்து எடுத்து மான்கறியில் கலந்து பிசைந்து உப்புமிளகாயில் தொட்டுக்கொண்டு தின்றேன். என்னால் இரண்டு இறைச்சி உருளைகளை மட்டுமே தின்ன முடிந்தது. துரை இன்னும் ஒரு இறைச்சி உருளை கேட்டான்.

துரை சுருட்டை தீயில் மீண்டும் பற்றவைத்து இழுத்தான். நான் தண்ணீர்விட்டு அதை அணைத்துவிட்டு ஓடையில் தண்ணீர் அள்ளி குடித்துவிட்டு புறப்பட ஆயத்தமாக என் பெட்டியை நன்றாக மூடி கட்டி அதன் வார்களை தோளில் மாட்டியபடி அமர்ந்திருந்தேன். மிஞ்சிய எட்டு இறைச்சி உருளைகளை பாளைப்பையில் போட்டு கையில் எடுத்துக் கொண்டேன். துரை ஏப்பம் விட்டு துப்பியபடி எழுந்ததும் நானும் பெட்டியுடன் எழுந்துகொண்டேன்.

நாங்கள் மெல்லமெல்ல இறங்கி சென்றுகொண்டே இருந்தோம். சுண்டுமலையின் உச்சி மரங்களுக்கு மேல் சாய்ந்த வெயிலில் ஒளிவிட்ட மடம்புகள் மடக்குகளுடன் தெரிந்தது. அதன் ஒருபக்கம் மழைநீர் வழிந்த கரிய தடம். மேலே நீல வானத்தில் இரண்டு மேகப்பொதிகள் மாபெரும் வெண்முயல்கள் போல நின்றன. முயல்களின் காதுகளைக்கூட பார்க்க முடிந்தது.

மலையை நோக்கிச் சென்று கொண்டே இருந்தோம். மலை நாங்கள் எத்தனை நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அங்கேயே இருந்தது. காட்டுக்குள் மெல்லமெல்ல வெளிச்சம் அணைய ஆரம்பித்தது. பறவைகளின் ஒலிகள் கனத்து ஒலித்தன. வானத்தில் கூட்டம் கூட்டமாக கொக்குகள் மேற்கு நோக்கிச் சென்றன. குளத்தில் பரல்மீன்கூட்டம் செல்வதுபோல் இருந்தது. கொசுக்கள் புகைப்படலம் போல பறந்துவந்து எங்கள் முகங்களில் அப்பின. துரை துப்பிக்கொண்டே இருந்தான்..

காட்டுக்குள் இருட்டு கனத்துக்கொண்டே வந்தது. அப்போதும் சுண்டுமலை தூரத்தில்தான் இருந்தது. அதன் மேல் இன்னொரு பெரிய மேகம் வந்து படிந்து தன் சிறகுகளைத் தாழ்த்தி அமர்ந்திருந்ததைக் கண்டேன். வவ்வால்கள் கலைந்து, சிவந்த ஒளி பரவிய வானத்தில் பறக்க ஆரம்பித்தன. பலவகையான பறவைகள் பெரிய கலவர ஒலியுடன் கூடணைந்த மாபெரும் அயனி மரம் ஒன்றை தாண்டிச்சென்றோம். அதன் கீழே பறவை எச்சத்தின் காரவாசனை நிறைந்திருந்தது.

காட்டுக்குள் ஒரு தட்டையான பாறையைக் கண்டதும் துரை அங்கே தங்கலாம் என்று சொன்னான். நான் மேலே ஏறி இடம் பார்த்தேன். பெட்டியில் இருந்து கூடாரத்துணியையும் கயிறுகளையும் ஆணிகளையும் எடுத்தேன். பாறை இடுக்குகளில் ஆணியை கல் வைத்து அறைந்து இறுக்கியபின்னர் அவற்றில் கயிறு கட்டி இறுக்கி கூடாரக்காம்பை நிறுத்தினேன். கூடாரத்துணியை விரித்து அந்தக் காம்புகளில் இறுகக் கட்டி இழுத்து கூடாரத்தை நிற்கச்செய்தேன். உள்ளே மெத்தைவிரிப்பை போட்டு பக்கவாட்டு துணிகளையும் தொங்கவிட்டேன். ஊரும் பூச்சிகள் உள்ளே செல்லாமலிருக்க பக்கவாட்டு கித்தானை நன்றாக மடித்து உள்ளே செருகினேன். கூடாரம் தயாராகும் வரை துரை பாறைமேல் மல்லாந்து படுத்திருந்தான். அவனருகே யானைத்துப்பாக்கி படுத்திருந்தது.

துரை கூடாரத்துக்குள் சென்று பார்த்துவிட்டு தன்னுடைய உறக்கப்பையை எடுத்து உள்ளே போட்டுக்கொண்டான்.நான் காட்டுக்குள் போய் பெரிய உலர்ந்த மரங்களை தூக்கி வந்து போட்டு தீ பொருத்தினேன். காட்டுக்குள் இருந்து இருட்டு வந்து எங்களைச் சூழ்ந்துகொண்டது. இருட்டுக்குள் தீ புலியின் நாக்கு போல சிவப்பாக எரிந்து புகை விட்டு வெடித்து கங்குகளை மேல் நோக்கி உமிழ்ந்து நெளிந்தது. பெட்டியில் இருந்து மெல்லிய கம்பியை எடுத்து தீயின் இருபக்கமும் நட்ட மரத்துண்டுகளில் கட்டி அதில் அலுமினிய கெட்டிலை தொங்கவிட்டேன்.

துரை வந்து தீயருகே அமர்ந்துகொண்டான். நான் என்னிடமிருந்த இறைச்சி உருளைகளை அவனுக்குக்கொடுத்தேன். அவன் அதை வாங்கி உடைத்து அதில் உலர் ரொட்டியை தோய்த்து தின்றான். புட்டியில் இருந்த சாராயத்தை தீயில் லேசாக காட்டி அதனுள் இருந்து ஆவி கிளம்பியதும் அந்த ஆவியுடன் சேர்த்தே குடித்தான். நான் டீயை வெள்ளைத்தகரப் போணியில் ஊற்றி கொடுத்ததும் சாராயத்தை அந்த டீயில் விட்டு ஊதி ஊதிக் குடித்தான்.

நான் உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்தபோது துரை ஏதோ கேட்டான். நான் விழித்து புன்னகைசெய்தேன். ”நீ அந்த வேசியைக் கொண்டு சென்று அவள் கிராமத்தில் விட்டாய் அல்லவா?”என துரை கேட்டான். நான் அதற்கு பேசாமல் பார்த்தேன். சட்டென்று துரை எழுந்து என்னை ஓங்கி உதைத்தான் ”நீ அவளை அனுபவித்தாய்…நீ அவளை அனுபவித்தாய்..நீ என் நாய்…நீ என் நாய்”என்று கூவியபடி நாலைந்து முறை உதைத்தான்

நான் பக்கவாட்டில் சரிந்து விழுந்து அந்த உதைகளை என் விலாவிலும் தோளிலுமாக வாங்கிக்கொண்டேன். துரை என் மீது துப்பிவிட்டு திரும்பி கூடாரத்துக்குள் சென்றுவிட்டான். நான் எழுந்து தீயை நன்றாக தூண்டி விட்டுக் கொண்டேன். தீயருகே என் உடலைக் காட்டிக்கொண்டு அமர்ந்தேன். வானில் கரிய பரப்பில் நட்சத்திரங்கள் மொட்டுகள் போல தெரிந்தன. அவற்றில் இருந்து நுண்மையான மழைபோல குளிர் என் மீது கொட்டியது. என் முதுகில் குளிரும் மார்பில் கனலும் இருந்தன. நான் தீ¨யையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு தூங்கிவிட்டேன்.

[ 3 ]

மறுநாள் காலை நான் இருட்டுக்குள்ளேயே எழுந்து கங்குவிட்டிருந்த தீயை தூண்டி எரியவிட்டுவிட்டு கெட்டிலுடன் பக்கத்துகோடைக்குச்சென்று குச்சி ஒடித்து பல்தேய்த்து மலம்கழித்துவிட்டு கெட்டிலில் தண்ணீர் அள்ளி வந்து தீயில் தொங்கவிட்டுவிட்டு கூடாரத்துக்குள் சென்று துரையை எழுப்பினேன். எழுந்ததுமே அவன் என்னை அடிப்பான் என எண்ணி நான் காத்து நின்றாலும் அவன் என்னை வெறித்துப் பார்த்துவிட்டு பற்களைக் காட்டி ”குட்மானிங்”என்றான். நான் அவனை பேசாமல் பார்த்தேன். ”நீ ஒரு மிருகம்…” என்று அவன் சொன்னான். நான் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. ”டீ இருக்கிறதா?”என்றான். நான் ஆமாம் என்றேன்

துரை எழுந்து வெளியே வந்து சோம்பல் முறித்தான். இரு முறை கொட்டாவி விட்டபின் நேராகச் சென்று தீயருகே அமர்ந்துகொண்டான்.நான் அவனுக்கு டீ கலந்து கொடுத்தேன். ”என் பிராந்தியை எடுத்துவா”என்று அவன் சொன்னான். அதில் கொஞ்சத்தை டீயில் விட்டு குடித்தான். பின்னர் எழுந்து யானைத் துப்பாக்கியை மட்டும் எடுத்துக்கொண்டு அவனே நடந்து காட்டுக்குள் சென்றான் நான் அவன் பின்னால் சென்றேன். அவன் துப்பாக்கியை தரையில் வைத்துவிட்டு ஒரு சிறிய பாறைமீது ஏறி அமர்ந்து மலம் கழித்தான். என்னைப்பார்த்து கண் சிமிட்டினான். நான் அவனுக்கு துடைத்துவிட்டதும் அவன் எழுந்து ஓடையில் இறங்கி வாயைக் கொப்பளித்து கழுத்தையும் முகத்தையும் கழுவிக்கொண்டான்.

தலைக்குமேல் பறவைகள் கலைந்து கூச்சலிட்டுக்கொண்டிருந்த காலையில் மங்கலான ஒளியில் காட்டுச்செடிகளின் இலைகள் எல்லாம் தெளிவான பச்சை நிறம் கொண்டிருந்தன. எங்களை தாண்டி ஒரு பெரிய மிளா உடல்முழுக்க சருகுகள் ஒட்டியிருக்க திமிர் தெரியும் தசையசைவுகளுடன் சென்றது. துரை அதை நோக்கி துப்பாக்கியைக் குறி வைத்தான். சுடுவதற்காக அல்ல என்று தெரிந்தது. சாய்வாக காட்டுக்குள் விழுந்த இளவெயிலில் காடு தூள்பாசியும் நூல்பாசியும் நிறைந்த நீர் கொண்ட ஒரு பச்சைநிறத் தடாகம் போல தெரிந்தது. உள்ளே இறங்கிய வெயிலில் இலைகள் பளபளவென அ¨சைவதை நான் கனவுகளிலும் கண்டிருக்கிறேன்.

ஒருமுறை அமர்ந்து சுருட்டு பிடித்துவிட்டு எழுந்து மீண்டும் நடந்தோம். துரை ஒரு நவர இலையைப் பறித்து ”இதை நான் சாப்பிட முடியுமா?”என்றான். ”இதை சாறு மட்டும்தான் குடிக்கவேண்டும். சக்கையைத் தின்றால் பேதி போகும்”என்றேன். ”உனக்கு ஆங்கிலம் பேச வருகிறதே”என்றான். நான் ஒன்றும் சொல்லவில்லை.

சுண்டுமலை அருகே தெரிய ஆரம்பித்தது. அதன் சிகரத்துக்கு விலாவில் இருந்த காடு அதன் மடக்குகளுக்குள் கசிந்து பசுமையாக இறங்கியிருந்ததையும் மரங்கள் சிறிய புற்பூண்டுகள் போல தெரிவதையும் கண்டேன். கூர்ந்து கவனித்தபோது மலைப்பாறையில் ஒரு மடிப்புவழியாக தலைவகிட்டில் பேன்கள் செல்வது போல வரையாடுகள் செல்வதைக் கண்டேன். துரை என்னிடம் ”என்ன?”என்றான். நான் வரையாடுகளைச் சுட்டிக் காட்டினேன். துரை தன் துப்பாக்கியை தூக்கி அந்த ஆடுகளை விளையாட்டாகக் குறி வைத்தபின் என்னை நோக்கி கண்களைச் சிமிட்டினான்.

நாங்கள் பாதை இல்லாதபடி வளர்ந்து கிடந்த யானைப்புல் பரப்பை வந்தடைந்தோம். உள்ளே செல்லவேண்டுமானால் புல்லை சரித்து பாதையை உருவாக்க வேண்டும். நான் ஒரு பெரிய குச்சியை எடுத்து புல்லை அடித்து சரித்து வகிடு எடுத்து அதன் வழியாக சென்றேன். காலில் சதுப்புச்சேறு மிதிபட்டது. யானைப்புல்லின் விளிம்பு பட்டு என்னுடைய உடலெங்கும் கீறல்கள் விழுந்தன. சில கீறல்களில் ரத்தம் கசிந்து எரிந்தது.

நான் முதலில் வாசனையை உணர்ந்தேன். துரைக்கு கையைக் காட்டினேன். துரை அப்படியே சிலை மாதிரி நின்றான். மிகமெல்ல துப்பாக்கியை திருப்பி அதன் கட்டையை தன் அக்குள்சதைமேல் வைத்துக்கொண்டு விசையில் விரலை நுழைத்தான். தரையில் மண்டியிட்டு முன்னால்சென்று நான் யானைப்பிண்டத்தைக் கண்டடைந்தேன். சிலமணி நேரம் முந்திய பிண்டம் அது. சக்கையின்மீது இருக்கும் சாணிப்பசை உலர ஆரம்பித்துவிட்டிருந்தது. இன்னும் சிலமணி நேரத்தில் அதில் வண்டுகள் துளைபோட்டு முட்டை போட்டிருக்கும். பிண்டத்தின் அருகே இருந்த யானையின் காலடித்தடங்களைப் பார்த்தேன்.

துரை அருகே வந்து ”அதுதானா?”என்றான். நான் சைகையால் ஆமாம் என்றேன். அந்த அளவுக்கு அகலமான இடைவெளியுள்ள வேறு யானைக் காலடித்தடம் காட்டுக்குள் வேறு இல்லை. துரை அருகே வந்து அந்த காலடித்தடத்தை கூர்ந்து நோக்கினான். நான் அந்த பிண்டத்தை காலால் புரட்டிப்பார்த்தேன். ஈஞ்சைச்சக்கையாக இருந்தது. சுண்டுமலையின் தென்புறம் ஈஞ்சைக்காடு அடந்திருக்கும். இரவு அங்கே தங்கிவிட்டு காலையில் அங்கிருந்து இங்கே வந்திருக்கிறது. வெயில் ஏறிவிட்டதனால் திரும்பி ஈஞ்சைக்காட்டுக்கே சென்றிருக்கும். நான் அந்த புல்லடர்வு முழுக்க ஊடுருவி வேறு பிண்டங்கள் கிடக்கின்றனவா என்று பார்த்தேன். கொம்பன் ஒற்றையானை. அது இருக்கும் இடத்தில் பிற யானைகள் வராது. மதம் கொண்டு இளகும்போது மட்டுமே அது பிடியானைகளை தேடி பிறயானைப்பற்றங்களுக்குச் செல்லும்.

”இப்போது எங்கே இருக்கும் அது?” என்று துரை கேட்டான். ”ஈஞ்சைக்காடு…”என்று நான் சொன்னேன். ”அங்கே முள் அடர்ந்திருக்கும். இங்கே திறந்த வெளி இருக்கிறது. இங்கேயே தங்குவோம். காலையில் இங்கே வரும்…”என்று துரை சொன்னான். ஆனால் அங்கே மரங்கள் ஏதும் இல்லை. நேரடியாக வெட்டவெளியில் நின்று யானையை எதிர்கொள்வது சிரமம். நான் அதைச் சொல்லவில்லை. துரையே ஊகித்துக் கொண்டு தன் துப்பாக்கி¨யை காட்டி கண்களைச் சிமிட்டினான்.

கொம்பனின் பிண்டத்தை அள்ளி சதுப்புக்குழியில் இருந்த நீரில் கலக்கி உடல்மீது தெளித்துக் கொண்டோம். சுருட்டு பிடிக்கக்கூடாது. சாராயம் குடிக்கக்கூடாது, ரொட்டி இறைச்சியை தின்பதும்கூட சரியில்லைதான். ஆனால் நான் எஞ்சிய இறைச்சி உருண்டையை உடைத்து கொடுத்தேன். நான் இரண்டு உருண்டை தின்றேன். துரை மிஞ்சிய நான்கு உருண்டைகளை தின்றான்.

நாங்கள் புல்நடுவே அமர்ந்துகொண்டோம். எங்கள்மேல் தவளைகள் எம்பிப் பாய்ந்தன. கண்ணாடிவிரியன் இருக்கக்கூடும் என்று நான் மோப்பம் பிடித்துக்கொண்டே இருந்தேன். கொசுக்கள் எங்கள் மேல் பரவி போர்வை போல ஒட்டிக்கொண்டன. துரை துப்பிக்கொண்டே இருந்தான். துவாலையால் முகத்தை மூடி அவை மூக்குக்குள் போவதை தடுத்தான்.

இருட்டிக்கொண்டே வந்தது. நட்சத்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தன. மேற்குவானில் சரிபாதிப் பிறைநிலவு எழுந்துவந்தது. ஒரு தும்மல் ஒலியை அருகே கேட்டேன். பெரிய மிளா ஒன்று என்னருகே நின்று என்னை உற்று பார்த்தது. அதன் கண்களின் மெல்லிய மினுமினுப்பைக் கண்டேன். அது மீண்டும் தும்மியது. துரை ”முட்டாள் மிருகம்”என்று சொன்னான்.மிருகங்களில் முட்டாளே இல்லை.

துரை அமர்ந்தவாறே தூங்க ஆரம்பித்து பின்னர் முழங்காலைக் கூட்டிவைத்து நன்றாகவே தூங்கிவிட்டான். அவன்மேல் கொசுக்கள் ரீங்காரமிட்டன. நான் தூங்காமல் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டு நிறைய விஷயங்களை நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். என்னுடைய அம்மாவைப் பற்றியும் என் ஊரான நெடுமங்காட்டைப்பற்றியும் நினைத்தேன். சிறு வயதில் அம்மா ·ப்ளெட்சர் துரையின் வீட்டில் சமையல்செய்தாள். அப்போதுதான் நான் பிறந்தேன். என்னை சிறு வயதில் என் மலைக்குடியில் காட்டுபூனை என்று அழைத்தார்கள். அப்போது என் கண்கள் நீலமாகவும் என்னுடைய தோல் கறுப்பாகவும் இருந்தது. பிறகு என் கண்கள் ஓநாயின் கண்கள் போல ஆகிவிட்டன.

என் அம்மாவுக்கு சீக்கு வந்து உடம்பெல்லாம் புண் ஆகியபோது நான் அம்மா சொன்னதைக்கேட்டு பிளெட்சர் துரையிடம் பணம் கேட்கச் சென்றேன். அவர் என்னை ”போ போ”என்று சொல்லி திட்டி குடையை என் மீது எறிந்தார். அம்மா செத்துப்போனபிறகு நான் சிம்ஸன் தோட்டத்தில் வேலைக்குச் சென்றேன். அங்கே நான் காட்டிலேயே இருந்தேன். என்னுடன் எவருமே பேசுவதில்லை. செந்நாய் கண்கள் கொண்டவன் தீய தெய்வங்களுக்கு நெருக்கமானவன் என்று சொன்னார்கள். நான் தீய தெய்வங்களைக் கண்டதேயில்லை.

முதல்முறையாக நான் செந்நாயைக் கண்டபோது அது என்னை அடையாளம் கண்டுகொள்ளும் என்று எதிர்பார்த்தேன். முப்பத்திரண்டு வருடம் முன்பு காரிமலைக்காட்டுக்குள் நான் புதருக்குள் குந்தியமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது அது என்னருகே மிக நெருங்கி வந்திருந்தது. நான் அதன் சீறல் கேட்டு கண்விழித்தேன். மாலைநேர மஞ்சள் வெளிச்சத்தில் அதன் தேங்காய் நிறமான பிடரிமுடி சிலிர்த்து நிற்பதைக் கண்டேன். கண்கள் என்னை விழித்துப்பார்த்தன. வாயை திறந்து கரிய ஈறுகளில் வெண்ணிறப்பற்கள் தெரிய ர்ர்ர் என்றது. நான் மெல்ல கையை என் இடுப்பில் இருந்த கத்தியை நோக்கிக் கொண்டுசென்றேன். அது பாய்ந்து ஓடி புதருக்குள் வால் சுழற்றி தாவி மறைந்தது. புதருக்குள் இருந்த மேலும் பல செந்நாய்கள் அதைத்தொடர்ந்து ஓடின.

காலையில் நன்றாக குளிர ஆரம்பித்தது. நான் கைகளை என் வெற்றுடல் மேல் கட்டி இறுக்கிக் கொண்டேன். வானத்தில் நட்சத்திரங்கள் இடம்மாறிவிட்டிருந்தன. கீழ்வானில் வெள்ளி தெரிந்தது. எனக்கு நன்றாகவே பசித்தது. ஆனால் அப்போது எதையாவது உண்பதைப்போல முட்டாள்தனம் ஏதுமில்லை. அப்போது நான் நிலம் அதிர்வதை உணர்ந்தேன். காற்று மறு திசைநோக்கி வீசியதனால் மோப்பம் கிடைக்கவில்லை. ஆனால் அது நல்லதுதான் எங்கள் மோப்பமும் அதற்குக்கிடைக்காது.

நிலம் அதிர்வது நெருங்கிவந்தது. நான் எழுந்து பார்த்தபோது இருளுக்குள் கொம்பனின் உயரமான மத்தகத்தைப் பார்த்தேன். செம்மண் மீது கொன்றைப்பூக்கள் உதிர்ந்து கிடந்தன. துதிக்கை மடிப்புகளில் மண் வரியடித்து உலர்ந்த சேறூ வெடித்தது போல் இருந்தது. தோணி போன்ற இரு பெரும் தந்தங்களும் கீழ் நோக்கி சரிந்திருந்தன. துரையை மெல்ல உலுக்கினேன். அக்கணமே அவன் விழித்துக்கொண்டு தோளில் சரிந்த துப்பாக்கியை சரியாகப்பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தான்.இருவரும் யானையைப் பார்த்தபடி அசையாமல் நின்றோம்.

துரை துப்பாக்கியை யானையின் மத்தகத்தை நோக்கி நீட்டி குறி வைத்தான். அந்தக் கணங்கள் மிகமெல்ல அடிவயிற்றை தரையில் ஒட்டி தவழ்ந்து முன்னேறும் புலி போல நீண்டன. என்ன செய்கிறான் என்று நான் வியந்தேன். அவன் மீண்டும் மீண்டும் குறி பார்த்தால். கண்முன் நிற்கும் யானையைச் சுடுவதற்கு ஏன் கிளையில் அமர்ந்த பறவையைச் சுடுவதற்கு பார்ப்பதுபோல் குறியை தீட்டிக் கொள்கிறான்? அவன் விரல்கள் துப்பாக்கிக் கட்டையில் நடுங்கியபடி பற்றியிருப்பதைக் கண்டேன். அவன் மனம் பதறுகிறது என்று ஊகித்தேன்.

மலைதெய்வமான மாதி காட்டுக்குள்ளேயே மிகவும் தலையெடுப்புமிக்க யானைமீது அமர்ந்திருப்பாள் என்று குடிகளில் சொல்வார்கள். சின்னஞ்சிறு குழந்தைகள் மட்டுமே அவளைப் பார்க்க முடியும். மாதி துரையின் கைகளை பிடிக்கிறாளா? துரை இதயம் உடைந்து விழுந்து ரத்தம் கக்கி செத்துப்போகப்போகிறானா? நான் அவனையே பார்த்தேன். என் இதயம் துடித்து வாய்க்குள் அதன் அதிர்வு தெரிந்தது.

துரையின் விரல் விசையை அழுத்தியதும் துப்பாக்கியின் பூட்டு விடுவித்துக்கொண்டு ‘லிலிக்’ என்றது. அந்த ஒலியிலேயே கொம்பனின் காதுகள் நின்றன. அதன் மத்தகம் திரும்பி எங்களைப் பார்த்தது. கண்களை சந்திக்க முடியவில்லை. காதுகளை அசையாமல் நிறுத்தி அது எங்களைப் பார்த்தது. ஒரு பெரும் காட்டுபாறை உயிர்கொண்டு என்னைப் பார்ப்பது போல உணர்ந்தேன். பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்பே இருந்து கொண்டிருக்கும் பாறை. தெய்வங்கள் பிறப்பதற்கு முந்திய பாறை.

ஆனால் கொம்பன் அசையவில்லை. முன்னால் வரவும் இல்லை. துரை சில அடிகள் பின்னால் நகர்ந்தான். அவன் முதுகில் சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது. கன்னங்களில் வியர்வை வழிந்தது. நெற்றியில் நீல நரம்பு புடைத்தது. கொம்பன் மீண்டும் காதுகளை ஆட்டிக்கொண்டு புல்லை பிடுங்கி சுழற்றி தன் முன்வலதுகாலில் அடித்து மண் களைந்து, வாழைப்பூ போல தொங்கிய வாய்க்குள் போட்டு மெல்ல ஆரம்பித்தது

துரை பெருமூச்சு விட்டான். பின்னர் ஒரு அடி முன்னால் வைத்தான். நான் யானையையே பார்த்துக்கொண்டிருந்ததனால் என்னருகே யானைத்துப்பாக்கி செவி பிளக்க வெடித்த ஒலியில் திடுக்கிட்டு அதிர்ந்தேன். என் செவிகளில் தேனீ ரீங்காரம் ஒலித்தது. யானை திகைத்து நின்றது அதன் முன்காலுக்கு மேல் குண்டுபட்ட இடத்தில் சிவந்த குழி உருவானதைக் கண்டேன். பாறை பிளக்கும் ஒலியுடன் பிளிறியபடி கொம்பன் எங்களை நோக்கி ஓடி வந்தது.

நான் துரையை நோக்கி ”ஓடுங்கள்…”என்று கூவியபடி யானையை நோக்கி ஓடினேன். துரை பின்பக்கமாக விலகி ஓடினான். நான் யானையை நோக்கிச் சென்று அதனிடம் ”ஹோ!”என்று கை நீட்டி ஆர்ப்பரித்தபின் வலப்பக்கமாக திரும்பி புல்லை ஊடுருவி வெறி பிடித்தவன் போல ஓடினேன். கொம்பன் பிளிறியபடி என்னை துரத்தி வந்தது.

யானையை மனிதன் ஓடி வெல்லமுடியாது. இன்னும் சில கணங்களில் எனக்கு ஒரு மரம் கிடைத்தாக வேண்டும். மரம் மரம் மரம் என்று என்னுடைய மனம் எண்ணிக்கொண்டிருக்க நான் ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரு பெரிய பலா மரம் என்னை நோக்கி வந்தது. அதில் கனத்த கொடிவள்ளிகள் அடர்ந்து பின்னி மேலேறியிருந்தன. நான் போனவேகத்திலேயே அதைப்பற்றி மேலேறி மூன்றாமடுக்கு கிளைக்குச் சென்றுவிட்டேன். என் உடலெங்கும் புல்க்கீறல்களும் முள்க்காயங்களுமாக ரத்தம் கசிந்தது. என் உடலில் வியர்வை ஆவி பறந்தது. நான் வாயாலும் மூக்காலும் காதுகளாலும் மூச்சு விட்டேன். என் நெஞ்சு உடைந்து விடுவது போலிருந்தது

யானை மரத்தருகே வந்து ஆவேசமாக மரத்தில் மத்தகத்தால் முட்டியபோது மரம் அதிர்ந்து மேலிருந்து சருகுகள் அதன் மேல் உதிர்ந்தன. அதன் வலதுகால் முழுக்க ரத்தம் சேறாக குமிழிகளுடன் வழிந்திருப்பதைக் கண்டேன். மறுபக்கம் துரை ஒரு பாறை மீது கைகளை ஊன்றி ஏற முயன்றுகொண்டிருந்தான். துப்பாக்கியுடன் அவன் ஓடியதனால் ஏற முடியவில்லை. துப்பாக்கியை உதறிவிட்டு ஓட அக்கணம் அவனால் எண்ண முடியவில்லை.

என்னைப்பிடிக்க முடியாது என யானை புரிந்துகொண்ட வேகம் என்னை ஆச்சரியம் கொள்ளச்செய்தது.நானறிந்து எந்த யானையும் அபப்டி சிந்தனைசெய்ததில்லை. அது திரும்பி புல்கூட்டத்தை மிதித்து ஒரு பிளவை உருவாக்கியபடி துரையை நோக்கிச் சென்றது. துரையை பிடித்துவிடுமென தெரிந்ததும் நான் கூவியபடி பலாமரத்தில் இருந்து குதித்து கீழே கிடந்த கற்களை எடுத்து யானைமேல் வீசினேன். யானை நின்று வால் சுழலத் திரும்பி வெறியுடன் என்னை நோக்கி வந்தது.

நான் மீண்டும் பலா மரத்தில் ஏறிக்கொண்டேன். யானை என் மரத்தின் அடியில் வந்து நின்றபோது வெம்மையான குருதி வீச்சத்தை நான் உணர்ந்தேன். யானை மரத்தில் சாய்ந்து அடிபட்ட காலை தூக்கியபடி நின்றது. துதிக்கை மலைப்பாம்பு போல மாபெரும் தந்தங்கள் மேல் ஏறி சறுக்கியது. அந்த தந்தங்களுக்காகத்தான் துரை வந்திருக்கிறான். தெந்திருவிதாங்கூரிலேயே பெரிய தந்தங்களாக அவை இருக்கும். துரையின் யானை இல்லாத நாட்டில் ஏதோ சீமாட்டியின் பெரிய நிலைக்கண்ணாடியின் இருபக்கமும் அது இருக்கும். இரண்டு வெள்ளைக்கார வேலைகாரர்களைப்போல.

நான் மூச்சு அடங்கி என் உடல் எரிச்சலை உணர்ந்தபடி யானையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அது மெல்ல எழுந்து மேலே துதிக்கை நீட்டி என்னை பிடிக்க முயல்வது போல அல்லது என்னிடம் எதையோ சொல்ல முயல்வது போல நுனியை அசைந்தது. கைக்குழந்தையின் சிவந்த வாய் போன்ற துதிக்கை முனை.

கொம்பன் மெல்ல திரும்பி வாலைச் சுழற்றியபடி புல்லுக்குள் சென்று மறைந்தது. அது போன பாதை புல்லில் தெரிந்தது. மேலே மரக்கிளைகள் விரிந்த இருண்ட காட்டுக்குள் சென்றதும் அது ‘ப்பாய்ய்ங்’ என்ற ஒலியை எழுப்பியது. காட்டிலெங்கோ ஒரு பாறை அதை எதிரொலி செய்தது. சற்று தள்ளி மீண்டும் அந்த பிளிறல் எழுந்தது.

துரை பாறை மேல் இருந்து கைகாட்டி என்னை அழைத்தான் ”ஊமைச்செந்நாயே…” நான் கையைத் தூக்கிக் காட்டியபடி இறங்கி அவனை நோக்கிச் சென்றேன். யானை எங்கள் பெட்டியை எதுவும் செய்யவில்லை. துரையும் இறங்கி என்னை நோக்கி வந்தான். ”…மிருகம்…தப்பிவிட்டது…”என்றான் துரை. ”பூட்டின் ஒலியை கேட்டு அது திரும்பாவிட்டால் இந்நெரம் மண்டை பிளந்திருக்கும்”

துப்பாக்கியபோட்டுவிட்டு அவன் பெட்டியிலிருந்து சாராயத்தை எடுத்து நேரடியாகவே மடமடவென குடித்தான். ஏப்பம்விட்டு தலையைக் குனிந்தான். இருமுறை ஆவியை உமிழ்ந்தான். ”ஜீஸஸ்!” என்று தலையை உலுக்கினான். நான் பெட்டியை மூடி நன்றாகக் கட்டினேன்.

”அதை விடக்கூடாது. அது அதிக தூரம் போயிருக்காது. சீக்கிரமே அதன் ரத்தம் தீர்ந்துவிடும்…”என்றான் துரை. ”அது சிந்திக்கிறது…”என்றேன். ”டாமிட்”என்றான் துரை. ”நாம் அதைபின் தொடர்ந்து செல்கிறோம்…ரத்தத்தைப்பார்த்தே அது போனவழியை கண்டுபிடிக்க முடியும்…”

நான் ஒன்றும் சொல்லாமல் பெட்டியை எடுத்துக்கொண்டேன்.

[ 4 ]
நாங்கள் சென்ற வழி முழுக்க சிறிய கட்டிகளாக ரத்தம் கையேந்தி நின்ற இலைகள் மீது கொட்டியிருந்தது. ரத்த வாசனையை வைத்தே தடம் பார்த்துச் செல்ல முடிந்தது. ஒரு நுணா மரத்தில் கொம்பன் சாய்ந்து நின்றிருக்க வேண்டும். அந்த மரத்தடியில் ரத்தம் கொட்டி தாமரையிலகளின் வடிவில் கிடக்க அதன் மேல் படலம் உருவாகி சிறிய பூச்சிகள் வந்து சுற்றிப்பறந்து கொண்டிருந்தன.

”அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் ஓடும்…எப்போது அதன் ரத்தம் வற்றி உடல் தளர்கிறதோ அப்போது விழுந்து கிடக்கும்…”என்றான் துரை. நான் அவனைப்பார்த்துவிட்டு முன்னால் சென்றேன். அந்த யானை வெறும் மிருகம் அல்ல என்றும் அதற்கு நாங்கள் பின் தொடர்ந்து வருவோம் என்றும் தெரியும் என்றும் சொல்ல விரும்பினேன். அந்த யானை இந்நேரம் எங்களை எதிர்பார்த்து அதற்கு மிக வசதியான இடத்தில் நின்றிருக்கும். ஆனால் நான் சொல்லவில்லை. என் சொற்கள் பெரும்பாலும் உதடுகளுக்கு வருவதில்லை.

”நீ ஒரு ஆங்கிலேயனைப்போன்ற இயல்புகொண்டவன்…..”’என்றான் துரை. நான் திரும்பி அவனைப்பார்த்தேன். ”நீ எப்போதும் எதையும் சொல்வதில்லை. ஆனால் நீ நினைப்பது என் கண்ணுக்கே தெரிகிறது..”

அவன் சொல்ல வருவதென்ன என்று எனக்குப் புரியவில்லை. துரை, ”நீ இரவில் என் துப்பாக்கியை எடுத்துப் பார்த்தாய்…அதை நான் கண்டேன் என்பதை இப்போதுதான் நினைவுகூர்ந்தேன். அது கனவு போல் இருந்தது…இப்போது நான் சுடும்போது நீ என் துப்பாக்கியைப் பார்த்ததை எண்ணிப்பார்த்தேன். உந்னால் ஒரே பார்வையிலேயே என் துப்பாக்கியின் விசையைப்பற்றியும் குண்டுபோடும் முறையைப்பற்றியும் புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது என்று தெரிந்தது…உன் அம்மாவைப்புணர்ந்த அந்த வெள்ளையன் உனக்குள் அந்த அறிவை அளித்திருக்கிறான்”

நான் பேசாமல் நடந்தேன். துரை பேசியபடியே என் பின்னால் வந்தான் ”ஆனால் நீ ஒரு நாய்..ஆங்கிலேயன் ஒருபோதும் ஒருபோதும் அடிமையாக இருப்பதில்லை. அதை நீ மறந்துவிட்டாய். நீ என் காலை நக்கும் ஒரு நாய் மட்டும்தான். உன்னுடைய செந்நாய்க்கண்களைப் பார்க்கும்போதெல்லாம் உன் தலையை குண்டுகளால் சிதறடிக்க எனக்கு வெறி வருகிறது…” துரை மூச்சிரைத்தான் ” நீ ஆங்கிலேயரை உன் இருப்பின் மூலமே அவமானம்செய்கிறாய்…கடவுளே! உன்னைக்கொல்ல நான் எத்தனை தூரம் விரும்புகிறேன் தெரியுமா?”

நான் அவன் ஏறி வருவதற்காக காத்து நின்றேன். ”இந்த துப்பாக்கியை நீ தொடக்கூடாது…இனி இந்த துப்பாக்கி மேல் உன் கைபட்டால் நான் உன் மூளையை சிதறடிப்பேன்… கண்டிப்பாக அதைச் செய்வேன்” என்றான். மேலே ஏற நான் கை கொடுத்தேன். ”நீ வெள்ளைப்பெண்ணை எப்போதாவது புணர்ந்தாயா?” நான் ஒன்றும் சொல்லவில்லை ”சொல்லித்தொலை ஊமைச்செந்நாயே..உன்னை கொல்லும்படிச்செய்யாதே” நான் இல்லை என்றேன். ”உன் கண்களைப்பார்த்தால் அவர்கள் கூப்பிடுவார்கள். நீ எப்போதாவது வெள்ளைப்பெண்ணுடன் படுத்தாய் என்று தெரிந்தால் நான் உன்னை தேடிவந்து கொல்வேன்…”

பெரிய வேங்கைமரத்து வேர்கள் பரவி சிறிய இறக்கத்தில் மௌனமாக இறங்கினேன். பள்ளத்தில் நின்று கூர்ந்து பார்த்தேன். ரத்தம் சொட்டியிருந்தது குறைந்திருந்தது. ஆங்காங்கே சில இலைகளில் கருஞ்சிவப்பு முத்துக்கள் மட்டுமே தென்பட்டன ”நீ எனக்கு தேவைபப்டுகிறாய்… இல்லையேல் உன்னைக்கொல்வதே எனக்குக் கொண்டாட்டம்”என்றான் துரை. நான் வாயில் கைவைத்து காட்டினேன். அவன் துப்பாக்கியை தோளில் ஏற்றிக்கொண்டான். ”நீ மனதுக்குள் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறாய். அதை எங்களிடமிருந்து மறைக்கவே நீ பேசுவதே இல்லை…முட்டாள். முட்டாள்தனமான ஊமைச்செந்நாய்”என்று பல்லைக்கடித்தபடி அவன் கிசுகிசுத்தான்

நான் என் கைகளை ஊன்றி கிட்டத்தட்ட தவழ்ந்து முன்னே சென்றேன். புதர்களுக்கு அப்பால் மண் மீண்டும் மேலேறிச்சென்றது. மேட்டில் இரு பாறைகள் இணைந்து நிற்கும் யானைகள் போல் நின்றன. அதற்கு அப்பால்தான் என்று எனக்கு தெளிவாகப்புரிந்தது. நான் மெல்லமெல்ல காலடி எடுத்து வைத்து பின்னால் வந்தேன். கைநீட்டி ”அங்கே” என்றேன்.

”எங்கே?”என்று துரை கிசுகிசுத்தான். ”அந்த இரு பாறைகளுக்கு நடுவே…” என்றேன். அவன் உடனே அதைப்புரிந்துகொண்டான். ”அது ஒரு சாத்தான்…சாத்தான்தான் மிருக வடிவில் வந்திருக்கிறது… மிருகங்கள் ஒருபோதும் இப்படிச்சிந்திப்பதில்லை! ”என்றான். துப்பாக்கியின் எட்டும் தொலைவுக்குள் எங்கே சென்றாலும் மேட்டில் இருந்து யானை வேகமாக கீழே பாய்ந்துவந்து தாக்கமுடியும். நாங்கள் பின்ன்வாங்க வேண்டுமென்றால் எங்களுக்குப் பின்னால் உள்ள மேட்டில் ஏற வேண்டும். அதற்குள் அது எங்களைப்பிடித்துவிடும்.

”மேலே ஏறிக்கொள்வோம்…”என்றபடி துரை பின்பக்க மேட்டில் ஏறிக்கொண்டான். ”இப்போது செய்யக்கூடியது ஒன்றுதான்..பொறுமைச்
சீட்டாட்டம்…” என்றான் துரை ”வா… வேசிமகனே..வா விளையாடுவோம்”என்று பாறைக்கு அப்பால் நின்ற கொம்பனை நோக்கிச் சொல்லிவிட்டு வேர்மீது ஏறி அமர்ந்துகொண்டான். துப்பாக்கியை தோள்மேல் ஏந்திக்கொண்டான்.

துப்பக்கிக்குண்டுத் தொலைவுக்கு அப்பால் இரு பாறைகளும் மிக அமைதியாகக் காத்து நின்றன. இப்பால் துரை மெல்லிய குரலில் வைதுகொண்டும் துப்பிக்கொண்டும் காத்திருந்தான். நேரம் சென்றுகொண்டே இருந்தது. பொறுமை விளையாட்டில் மிருகங்களை வெல்ல எந்த மனிதனாலும் முடியாது என்று சொல்ல நான் விரும்பினேன்.

துரை துப்பாக்கியை தோள்மாற்றினான். ”உன்னை ஏன் உன் குடிப்பெண்கள் மணந்துகொள்வதில்லை?” என்றான். நான் பாறையையே பார்த்துக்கொண்டிருந்தேன். ”உன் கண்களைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் அல்லவா?” நான் பாறையை விட்டு கண்களை எடுக்கவில்லை.

நெடுநேரம் கழித்து துரை ”ஜீஸஸ்..இது என்னைக் கொல்கிறது”என்றான். ”என் பிராந்தியை எடு” நான் பிராந்தியுடன் ரொட்டியையும் அவனுக்குக் கொடுத்தேன். அவன் ரொட்டியைத் தின்று பிரந்தியைக் குடித்தான். அவன் முகம் வெந்த சீனிக்கிழங்கு போல சிவந்தது. மூக்கு காரட்கிழங்கு போலிருந்தது.

இரவுக்கு முன்னால் யானை வெளியே வந்தாக வேண்டும். இருளில் யானைக்கு ஆயிரம் கண்கள். இருட்டிவிட்டதென்றால் மரங்களில் ஏறி அமர்ந்து இரவைக் கழிக்க வேண்டியதுதான். உணவும் மதுவும் எல்லாம் இன்னும் மூன்றுநாட்களுக்கு இருந்தன. இத்தனை சீக்கிரம் கொம்பனைக் காண்போமென நான் எதிர்பார்க்கவில்லை. சுண்டுமலைக்கு அப்பால் தெற்குக்காட்டில் பலாமரங்கள் அதிகம். அங்கேதான் இருக்கும் என்று எண்ணியிருந்தேன்.

காட்டுக்குள் ஒலிகள் மாறுபட ஆரம்பித்தன. நிழல்கள் எங்களை நோக்கி சரிந்து வந்தன ”சாத்தானுக்குப் பொறுமை அதிகம்…”என்றான் துரை. துப்பி விட்டு கைகளை உரசிக் கொண்டு மீண்டும் துப்பாக்கியை எடுத்தான். ”சரி, இப்போது ஒரே வழிதான். நீ முன்னால்செல்…அதை கூப்பிடு”என்றான்

கீழே உருளைக்கற்களும் சருகுகளும் நிறைந்த பள்ளம். அது மழைக்காலத்தைய ஓடைகளில் ஒன்றாக இருக்கலாம். அதில் நான் ஓடித்தப்ப முடியாது. நான் துரையை கூர்ந்து நோக்கினேன். துரை என்னை நோக்கி துப்பாக்கியை திருப்பினான் ”போ…இல்லாவிட்டால் உன்னைச் சுடுவேன்…கண்டிப்பாகச் சுடுவேன்…”

நான் அவனுடைய கண்களைப் பார்த்து ஒரு கணம் நின்றபின் மெல்ல பள்ளத்தில் இறங்கினேன். பாறைகளில் என் கால்கள் இடறின. கொடிகளில் பாதங்கள் பின்னிக்கொண்டன. நான் ஒவ்வொரு உறுப்பாலும் மேலே நின்ற யானையைப் பார்த்தபடி முன்னால் சென்றேன். துப்பாக்கியின் எல்லை வரும்வரை என் பின்னால் வந்தபின் துரை நின்றுகொண்டான். ”ம்ம் போ”என்றான். நான் மேலும் முன்னகர்ந்தேன். என் கால்கள் மிகமிகக் கனமாக இருந்தன

நான் பக்கவாட்டில் ஓடி தப்பிவிட்டாலென்ன என்று எண்ணியதுமே துரை ”ஓடினால் உன்னைச் சுடுவேன்… நீ தப்பிவிட்டாலும்கூட எல்லா காட்டுக்கும் ஆளனுப்பி உன்னை பிடித்துவந்து சுடுவேன்…”என்றான்.

நான் மெல்லமெல்ல முன்னேறினேன். பாறைக்கு அப்பால் ஒரு அசைவு நிகழ்வதை என் காது கேட்கவில்லை, சருமம் கேட்டறிந்தது. ”ம்ம்..போ…மேலே போ”என்றான் துரை. நான் மேலும் முன்னால்சென்றேன். எனக்குப் பின்னால் துரை துப்பாக்கியின் பூட்டை விடுவித்தான். அப்பால் யானையின் காதுகள் நிலைக்கின்றன என்று அறிந்தேன்.

நான் எதிர்பார்த்து நின்ற அக்கணத்தில் காட்டுமரம் சரியும் ஓலம் போல பிளிறியபடி கொம்பன் துதிக்கையை தூக்கிச் சுழற்றிப் பாய்ந்து என்னை நோக்கி வந்தது. நான் உறைந்து போய் அது வருவதை அணுஅணுவாகப் பார்த்தபடி நின்றிருந்தேன். பின்னர் என் உடல் தசைகள் எல்லாம் துடிக்க திரும்பி ஓட முயலவும் கூழாங்கல்லில் கால் தடுக்கி விழுந்து விட்டேன். அதே கணத்தில் துப்பாக்கி வெடித்து காட்டுக்குள் பல இடங்களில் எதிரொலி முழங்கியது.

யானை பிளிறியபடி அதே வேகத்தில் வந்து முன்காலை மடித்து முன்னால் விழப்போயிற்று. கனத்த கொம்புகள் நிலத்தில் ஊன்றின. துரை மீண்டும் சுட்டான். யானை பக்கவாட்டில் சரிந்து விலா மண்ணில் அழுந்தி மறுபக்கம் வயிறு புடைத்தெழ விழுந்து துதிக்கையையும் இரு கால்களயும் உதைத்துக்கொண்டது.

நான் எழுந்து யானையை நெருங்கினேன். அது என்னைக் கண்டதும் பிளிறியது. துதிக்கை அடிபட்ட மலைப்பாம்பு போல புழுதியில் புரண்டு நெளிந்தது. பின்னங்கால் மட்டும் நீண்டு அதிர்ந்துகொண்டிருந்தது. கொம்பனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அதன் மத்தகம் வழியாக மண்ணில் சொட்டியது. அதன் அசைவுகள் அடங்குவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

பின்பக்கம் ”செந்நாயே..”என்று துரையின் குரல் கேட்டது. கையில் துப்பாக்கியுடன் கோணலான புன்னகையுடன் துரை நெருங்கி வந்தான் ”பயமுறுத்தப்பட்டால் நீ மிகவும் தைரியமாகச் செயல்படுகிறாய்…”என்றான். யானையை நெருங்கி அதன் மீது தன் சப்பாத்துக்காலைத்தூக்கி வைத்தான். யானையின் வயிற்றிலும் துதிக்கை நுனியிலும் மெல்லிய அசைவு மிச்சமிருந்தது. அதன் கண்கள் மெல்ல மூடிக்கொண்டிருந்தன, அந்த விழிகள் கரிய உடலுக்குள் மெல்லமெல்ல புதைந்து மறைவதுபோல் உணர்ந்தேன்.

துரை அதன் தந்தங்ளை துப்பாக்கியால் தட்டிப்பார்த்தான்.”அனேகமாக இதுதான் இந்தியாவிலேயே பெரிய யானைத்தந்தம்”என்றான். ”ஆப்ரிக்க யானைகளின் அளவுக்கே பெரியது…. ஆமாம், இது ஒரு மன்னன். யானைகளில் ஒரு மன்னன்” என்றான். யானையின் முன்னங்கால் மேல் அமர்ந்துகொண்டு தன் ஒரு சப்பாத்தைக் கழற்றினான்.

”மிகப்பெரியது…கன்ன எலும்பைப்பார்த்தால் எண்பது வயதுகூடச் சொல்லலாம். மூத்தவர்”என்றான் துரை என்னிடம். நான் அவன் கண்களிலும் புன்னகையிலும் மகிழ்ச்சியே இல்லாததைக் கவனித்தேன். அதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பெரிய வேட்டையை கொன்றதும் ஏமாற்றம் வந்துவிடுகிறது. ஏனென்றால் அதற்குமேல் வேட்டையாட ஏதுமில்லை. ஆனால் அது மட்டுமல்ல. மிருகம் எப்போதுமே சாவின்மூலம் மனிதனை வென்றுவிடுகிறது. வேறு ஒரு உலகைச்சார்ந்ததாக ஆகிவிடுகிறது. அதை மகத்தானதாகவும் பெருந்தன்மை மிக்கதாகவும் நாம் நினைக்க ஆரம்பித்து விடுகிறோம் என்று சிம்ப்ஸன் பெரிய துரை ஒருமுறை சொன்னார். புலி ஒன்றைக்கொன்றபின் அவர் அதனருகே நின்று பிரார்த்தனை செய்துகொண்டே கண்ணீர் விட்டார்.

துரை என்னிடம் ”நான் புதருக்குள் விழுந்துவிட்டேன். என் தொப்பியை எடுத்துவா ”என்றான்’என் உடம்பெங்கும் முள்” நான் புதரை நோக்கிசென்றேன். துடலிமுள் அடர்ந்த குட்டையான புதருக்குள் துரையின் தொப்பி கிடந்தது. அதை எடுக்கச்சென்றபோது என் மூக்கு அதிர்ந்தது. கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டு துரையை நோக்கி திரும்பினேன்.

துரை யானைமீதிருந்து எழுந்து கையை ஆட்டி ஏதோ சொல்ல முயன்றான். துப்பாக்கி நழுவி கீழே விழுந்தது. அவன் வாய் இழுத்துக்கொண்டது. அவன் கழுத்து அறுபட்ட கோழி போல நடந்து, சில அடி தூரம் முன்னால் வந்து, குப்புற விழுந்தான். நான் அவனை நோக்கி ஓடி அவன் சப்பாத்துகளை உருவி எடுத்தேன். அவன் சப்பாத்துக்கு சற்றுமேல் கண்ணாடிவிரியனின் கடித்தடம் இருந்தது.

நான் இடையில் வைத்திருந்த ஈட்டி நுனியால் அந்த இடத்தை கிழித்தேன். பிளந்து ரத்தம் கொட்டிய காயத்தை அழுத்திப்பிழிந்தபின்னர் காட்டுக்குள் ஓடினேன். இலைகளுக்குள் முழந்தாளிட்டு துழாவியபடி வெறியுடன் அலைந்தேன். கைநீலி செடியைக் கண்டுபிடித்ததுமே கைநிறைய இலைகளைப் பறித்துக்கொண்டு வேகமாக ஓடிவந்தேன். அந்த இலைகளில் ஒரு தளிரை வாயிலிட்டு பார்த்தேன். என் குடல்கள் வரை கடும் கசப்பு பரவி உடல் அதிர்ந்தது.

பச்சிலையைக் கசக்கி வெட்டுக்காயத்தில் சாற்றைச் சொட்டினேன். பலா இலையைக் கோட்டி அதில் பச்சிலையைச் சாறு பிழிந்தேன் கிட்டித்துவிட்டிருந்த துரையின் வாயை ஈட்டி நுனியால் நெம்பித்திறந்து உள்ளே சாற்றை செலுத்தி வாயில் வாய் வைத்து ஊதி உள்ளே புகுத்தினேன். கண்களிலும் மூக்கிலும் காதுகளிலும் பச்சிலைச்சாற்றை செலுத்தியபின் துரையை திருப்பிப்போட்டு எஞ்சிய சக்கையை அவன் குதத்துக்குள் செருகினேன்.

துரையின் ரத்தம் கெட்டிப்படாமலிருக்க அவன் கைகால்களை மடக்கி நீட்டியபடி இருந்தேன். கைகால்கள் இறுகியபடியே வந்தன. பின்னர்மெல்ல அவை இலகுவாயின. துரையின் மூக்கு வழியாக கொஞ்சம் கரிய ரத்தம் வந்தது. வெட்டுக்காயத்தில் வழிந்த ரத்தம் கரிய பசையாகவும் தெளிந்த நீராகவும் பிரிந்து வெட்டுக்காயம் மாங்காய் பிளந்தது போல வெளிறி தெரிந்தது. மீண்டும் பச்சிலை கொண்டுவந்து துரைக்குக் கொடுத்தேன்.

மெல்ல துரையின் இமைகளில் அசைவை உணர்ந்தேன். அது பிரமையா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஆனால் இமை மெல்ல மெல்ல துடித்து பிளவு விட்டு வெண் விழிகாட்டி பின்பு திறந்துகொண்டது. ”தண்ணீர்…தண்ணீருக்குள்…ஆழம்”என்றார் துரை. அவன் பார்வை தண்ணீருக்குள் இருப்பது போல அலையடிக்கிறது என்று தெரிந்து கொண்டேன். மீண்டும் கண்களில் இரு சொட்டு பச்சிலையை விட்டேன். துரை ”கப்பலில்…ஒரு ஸீகல்..கப்பல்…ஆனால் நீ என்னை…”என்றான். அவன் உதடுகள் துடித்துக்கொண்டே இருந்தன ”நான் வந்துவிடுவேன்…பெரியம்மை ஜீஸஸ்”என்று உளறிக்கொண்டிருந்தான்

சட்டென்று தீபட்டவன்போல துடித்தெழுந்து தன் துப்பாக்கிக்காக கை நீட்டினான். நான் துப்பாக்கிகளை ஏற்கனவே எடுத்து அகற்றியிருந்தேன். அவன் என்னிடம் ”நான் உன்னைக் கொல்வேன் ஊமைச்செந்நாயே…”என்றான். வரண்ட வாயில் நான் மீண்டும் சாற்றை பிழிந்தேன் ”… இது மிகவும் தித்திப்பானது”என்று நக்கினான்.கண்களை மூடிக்கொண்டான்.

இரு சடலங்கள் போல யானையும் துரையும் மண்ணில் கிடந்தார்கள். யானையின் ரணத்தில் சிறிய பூச்சிகள் வர ஆரம்பித்து விட்டிருந்தன. நான் பெட்டியில் இருந்து துணியை எடுத்து யானை ரத்தத்தில் தோய்த்தபின் சிறிய கிழிசல்களாக ஆக்கிக்கொண்டேன்.

துரை மீண்டும் கண்விழிந்த்தபோது சோர்வாகவும் தெளிவாகவும் இருந்தான். மெல்லிய குரலில் ”எந்த இடம்?”என்றான். ”காடு”என்றேன். அவன் கையை ஊன்றி எழுந்து கொண்டான். தலை சுழன்றதனால் மீண்டும் படுத்தான் ”எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது…” என்றான். நான் அவனுக்கு பச்சிலைச்சறு பிழிந்து சேர்த்த தண்ணீர் கொடுத்தேன்.”இனிக்கிறதா?”என்றேன்.

”கொஞ்சம்…” என்றான். ”இன்னும் விஷம் போகவில்லை…” என்றேன். துரை ”என் தலை சுழல்கிறது”என்றான் ”உங்கள் ரத்தத்தில் பாதி நீராக மாறிவிட்டது…இனி நீங்கள் நன்றாக ஆவதற்கு ஒரு வருடம்கூட ஆகும்…” என்றேன்

துரை முழுபலத்தாலும் எழுந்து அமர்ந்துவிட்டான். ”இங்கே இருக்கமுடியாது…இன்னும் சற்று நேரத்தில் செந்நாய்களும் நரிகளும் வந்துவிடும்” நான் ”ஆம்”என்றேன். ”என்னைப் பிடித்துக்கொண்டு மெல்ல நடந்தால் போய்விடலாம்…”

”கிளம்புவோம்”’என்றான் துரை. பெட்டியை நான் சுமக்க முடியாது என்பதனால் அதை நன்றாக மூடி தூக்கி ஒரு மரத்தடியில் வைத்தேன். துரைக்கு ஒரு கம்பு வெட்டி ஊன்றிக்கொள்ளக் கொடுத்துவிட்டு யானைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு நடந்தேன். துரை ஒரு கையை என் தோளில் வைத்து மறுகையில் குச்சி ஊன்றி மெல்ல நடந்தான்

”நாம் அதிக தூரம் வந்துவிடவில்லை, நல்ல வேளை…”என்றேன். யானை ரத்தம் தோய்ந்த கிழிசல்துணிகளை செடிகளில் கட்டியபடி நடந்தேன். சிலநாட்களுக்குப் பின்னர் ஒரு வேட்டைநாய் துணையுடன் வேலையாட்களுடன் வந்து தந்தங்களை எடுத்துக் கொண்டு போகலாம்.அழுகிய சதையில் இருந்து தந்தங்களை வெட்டிஎடுப்பது எளிது. யானையின் உடலில் சிறு பகுதிதான் அப்போது மிஞ்சியிருக்கும்.
[ 5 ]
இரவாகும் வரை நாங்கள் நடந்தோம். துரை ஒன்றும் பேசாமல் உரக்க மூச்சுவிட்டபடி, அவ்வப்போது ”ஜீஸஸ்!”என்று குரலெழுப்பி அழுதபடி, என் தோளில் எடையை அளித்து தள்ளாடி வந்தான். நான்கு இடங்களில் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு எஞ்சிய மதுவைக்குடித்தான். இரவு ரீங்காரத்துடன் வானில் இருந்து பொழிந்து காட்டை மூடியது. துரைக்கு நான் மீண்டும் மீண்டும் பச்சிலைச் சாற்றைக் கொடுத்தேன். அதன் இனிப்பு குறைந்து வந்தது. கசப்பு தெரிய ஒரு வாரம்கூட ஆகும்.

”நாம் ஏதாவது மரத்தின்மேல் ஏறிக்கொள்ளலாம்”என்றேன்.துரை ”என்னால் மரமேற முடியாது…பாறை மீது தங்குவோம்”என்றான். ”இன்றிரவு இங்கே நிறைய செந்நாய்களும் நரிகளும் திரண்டு வரும்..”என்றேன். ஒரு யானையின் சடலம் அவற்றுக்கு பலநாள் உணவாகும். துரை பெருமூச்சு விட்டான்.

நான் அவனை அமரசெய்துவிட்டு மரத்தில் ஏறி கொடிகளை வெட்டி கயிறாக்கி தொங்கவிட்டேன். அவன் பலத்த முனகல்களுடன் மெல்லமெல்ல ஏறிவந்தான். அவனை என் பலத்தால் தூக்கி மரக்கிளையில் அமரச்செய்தேன். அதன்பின் காட்டுகொடிகளால் அவனை கிளைகளுடன் சேர்த்துக் கட்டினேன். ”நீங்கள் தூங்கினாலும் பிரச்சினை இல்லை. நான் விழித்திருப்பேன்”என்றேன்.

துரை மெல்ல ”ஜீஸஸ்”என்றான். நான் இன்னொரு கிளையில் அமர்ந்து என் தோளை அடிமரத்தில் சாய்த்துக்கொண்டேன். காட்டுக்குள் பன்றிக்கூட்டம் ஒன்று செல்லும் உறுமல்தொகைகள் கேட்டன. சில்வண்டுகளின் ரீங்காரத்துடன் காற்று செல்லும் ஓசையும் இணைந்துகொண்டது. நான் காட்டுக்கு மேல் இலைக்கூரைக்கு அப்பால் கரியவானில் மின்னியபடி விரிந்திருக்கும் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டேன். துரை தூங்கிவிட்டானா என்று தெரியவில்லை.

துரை அசையும் ஒலி கேட்டு நான் ”ம்?”என்றேன். துரை ”ஊமைச்செந்நாயே”என்றான் ”நீ என்னை ஏன் காப்பாற்றினாய்?” நான் இருட்டுக்குள் பேசாமல் இருந்தேன். ” நீ என்னை விட்டுவிட்டு போயிருக்கலாமே” நான் ஒன்றும் சொல்லவில்லை.

துரை சற்றுநேரம் பேசவில்லை. பின்பு ”என்னைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”என்றான். நான் அதற்கும் பதில் சொல்லவில்லை ”சொல்” நான் மெல்ல கனைத்ததுடன் சரி. ”நீ சொல்ல மாட்டாய் எனத் தெரியும்”என்றான் துரை. ”ஆனால் நீ ஒன்று தெரிந்துகொள்ளவேண்டுமென நான் விரும்புகிறேன்…நான் கெட்டவன் அல்ல. ஆணவம் பிடித்தவனாக இருக்கலாம் . இனவெறியனாக இருக்கலாம். ஆனால் நான் உள்ளூர கெட்டவன் அல்ல…”

அவன் நான் ஏதேனும் சொல்லக்கூடுமென எதிர்பார்த்தான். பின்னர் தொடர்ந்தான் ” ஊமைச்செந்நாயே, நாடுவிட்டு இந்த வெப்பநாட்டுக்கு வந்திருக்கும் நானும் என்னைப்போன்றவர்களும் எங்கள் சமூகத்தில் உன்னைப்போலவே கடைப்பட்டவர்கள். எங்களை எவரும் மனிதர்களாக மதிபப்தில்லை. ஒரு நல்ல குடும்பத்துப்பெண் எங்களை ஏறிட்டும் பார்க்கமாட்டாள். ஒரு சாதாரண விருந்தில்கூட நாங்கள் கலந்துகொள்ள முடியாது. எங்கள் கழுத்துக்குட்டைகளையும் காலுறைகளையும் தொப்பிகளையும் பார்த்து அவர்கள் சிரிப்பார்கள். அவர்கள் சிரிக்கும்தோறும் நாங்கள் மேலும் கோமாளிகள் ஆவோம்….நாங்கள் எங்கள் சமூகத்தில் உள்ள புழுப்பூச்சிகள் தெரியுமா?”

பேச ஆரம்பித்ததும் அவனுக்கு பேச்சு வந்தது ”எல்லாவற்றையும் உதறிவிட்டு இந்த வெயில் காடுகளுக்குள் வந்து பதுங்கிக்கொள்கிறோம். எங்களை வெறுப்பவர்களை நாங்கள் வெறுக்க முடியாது. அவர்கள் எங்கள் எஜமானர்கள். ஆகவே உங்களை வெறுக்கிறோம். சாட்டையால் அடிக்கிறோம். அவமானபப்டுத்துகிறோம். நீயே பார்த்திருப்பாய், அடிமைகள் அனைவருமே நாய் வைத்திருப்பார்கள்.”

நெடுநேரம் இருவர் நடுவே இருள் மட்டும் இருந்தது. பின்பு துரை ”நீ அசாதாரணமான மனிதன். என்னைவிட நீ எத்தனையோ பெரியவன். நான் சாதாரணமானவன்…ஆனால் நான் உனக்கு ஏதாவது தரவேண்டும்…பதிலுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். உனக்கு என்ன வேண்டும்?” அவன் என்னை நோக்கி கை நீட்டி என் முழங்காலை தொட்டான். அவன் கை சூடாக நடுங்கிக்கொண்டிருந்தது ”சொல்…உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்?”

நான் ஒன்றும் சொல்லாமலேயே இருந்தேன் .என் முழங்காலைப் பிடித்து அவன் உலுக்கினான் ”சொல்…நிறைய பணம் தருகிறேன்.கீழே கிராமத்துக்குப் போய் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு நிலம் வாங்கி வீடுகட்டி விவசாயம்செய்…” அவன் மேலும் உலுக்கினான் ”சொல் என்ன வேண்டும் உனக்கு? அந்த சோதியை திருமணம் செய்துகொள்கிறாயா? அவளை கட்டாயப்படுத்தி உன்னை மணக்கச் செய்கிறேன்…”

நான் பேசாமலிருந்ததும் அவன் வெறிகொண்டான் ”சொல், முட்டாளே, சொல்…ஊமைச்செந்நாயே…உனக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல். வாயைத்திறந்து சொல்…ஏன் பேசாமலிருக்கிறாய்?”

நான் மெல்ல ”ஏனென்றால் நான் ஒரு ஊமைச்செந்நாய்’என்றேன். அவன் தளர்ந்து மெல்ல சாய்ந்துகொண்டான். ”நான் உன்னிடம் சொல்வதெல்லாம் இவ்வளவுதான். நீ என் நண்பன். என் சகோதரன். என் வாழ்நாளெல்லாம் நான் உன்னை நினைத்திருப்பேன்…ஒருநாளும் உன் நினைவை நான் இழக்க மாட்டேன்” அவன் குரல் தழுதழுத்திருந்தது.

அதன்பின் அவன் பேசவில்லை. ஆனால் அவன் இரவெல்லாம் தூங்கவில்லை. பெருமூச்சு விட்டபடியும் நெளிந்தபடியும்தான் இருந்தான். இருமுறை தண்ணீர் கேட்டான். விடியற்காலையில் அவன் சற்று தூங்கிவிட்டிருந்தான்.

தலைக்குமேல் பறவைகளின் ஒலி கேட்டபோது நான் எழுந்து அவனை எழுப்பி அவன் கட்டுகளை அவிழ்த்தேன். அவன் முகம் தெளிவாக இருந்தது. அது தூங்கியதனால் இருக்கலாம். அல்லது இரவு அவன் பேசியதனாலும் இருக்கலாம். என்னிடம் ”இன்று நானே நடப்பேன் என்று நினைக்கிறேன்”என்றான். நான் புன்னகைசெய்தேன்.

காட்டுக்குள் இறங்கி இருவரும் சென்றோம். அவன் சற்று திடமாகவே நடந்தான். ஏற்றங்களில் மட்டும் நான் சற்று பிடிக்க வேண்டியிருந்தது. மலைப்பாதை பெரிய குன்றின் விலாவில் வளைந்து சென்றது. கீழே மிக ஆழத்தில் பாம்புச்சட்டை போல ஆறு ஓடும் பள்ளம் தெரிந்தது. ”அது காரோடையா?” என்றான். நான் ஆம் என தலையசைத்தேன்.

அவனை மரத்தடியில் நிறுத்திவிட்டு நான் காட்டுக்குள் சென்றேன். பாதையோரத்தில் சிறிய பாறை ஒன்றின் இடுக்கில் ஊற்று கசிந்து அப்பால் பள்ளம் இறங்குவதைக் கண்டேன். நீரை அள்ளிச்செல்ல ஒரு கமுகுப்பாளை எடுத்து கோட்டிக்கொண்டிருந்தபோது சீறல் ஒலியைக் கேட்டேன். என் முன்னால் மாங்கொட்டை நிறத்து உடலுடன் ஒரு செந்நாய் நின்றது. அதன் பழுப்புக்கண்களை பார்த்துக்கொண்டே நான் காலை தூக்கி பின்னால் வைத்தேன்.

புதர்களுக்குள் மெல்லிய அசைவுகளாக நான் செந்நாய்களைக் கண்டேன் எந்த திசை நோக்கி விலகுவது என நான் கண்களை மட்டும் திருப்பி பார்ப்பதற்குள் செந்நாய் ஒன்று என் விலாப்பக்கமிருந்து என்னைத்தாக்கியது. யானைரத்தம் தோய்ந்த துணி அங்கே இருந்தது. அதை முகர்ந்து பின்னால் வந்த கூட்டம் அது. நான் என் இடுப்புத்துணியை உருவிவிட்டுக்கொண்டு பாய்ந்து அந்தப்பாறையில் ஏறினேன். என் அலறல் கேட்டு துரை திரும்பிப்பார்த்து ”ஜீஸஸ்!” என்றபடி தன் கைத்துப்பாக்கியை உருவி இருமுறை சுட்டான்.

காடே ஒலியில் அதிர செந்நாய்கள் வால் சுழற்றி எம்பிப்பாய்ந்து புதர்களுக்குள் விலகி ஓட துரை என்னை நோக்கி வருவதைப்பார்த்திருந்தபோது காட்சி சற்றே ஆடுவதை உணர்ந்தேன். அதைப்புரிந்துகொள்ளும் சில கணங்களுக்குள் நான் நின்றிருந்த சிறிய பாறை மண்ணுடன் பெயர்ந்து சரிவில் இறங்கியது.

நான் அதிலிருந்து குதித்து ஒரு தவிட்டைச்செடியைப்பற்றினேன். பாறை பெயர்ந்து உருண்டு வேகம் கொண்டு தம்ம்ம் என்ற ஒலியுடன் ஆழத்துக்காட்டை அடைந்தது. தவிட்டைச்செடி என் எடையை தாங்காமல் பிடுங்கப்பட்டு வந்தது. நான் பல்வேறுசெடிகளைப்பிடிக்க முயன்று ஈரமண்ணில் வழுக்கி வழுக்கி கீழிறங்கி செங்குத்தான சரிவின் விளிம்பில் நின்ற ஒரு வேரைப்பற்றிக்கொண்டு தொங்கினேன். மண்ணில் ஊன்ற முயன்று வழுக்கிய என் கால்களுக்குக் கீழே ஆழத்தை பார்க்காமலேயே உணர்ந்தேன்.

துரை ஓடிவந்து மேலே குப்புறப்படுத்துக்கொண்டு ”பயபப்டாதே …பயபப்டாதே…ஒரு நிமிடம்.. ”என்று கூவினான். தன் இடுப்பில் இருந்து பெல்ட்டை உருவி அதன் ஒரு நுனியை தன் கையில் சுற்றிப்பிடித்துக்கொண்டு அதை நீட்டினான்.

பெல்ட் என் முகத்தருகே வந்தது. என் வலக்கையை நீட்டி அதைப் பிடித்தபடி மேலே பார்த்தேன் ”’பிடித்துக்கொள்…நான் இழுக்கிறேன்’என்று அவன் கூவினான்.

நான் ”நரகத்துக்குப் போ!” என்று அவன் கண்களைப் பார்த்துச் சொல்லி காறித் துப்பிவிட்டு என் பிடிகளை விட்டேன். அடியாழத்தில் விரிந்திருந்த பசுமையான காடு பொங்கி என்னை நோக்கி வர ஆரம்பித்தது.

வேர்க்கல்லே.... வேர்க்கல்லே....

ஈச்சனாரி ரயில்வே கேட் சாத்தியிருந்தால். பஸ்ஸில் வருபவர்கள் சலிப்புத் தட்டுவார்கள். அழகுவின் முகத்தில் சந்தோஷம் வந்து குதிக்கும். கிழிந்த அரை டவுசரை அரைஞாண் கயிற்றால் இறுக்கிக் கொண்டு, வட்டமான தட்டைக் கூடையைத் தோளில் தூக்கிக் கொள்ளுவான். கேட் சாத்தியதால் தங்கி விட்ட பஸ்ஸில் ஒரு வீரனைப் போலப் பாய்வான்.

” கல்லே..கல்லே.. வேர்க்கல்லே. ”

” உச்சி வெய்யிலுக்கு எப்படி வேர்த்து வடியுது. வேர்க்கல்லேங்கறியே தம்பி! ” – சில பேர் ஜோக் மட்டும் அடிப்பார்கள். வேர்க்கடலை வாங்கமாட்டார்கள். பாலிதீன் பைகளில் அடைத்த சின்ன சின்ன வேர்க்கடலைப் பாக்கெட்டுகள். சின்தடிக் சர்ட் ஜேபியில் நூறு ரூபாய் நோட்டுகள் கண்ணாடி போலத் தெரிகின்றன. ஐம்பது பைசாவுக்கு என்னமாய் யோசிக்கிறார்கள்.

அந்த லெவல் க்ராசிங்கிற்கு அப்பாலிருக்கும் சேரிதான் அழகுவின் சாக்கடைகளும், சகதிகளும் நிரம்பிய அன்னை பூமி. அவன் பெயருக்கும் உருவத்துக்கும் மயிரிழை சம்பந்தமுமில்லை. நாலாங்கிளாஸ் வரை பள்ளிக்கூட வாசனை. ஸ்கூலில் தமிழ் வாத்தியார் மட்டும்தான் அவனை அழுத்தந்திருத்தமாய் உச்சரிப்பார். மற்றவர்கள் எல்லாருமே, “அளகு…அளகு…” சமயத்தில், “அலகு”.

போன வாரம் அவன் அப்பா வாயில் நுரை தள்ளி செத்துப் போனார். அழகுக்கு அதில் சொற்பமும் துக்கமில்லை. அவர் என்ன வேலை பார்த்தார் என்று இன்றைய தேதி வரை அவனுக்குத் தெரியாது. அவனைப் பொறுத்தவரை அநேக நேரங்களில் கள்ளச் சாராய போதையுடன் வாய் குழறுபவர். பல சமயம் மொக்கைக் காயங்களுடனும், சில சமயம் ரத்தக் காயங்களுடனும் வீடு திரும்புபவர். நள்ளிரவில் அம்மாவின் கூந்தலைக் கொத்தாகப் பற்றி உலுக்குபவர். அவளை அடித்து, உதைத்து, வயிற்றில் மிதித்து துவம்சம் செய்பவர். பின்னிரவுகளில் அவர் அம்மாவிடம் கொஞ்சலாகவும், கெஞ்சலாகவும் பேசுகிற மாதிரி குரல் கேட்கும். கனவு என்று நினைத்து தூக்கத்தில் கரைந்து போவான் அழகு.

அம்மா கறுப்பாயிருந்தாலும் அவனுடைய மிகச் சின்ன வயதுகளில் விக்கிரகம் மாதிரி அழகாய் இருந்ததாய் ஞாபகம். இப்போது நோஞ்சான் விக்கிரகம். இருமல் சத்தம் அப்பாவிடமிருந்து தொற்றிய குடும்ப கீதம். அடிவயிற்றை எக்கிக் கொண்டு கிளம்பும் அதே பாணி இருமல் குளிர் காற்றடித்தால் அழகுக்கும் வரும்.

அம்மாதான் பாதி கிளாஸ் நடக்கையில் ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து கூட்டிப்போனாள். “இனிமே இஸ்கூல் வேணாம் அளகு..”

ஏன் எதற்கு என்று கேட்கவில்லை அவனுக்கு விடுதலை சந்தோஷம். அண்ணாச்சி கடையில் கொண்டு போய் விட்டாள்.

” அண்ணாச்சி… (இருமல்) எனக்கும் இப்பல்லாம் ஆவறதில்லை. இவங்கப்பன் வெவகாரந்தான் ஒங்களுக்குத் தெரியுமே. ஒரு செல்லாக்காசு சம்பாதிச்சுப்போடத் துப்பில்லாத ஆளு. இனிமே அளகு கொண்டாந்தாத்தான் அடுப்புல பொங்கிப்போட முடியும். ”

அண்ணாச்சி இரண்டு நாள் அவனைக் கடையில் வைத்திருந்தார். அன்பாக, பொறுமையாக, தெளிவாக, நிதானமாக… கடைசியில் பொறுமை இழந்து ஒரு குட்டுக்குட்டி சொல்லிக் கொடுத்தும் அழகுக்குப் பொட்டலம் கட்டும் கலை சுலபத்தில் கை வரவில்லை.

” சும்மா வெச்சு காசு தரமுடியுமா? கூட்டிட்டுப் போயிரம்மா. இங்க இவனுக்கு வேலையில்லை.”

” அண்ணாச்சி… அண்ணாச்சி ” அழுது அரற்றினாள் அம்மா. என்ன இது இழவாகப்போயிற்று என்று யோசித்த அண்ணாச்சிக்கு நிர்ப்பந்தத்தில் அந்த யோசனை பிறந்தது. தட்டைக்கூடையை எடுத்து அழகுவின் கையில் கொடுத்தார். பாட்டிலின் தகரமூடியை சுழற்றிக் கழற்றி கடலைப் பாக்கெட்டுகளைத் தட்டைக் கூடையில் கொட்டிப் பரப்பினார்.

” ரயில்வே கேட்டுக்குப் போ. ஒரு பாக்கெட் வித்தீன்னா உனக்குப் பத்துக்காசு.”

கட்டிப்போட்ட மாதிரி கடைக்குள் கிடப்பதை விட அழகுக்கு இது பிடித்தது.

தட்டைக்கூடையைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு ஈச்சனாரி ரயில்வே கேட்டுக்கு ஓடினான். கோவை-கொச்சின் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கொரு தரமாவது அந்த வழியாகச்செல்லும். முணுக்கென்றால் கேட்டை சாத்திவிடுவார்கள். கேட் சாத்தினால் அந்தப்பக்கமும், இந்தப்பக்கமும் சில லாரிகள், பத்துப் பதினைந்து பஸ்களாவது தேங்கிப்போகும்.

” கல்லே…கல்லே …வேர்க்கல்லே… ”

அழகுவின் சத்தம் கேட்டால் சில குழந்தைகள் அடம் பண்ணி வாங்கும். பெரும்பாலான வெள்ளுடுப்பு ஆசாமிகள் இவனைப் பார்ப்பதே பாவம் என்கிற மாதிரி விறைப்பாய் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள். பஸ்ஸில் வரும் கிராமத்து ஜனங்கள் தான் கல்மிஷமில்லாமல் பேசி அவனிடம் கடலைப் பாக்கெட்டுகள் வாங்குவார்கள்.

சில சிடுமூஞ்சிக் கண்டக்டர்கள் அவன் படிக்கட்டில் காலை வைத்தாலே நாயை விரட்டுகிற மாதிரி விரட்டித்தள்ளுவார்கள். வேறு சில கண்டக்டர்கள் தயவான்கள் போல் அவனை பஸ்சுக்குள் அனுமதித்து விட்டு, இறங்கிப் போகையில் ஒரு வேர்க்கடலைப் பாக்கெட்டை முழுசாய் லவட்டிக்கொள்வார்கள். ஐந்து பாக்கெட்டுகள் விற்றால் அழகுக்குக் கிடைக்கக் கூடிய ஐம்பது பைசா அநியாயமாய்ப் பறிபோகும்.

” அண்ணே… அண்ணே… ” என்று கண்டக்டரிடம் கெஞ்சுவான். குழைவான்.

” பஸ்சுக்குள்ளே எவ்வளவு பாக்கெட் விக்கறே…? ஒண்ணு தந்தா கொறஞ்சா போய்டுவே? அப்றம் நாளைலேர்ந்து இந்த கேட்ல ஒரு பஸ்ல காலை வைக்க முடியாது ஜாக்ரதை. அங்க பாரு எஸ்ஸார்ட்டி வந்து நிக்குது. ஓடு.”

அந்த நிமிஷம்தான் காத்திருப்பு வரிசையில் கோத்துக்கொண்ட அந்த பஸ்சுக்கு ஓடுவான். தினமும் அடித்துப்பிடித்து எழுபத்தைந்திலிருந்து நூறு பாக்கெட்டுகள் வரை விற்று விடுவான்.

அதற்கப்புறம் பாத்திரம் தேய்க்கவும் துணி துவைக்கவும் வீடுகளுக்குப் போவதை அம்மா நிறுத்திவிட்டாள். அந்த எலும்பை உருக்கும் இருமலால் நிறுத்தப்பட்டு விட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். அவளால் உடம்புக்கு முடியவில்லை என்பது ஒருபுறம். எச்சில் தெறிக்க அவள் இருமுவதை மற்றவர்கள் அசூசையாய்ப் பார்த்தார்கள் என்பது இன்னோர்புறம்.

அழகுவின் வியாபார நிம்மதி ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை. அன்றைக்கு கேட் சாத்தி பஸ் ஒன்று வந்து நின்றதும் -

” கல்லே…கல்லே …வேர்க்கல்லே… ”

பஸ்சுக்கு அந்தப்பக்கம் அசரீரி மாதிரி புதிய குரல். அழகு திடுக்கிட்டு பஸ்ஸை சுற்றிக்கொண்டு அந்தப்பக்கம் போய்ப் பார்த்தான். அவனை மாதிரியே இன்னொரு பொடியன், அவனிடம் ஐம்பது காசு கொடுத்து ஜன்னல் வழியாக ஒருவர் வேர்க்கடலைப் பாக்கெட்டை வாங்கிக் கொண்டிருந்தார்.

அழகுக்குள் ஆத்திரப்புயல். தன்னுடைய காசை இன்னொருவன் தட்டிப் பறிக்கிற உணர்வு. அவன் தோளைத் தொட்டுத் திருப்பினான்.

” யார்ரா நீ ? ”

” ராக்கப்பன். ”

” இங்க எதுக்கு கடலை விக்கறே ? ”

” வித்தா உனக்கென்ன? ”

” நாந்தான் மொதமொதல்லே இங்கே வந்தது. ஒரு மாசமா விக்கறேன் தெரியுமா ? ”

” செட்டியார் கேட்டாண்ட போய் என்னைக் கடலை விக்கச்சொன்னார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். கல்லே… கல்லே… வேர்க்கல்லே… ”

” டேய்… மரியாதையா வேற எங்கயாச்சும் போய்டு. ”

” போவலைன்னா? ”

” கை வெச்சா கன்னம் பிஞ்சுரும். ”

” இந்த மிரட்டலெல்லாம் இளிச்சவாயன் எவன்கிட்டயாச்சும் வெச்சுக்க. என்கிட்ட வாணாம். கல்லே… கல்லே… வேர்க்கல்லே… ”

” தம்பி, இங்க ஒரு பாக்கெட் குடு. ”

ராக்கப்பன் வே. க. பாக்கெட்டை எடுத்துக் கொடுக்க, அழகு உட்சபட்ச கோபத்தைத் தொட்டான். அந்தப் பாக்கெட்டைத் தட்டி விட்டான். ராக்கப்பன் அழகுவின் கூடையைத் தள்ளினான். பாக்கெட்டுகள் சிதறின. அழகு அவன் சட்டைக் காலரைப் பற்றி உலுப்பி, அவன் இவன் கன்னத்தில் அறைந்து, காலை இடறி, இருவரும் தரையில் புரண்டு, புழுதியில் குளித்து…

ரயில் இரைச்சலுடன் கடந்து, கேட் திறந்தது. பஸ்கள் ஒவ்வொன்றாய்க் கரைந்தன. ஒரு பாக்கெட் கூட விற்கவில்லை.

அதற்கப்புறம் ஒரு ஒப்பந்தம் பண்ணிக் கொண்டார்கள். கேட்டுக்கு இந்தப் பக்கம் அழகு விற்பது. அந்தப் பக்கம் ராக்கப்பன். நிலைமை சரியானது. விரோதம் கலைந்து ஸ்நேகம் தழைத்தது. ராக்கப்பனை ராக்கு என்று செல்லமாய்க் கூப்பிட்டான் அழகு. கேட் திறந்திருக்கும் சமயங்களில் மர நிழலில் உட்கார்ந்து இருவரும் ரஜினி படம் பற்றி அரட்டை அடிப்பார்கள்.

அம்மாவின் உடம்பு சற்று மோசமாயிற்று. இருமல் சூரணம் வாங்க ஒன்றோ, இரண்டோ பணம் பத்தலை என்றால் சில சமயம் ராக்கு இரக்கப்பட்டுக் கைமாற்றுத் தருவான்.

இந்தக் கூட்டணி விற்பனைக்கும் விரைவில் இடிவிழுந்தது. புற்றீசல் மாதிரி மேலும் சில வேர்ர்க்கடலை விற்கும் பையன்கள் அங்கே தோன்றினார்கள். அங்கு கேட் சாத்தும் போது வியாபாரம் ஆவது புரிந்து சுந்தராபுரத்துக் கடைக்காரர்கள் எல்லாரும் ஆளுக்கொரு அன்றாடங்காய்ச்சிப் பையனை அனுப்பி வைத்தார்கள்.

இந்த ஜனங்களுக்கு ஒரு பழக்கம். செடி சத்தையை அகற்றி, முள் புதர்களை விலக்கிப் போடும் வரை வேடிக்கை பார்ப்பார்கள். பாதை கிடைத்து விட்டால் மந்தை மந்தையாய்ப் புகுந்து பாதை போட்டவனையே மிதித்துக் கொண்டு முன்னால் போவார்கள்.

அதற்கப்புறம் கேட்டுக்கு இங்குமங்கும் பஸ்கள் வந்து நின்றால் -

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

ஏகப்பட்ட குரல்கள்.

ஒரு பாக்கெட் விற்பது கூட ஜாக்பாட் விழும் மாதிரி, லாட்டரி அதிர்ஷ்டம் மாதிரி ஆகிப் போனது. அதற்கும் எத்தனை சர்க்கஸ்கள், மாரத்தான்கள்.

அண்ணாச்சி பாக்கெட்டுக்குப் பதினைந்து பைசா என்று கமிஷனை உயர்த்திய பின்னும் அழகு திணறினான். ஒரு நாளைக்கெல்லாம் நாற்பது பாக்கெட் விற்றால் அது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.! ஒரு பஸ் வந்து நின்றால் எல்லோரும் பறந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். கடலை வாங்கும் ஆசாமிக்கு எந்த மூஞ்சி பிடிக்கிறதோ அவனுக்கு ஒரு பாக்கெட் விற்கும். ஐம்பது பைசாவுக்கு என்னமாய் அடிதடி!

அஞ்சுக்கும் பத்துக்கும் போராட்ட நாட்கள் நகர்ந்தன.

அன்றைக்கு அழகு ரொம்ப படபடப்பாயிருந்தான். எந்த வண்டி வந்தாலும் பேய்த்தனமாக ஓடிப்போய், “கல்லே…கல்லே…” என்று வெறி பிடித்த மாதிரி கத்தினான். அவன் சத்தத்தையும், வேகத்தையும் பார்க்க ராக்குவுக்கே பயமாய் இருந்தது.

“அளகு, ஏன் ஒரு மாதிரி இருக்கே? வெறி பிடிச்சமாதிரி அலையறே ? ”

” இன்னிக்கு ஒண்ணல்ல ரெண்டல்ல… நூத்தம்பது பாக்கெட்டை நா வித்தாகணும் ராக்கு! ”

” விளையாடறியா? அம்பது வித்தா அதிசயம். தட்டைக் கூடையைத் தூக்கிக்கிட்டு பத்துப் பேராச்சும் சுத்தறோம். வாங்கறவனை விட விக்கறவன் அதிகமா இருப்பான் போலிருக்கு. யாரைக் குத்தஞ் சொல்றது! எல்லாரும் வயத்துப் பசிக்காகப் பறக்கறாங்க. ”

அழகுவின் கண்ணில் கண்ணீர் சுரந்து மின்னியது.

” நா இன்னிக்கு வயத்துப் பசிக்காக விக்கலை ராக்கு. அம்மா இருமல் முத்திப் போய் தர்மாஸ்பத்திரில கிடக்கறாங்க. மருந்து வாங்கணும். ஊசி மருந்து இருவத்தஞ்சு ரூபா. ஆஸ்பத்திரில ஸ்டாக்கு இல்லியாம். அதைப்போட்டாத்தான் அம்மா பிழைக்கும்.”

கேட் சாத்தினார்கள்.

ஒரு பஸ் கேட் அருகே வந்து ஓய பாய்ந்தான் அழகு. ” தம்பி, சாயந்திரத்துக்குள்ள ஊசி மருந்து வாங்கிட்டு வா. ”

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே… ”

அந்த பஸ்சில் அவ்வளவாய்க் கூட்டமில்லை. வேகமாய் ஒரு ரவுண்ட் அடித்தான். ” அம்மா அழாதம்மா. அண்ணாச்சி கிட்ட ஒரு கூடை நிறைய பாக்கெட் போடச் சொல்லியிருக்கேன். அத்தனையும் வித்துப்புட்டு சாயந்திரம் மருந்தோட வரேன். ” மன்னார்சாமி குறுக்கே வந்து இரண்டு போணியைக்கெடுத்தான்.

ரயில்வே கேட்டுக்கு அந்தப்பக்கம் ஜனமூட்டையை அடைத்துக் கொண்டு இன்னொரு பஸ் விர்ரென வந்து நின்றது.. இன்று ஒரு பஸ்சை விடக்கூடாது.

பஸ்சுக்கு நாலு பாக்கெட். ” சிஸ்டர், ஏழாம் நம்பர் பெட் சனியன் எப்ப இருமலை நிறுத்தும் ? ” சில பையன்கள் அந்த பஸ்சை நோக்கி ஓடினார்கள். முந்து அழகு. விற்பனைக்கு முந்து அழகு. ஊசி மருந்து !

அழகு சுதாரித்து ரயில்கேட்டின் சுழலும் விக்கட் நுழைவில் புகுந்தான்.

மனசு ஆஸ்பத்ரியிலும், உடல் பஸ்சை நோக்கியும் நிலைத்தன. வேறு சிந்தனை இன்றி அந்த பஸ்சையே குறி வைத்து தண்டவாளத்துக்குக் குறுக்கே படுவேகமாய் ஓடினான்.

தட் !

ஒரு துரதிர்ஷ்ட விநாடி அழகுவின் காலை தண்டவாளத்தில் இடறிவிட்டது.

” அம்மா…ஆ…”

தண்டவாளத்தின் நடுவே கடலைப்பாக்கெட்டுகள் சிதற குப்புற விழுந்தான் அழகு.

ரயில் வருவதைக் கூட கவனிக்காமல் குறுக்கே பாய்கிறானே இந்த அழகு ! விரைந்து வரும் ரயிலைப் பார்த்து ராக்குவின் கண்கள் பயத்தில் விரிந்தன.

” அளகு… அளகு… ” – கத்தினான் ராக்கு.

என்ஜின் டிரைவர் விழுந்து கிடக்கும் அழகுவைப் பார்த்து விட்டார். பிரேக்கைப் பிரயோகித்தார். உடனே நிற்குமா அந்த ராட்சத வாகனம். எழ முயலும் அழகுவை ஆவேசமாய் சக்கரங்கள் விழுங்கின. சிவப்புத் தெறிக்க அவனை அரைத்து, அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்துக் கொண்டு போய் நின்றது நீளமான அந்த எக்ஸ்பிரஸ் ரயில்.

ரத்தத் துகள்களாய்க் கிடக்கும் அழகுவைச் சுற்றி, நிமிஷத்தில் கும்பல் கூடியது. ராக்கு சதைத்துணுக்குகளைப் பார்த்து தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதான்.

ஏறக்குறைய அதே விநாடி -

ரயிலின் கடைசி கம்பார்ட்மென்ட்களில் குரல்கள்.

” கல்லே…கல்லே… வேர்க்கல்லே. ”

” என்னாச்சு தம்பி? ஏன் ரயில் நின்னுருச்சு? ”

” ஆக்ஸிடெண்ட்டு. ஒரு பையன் ரயில்ல அடிபட்டு செத்துட்டான். கல்லே…கல்லே… வேர்க்கல்லே. “

Wednesday, September 7, 2011

செல்லம்மாள்

செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.

நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்துவைத்துக் கிடத்தினார். வாயிதழ் சற்றுத் திறந்திருந்தது. அதையும் மூடினார். செல்லம்மாள் இறந்துவிட்டாள் என்று உள்மன உணர்ச்சி இருந்ததே ஒழிய, ஸ்பரிசத்தில் அவருக்குப் புலப்படவில்லை. அப்பொழுதுதான் மூச்சு அடங்கியது.

ஒரு பெரும்பளுவை இறக்கிக் கழுத்துக்கு ஆசுவாசம் கொடுப்பது போலவே, அவரது மனசிலிருந்து பெரும்பளு இறங்கியது. மனசிலே, மரணப் பிரிவினால் துன்பப் பிரவாகம் மதகுடைத்துக் கொண்டு பெருகி அவரை நிலைகுலையச் செய்யவில்லை. சகதர்மிணியாக இருந்த ஒரு ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது என்பதிலே அவருடைய மனசுக்கு ஒரு நிம்மதி.

பிரமநாயகம் பிள்ளைக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டது. சாவின் சாயையிலே அவரது மனம் நிலை குலையவில்லை. அதனால் பிரமநாயகம் பிள்ளையைப் பந்தவினையறுத்த யோகி என நினைத்து விடக் கூடாது; அல்லது, அவரது மனசுக்கு வேலி போட்டுப் பாதுகாத்து வளர்த்து, ‘போதி’ மரம் வரையில் கொண்டுவிடும் ஞானமிகுந்த சுத்தோதனப் பெருந்தகையல்ல அவரது பிதா. வறுமை, நோய், சாக்காடு மூன்றையும் நேரில் அநுபவித்தவரே.

பிரமநாயகம் பிள்ளை வாழ்வின் மேடுபள்ளங்களைப் பார்த்திருக்கிறார் என்றால், அவர் ஏறிய சிறுசிறு மேடுகள் யாவும் படிப்படியாக இறங்கிக் கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளேயாகும். வாழ்வு என்ற ஓர் அநுபவம் அவருக்கு ஏற்படும்போது அவர் மேட்டிலிருந்துதான் புறப்பட்டார்.

குடும்பத்தின் சகல செலவுகளுக்கும் வருஷந்தோறும் வருமானம் அளிக்கும் நிலபுலன்களைப் பங்கிட்டால், பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய அளவு துண்டுகளாகப் பாகப் படுத்துவதை அவசியமாக்கும் அளவுக்கு வம்ச விருத்தி உடையவர் பிரமநாயகம் பிள்ளையின் பிதா.

பிரமநாயகம் பிள்ளை நான்காவது குழந்தை. சிறு வயசில் படிப்பில் சற்றுச் சூடிகையாக இருந்ததால், மற்றவர்களுக்குக் கையெழுத்து வாசிக்கும்வரையில் கைகாட்டிவிட்டு அவரைப் படிப்பித்தார் அவர் தகப்பனார். அவருக்கு இருந்த பொருள் வசதி, மகன் ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி வந்தும், பட்டினி கிடக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கே கல்வி வசதி அளித்தது. உற்ற பருவத்தில் பிரமநாயகம் பிள்ளைக்குச் செல்லம்மாள் கையைப் பிடித்து, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம் கிடைத்தது.

பிரமநாயகம் பிள்ளையின் தகப்பனார் காலமானார். சொத்து பாகமாயிற்று. குடும்பக் கடன் விவகாரம் வியாச்சிய எல்லையை எட்டாதபடி மூத்தவர் இருந்த சமாளிக்க, பிரமநாயகம் பிள்ளை ஜீவனோபாயத்துக்காகச் செல்லம்மாளைக் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தஞ்சம் புகுந்தார்.

சென்னை அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்து அக்கினிப் பரீட்சை செய்தது. செல்லம்மாள் வீட்டிலே அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்துச் சோதித்தாள்; குணத்தினால் அல்ல, உடம்பினால். அவளுக்கு உடம்பு நைந்துவிட்டது. பிள்ளைக்கு வெளியில் சதா தொல்லை. வீட்டிலே உள்ளூர அரிக்கும் ரணம்.

பிரமநாயகம் பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்க்கிறார். ஜவுளிக்கடை முதலாளி, ஒரு ஜோடி ஜீவன்கள் உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்கவேண்டிய அளவு ஊதியம் தருகிறார். செல்லம்மாளின் வியாதி அதில் பாதியைத் தின்றுவிடுவதுடன் கடன் என்ற பெயரில் வெளியிலும் படருகிறது.

பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில் எழும் தொல்லைகள், முதலில் ரணம் காட்டி, பிறகு ஆறி மரத்துப் போன வடுவாகிவிட்டன. சம்பளத்தேதி என்று ஒன்று இல்லை. தேவையான போது வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து, அதற்காக முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக் கேட்டு, வழக்கம்போல இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின் வளமுறை.

இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.

செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று. இடைவிடாத மன உளைச்சலும் பட்டினியும் சேர்ந்து நோய் அவளைக் கிடத்திவிடும். காலையில் கண்ட ஆரோக்கியம் மாலையில் அஸ்தமித்துவிடும். இதை முன்னிட்டும் சிக்கனத்தை உத்தேசித்தும் பிரமநாயகம் பிள்ளை நகரின் எல்லை கடந்து, சற்றுக் கலகலப்புக் குறைவாக உள்ள, மின்சார வசதி இல்லாத இடத்தில் வசித்து வந்தார். அதிகாலையில் பசியை ஆற்றிக் கொண்டு கைப் பொட்டணத்துடன் கால் நடையாகவே புறப்பட்டுத் தமது வயிற்றுப் பிழைப்பின் நிலைக்களத்துக்கு வந்துவிடுவார்.

பிறகு அங்கிருந்து நன்றாக இருட்டி, செயலுள்ளவர்கள் சாப்பிட்டுக் களைப்பாறும் தருணத்தில் வீட்டு நடையை மிதிப்பார். செல்லம்மாள் அன்றைப் பொழுதைக் கழித்த நிலைதான் அவரது சாப்பாட்டுக்கு மூலாதார வசதி. வரும்போது வீடு இருட்டி, வெளிவாசல் கதவு தாழிடாமல் சாத்திக் கிடந்தது என்றால் அவர் உள்ளே சென்று கால் முகம் கழுவி அநுட்டானாதிகளை முடித்துக் கொண்ட பிற்பாடு அடுப்பு மூட்டினால் தான் இரு ஜீவன்கள் பசியாறுவதற்கு மார்க்கம் உண்டு. அவர் வீடு அடையும் தருணத்தில் அந்தப் பிராந்தியத்துக் கடைகள் யாவும் மூடிக் கிடக்குமாகையால் வீட்டில் உள்ளதை வைத்துத்தான் கழிக்க வேண்டும். சில சமயங்களில் வீட்டில் உள்ளது என்பது காலியான பாத்திரங்கள் என்ற பொருட் பொலிவுக்குள் பந்தப்பட்டுக் கிடக்கும். அச்சமயங்களிலும் பிள்ளையவர்களின் நிதானம் குலைந்துவிடாது. வெந்நீர் வைத்தாவது மனைவிக்குக் கொடுப்பார்.

இப்படியாக, பிரமநாயகம் பிள்ளை சென்னையில் பத்து வருஷங்களையும் கழித்துவிட்டார். அவருக்கு ஒவ்வொரு சமயங்களில் ஊருக்குப் போய்விடுமோமா என்ற துணிச்சலான நினைவு தோன்றுவதும் உண்டு. ஆனால் அடுத்த நிமிஷம், சக்தியின்மை மனசில் ஆழ்ந்த ஏமாற்றத்தை, கைப்பை, தரையிட்டுவிடும். மேலும் அங்கு எப்படியெல்லாம் இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை வெருட்டியது.

சங்கடங்களை நிவர்த்தித்துக் கொள்ளும் மார்க்கங்களைப் பற்றி அவர், அதோ கிடத்தி இருக்கிறதே அந்தச் சடலத்துடன், அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத சில சமயங்களில், உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள சுகங்களைப் பற்றிப் பேசியதும் உண்டு. செல்லம்மாள், வறண்ட உதடுகளில் சில சமயம் உற்சாகமிகுதியால் களுக்கென்று சிரித்து வெடிப்பு உண்டு பண்ணிக் கொள்வாள். ஊர்ப் பேச்சு, தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் சௌகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது.

அன்று பிரமநாயகம் பிள்ளை அதிகாலையில் பழஞ்சோற்று மூட்டையுடன் நடைப்படியைத் தாண்டும்பொழுது செல்லம்மாளுக்கு எழுந்து நடமாட முடிந்தது. இரவு அவர் திரும்பும்போது திருப்தியுடன் சாப்பிட, அவருக்குப் பிரியமான காணத் துவையலும் ஒரு புளியிட்ட கறியும் வைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, கையில் உமிக்கரிச் சாம்பலுடன் புழைக்கடைக்குச் சென்றாள்.

“இண்ணைக்கித்தான் சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ. வீணா உடம்பெ அலெட்டிக்கிடாதே” என்று நடைப்படியைத் தாண்டிய திரு. பிள்ளை திரும்பி நின்று மனைவியை எச்சரித்துவிட்டு, வெளிப் புறமாகக் கதவை இழுத்துச் சாத்தி, ஒரு கையால் அதைச் சற்றுப் பிடித்துச் சமன் செய்து, நிலைக்கும் கதவுக்கும் இருந்த இடைவெளியில் விரலை விட்டு உள்தாழ்ப்பாளைச் சமத்காரமாகப் போட்டார். பிறகு தாழ்ப்பாள் கொண்டியில் விழுந்துவிட்டதா என்பதைக் கதவைத் தள்ளிப்பார்த்து விட்டு, தெருவில் இறங்கி நடந்தார்.

அன்று வழி நெடுக அவரது மனசு கடைக்காரப் பிள்ளையின் மனப் பக்குவத்தையும் செல்லம்மாளின் அபிலாஷைகளையுமே சுற்றிச் சுற்றி வட்டமிட்டு வந்தது.

செல்லம்மாள், பேச்சின் போக்கில், அதாவது முந்திய நாள் இரவு, நெஞ்சு வலிக்கு ஒற்றடமிட்டுக்கொண்டிருக்கும்போது, “வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி சாப்பிடவேணும். ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம்; வரும்போது நெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும்” என்று சொல்லி விட்டாள்.

பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான் இருந்தன. அதைவிட அவள் புலிப் பால் கொண்டுவரும்படி கேட்டிருக்கலாம்; பிரம்ம வித்தை கற்று வரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப் பட்டிரா.

“அதற்கு என்ன, பார்த்துக் கொள்ளுவோமே! இன்னம் புரட்டாசி களியலியே; அதற்கப்புறமல்லவா பொங்கலைப் பற்றி நினைக்கணும்?” என்றார்.

“அது சதிதான்; இப்பமே சொன்னாத்தானே, அவுக ஒரு வளி பண்ணுவாக!” என்று அவகாச அவசியத்தை விளக்கினாள் செல்லம்மாள். ‘அவுக’ என்றது கடை முதலாளிப் பிள்ளையைத்தான்.

“தீபாவளிக்கு ஒங்க பாடு கவலையில்லே; கடையிலேயிருந்து வரும்; இந்த வருஷம் எனக்கு என்னவாம்?” என்று கேட்டாள்.

“எதுவும் உனக்குப் பிடித்தமானதாப் பாத்து எடுத்துப் போட்டாப் போச்சு. மொதல்லே நீ எளுந்து தலையைத் தூக்கி உக்காரு” என்று சிரித்தார் பிரமநாயகம்.

வழி நெடுக, ‘அவளுக்கு என்னத்தைப் பற்றுக் கணக்கில் எழுதிவிட்டு எடுத்துக் கொண்டு வருவது? பழைய பாக்கியே தீரவில்லையே! நாம் மேலும் மேலும் கணக்கேற்றிக் கொண்டே போனால் அநுமதிப்பார்களா?’ என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே நடந்தார். கடைக்குள் நுழைந்து சோற்றுப் பொட்டணத்தையும் மேல்வேட்டியையும் அவருடைய மூலையில் வைத்தார்.

“என்னடே பெரமநாயகம், ஏன் இத்தினி நாளிய? யாரு வந்து கடையெத் தெறப்பான்னு நெனச்சுக்கிட்டே? வீட்டிலே எப்படி இருக்கு? சதி, சதி, மேலே போயி அரைப் பீசு 703 எடுத்துக்கிட்டு வா; கையோட வடக்கு மூலையிலே, பனியன் கட்டு இருக்கு பாரு, அதையும் அப்படியே தூக்கியா” என்ற முதலாளி ஆக்ஞை அவரை ஸ்தாபன இயக்கத்தில் இணைத்துவிட்டது. ஒரு கஜம், அரைக் கஜன், பட்டு, பழுக்கா, சேலம், கொள்ளேகாலம், பாப்லின், டுவில் – என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம் பிள்ளை.

மாலை ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித் தமது தேவையை எடுத்துச் சொல்லி, மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு செய்துவிட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி நடந்தார்.

நடைப்படியருகில், பிரமநாயகம் பிள்ளை வந்து மூட்டையை இறக்கிவைத்துவிட்டு, கதவுச் சந்துக்கிடையில் வழக்கம்போல் விரல்களை விட்டு உள்தாழை நெகிழ்த்தினார். தெருவில், இருள் விழுங்கிய நாய் ஒன்று உறக்கக் கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக் குரல் அலைமேல் அலையாக மேலோங்கி எழுந்து மங்கியது.

பிரமநாயகம் பிள்ளை கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.

வீட்டில் விளக்கில்லை. ‘உறங்கி இருப்பாள். நாளியாகலே…’ என நினைத்துக் கொண்டே நிலைமாடத்தில் இருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து அருகிலிருந்த சிமினி விளக்கை ஏற்றினார். அந்த மினுக்கட்டான் பூச்சி இருளைத் திரட்டித் திரட்டிக் காட்டியது. அதன் மங்கலான வெளிச்சம் அவரது ஆகிருதியைப் பூதாகாரமாகச் சுவரில் நடமாட வைத்தது.

முதல் கட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தார். செல்லம்மாள் புடைவைத் துணியை விரித்து, கொடுங்கை வைத்து இடதுபுறமாக ஒருக்களித்துக் கிடந்தாள். வலதுகை பின்புறமாக விழுந்து தொய்ந்து கிடந்தது. அவள் கிடந்த நிலை, தூக்கமல்ல என்பதை உணர்த்தியது. பிரமநாயகம் பிள்ளை குனிந்து முகத்துக்கு நேரே விளக்கைப் பிடித்துப் பார்த்தார். கண் ஏறச் செருகியிருந்தது. நெஞ்சில் மட்டும் சிறிது துடிப்பு; சுவாசம் மெல்லிய இழைபோல் ஓடிக்கொண்டிருந்தது.

நிமிர்ந்து பின்புறமாகப் புழைக்கடைக்குச் சென்றார். போகும்போது அவரது பார்வை சமையற் கட்டில் விழுந்தது. உணவெல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கி இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது.

சாவகாசமாக, கிணற்றில் ஜலம் மொண்டு கால் கைகளைச் சுத்தம் செய்துகொண்டார். திரும்ப உள் நுழைந்து அடுப்படியிலிருந்த அகல் விளக்குத் திரியை நிமிண்டித் திருத்தி ஏற்றினார். பக்கத்திலிருந்த மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்கட்டுக்குத் திரும்பி வந்தார்.

சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை ஏற்றிவைத்துவிட்டு, செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும் ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி, சூடு ஏறும்படித் தேய்த்துவிட்டு, கமறலான அதன் நெடியை மூக்கருகில் பிடித்தார். பிரயோஜனம் இல்லை. எண்ணெயை ஊற்றிச் சற்றுப் பதற்றத்துடன் மூக்கின் மேலும் கபாலத்திலும் தடவினார். பிறகு எழுந்து சென்று கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வந்து, கையிலும் காலிலும் நெஞ்சிலுமாக ஒற்றடமிட்டார். அதிலும் பிரயோஜனம் இல்லை. சுக்குத் துண்டை விளக்கில் கரித்துப் புகையை மூக்கருகில் பிடித்தார்.

முகம் ஒரு புறமாகச் சாய்ந்திருந்ததனால் வாக்காக இல்லை. மெதுவாக அவளைப் புரட்டி மலர்த்திப் படுக்க வைத்தார். மறுபடியும் சுக்குப் புகையைப் பிரயோகித்தார்.

இரண்டு முறை ஊதியதும் செல்லம்மாள், புகையைத் தவிர்க்கச் சிறிது தலையை அசைக்க ஆரம்பித்தாள். உடலையே அதிர வைக்கும் ஒரு பெரிய தும்மல். மறுபடியும் மயக்கம். மறுபடியும் புகையை ஊத, முனகி, சிறு குழந்தை மாதிரி அழுதுகொண்டே, “தண்ணி…” என்று கேட்டாள் செல்லம்மாள்.

“இந்தா, கொஞ்சம் வாயை இப்படித் திறந்துக்கோ” என்று சிறு தம்ளரில் வெந்நீரை எடுத்து வாயை நனைக்க முயன்றார். அதற்குள் மறுபடியும் பல் கிட்டிவிட்டது; மயக்கம்.

பிரமநாயகம் பிள்ளை, தாம் அநுபவபூர்வமாகக் கண்ட சிகிச்சையை மீண்டும் பிரயோகித்தார்.

செல்லம்மாள் சிணுங்கிக்கொண்டே ஏறிட்டு விழித்தாள். எங்கிருக்கிறோம் என்பது அவளுக்குப் புரியாததுபோல அவள் பார்வை கேள்விகளைச் சொரிந்தது.

“நீங்க எப்ப வந்திய? அம்மெயெ எங்கே? உங்களுக்காகச் சமைச்சு வச்சிக்கிட்டு எத்தனை நேரமாக் காத்துக்கிட்டு இருப்பா?” என்றாள்.

பிரமநாயகம் பிள்ளை இம்மாதிரியான கேள்விக்குப் பதில் சொல்லி, இதமாக, புரண்டு கிடந்த பிரக்ஞையைத் தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை; கேட்டதற்கு உரிய பதில் சொன்னால் போதும்.

திடீரென்று செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு, “அம்மா, அம்மா, ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு விடுவான்… துரோகி! துரோகி…” என்று உச்ச ஸ்தாயியில் கத்திக் கொண்டு போனாள். குரல் கிரீச்சிட்டது. பிரமநாயகம் பிள்ளை இடது கையால் ஒரு துணியைக் குளிர்ந்த ஜலத்தில் நனைத்து நெற்றியில் இட்டார்.

செல்லம்மாள் மறுபடியும் பிதற்ற ஆரம்பித்தாள். எதிரிலிருப்பது யார் என்பது அவளுக்குப் புலப்படவில்லை. “அம்மா, அம்மா… நீ எப்போ வந்தே?… தந்தி கொடுத்தாங்களா…?” என்றாள்.

“ஆமாம். இப்பந்தான் வந்தேன். தந்தி வந்தது. உடம்புக்கு எப்படி இருக்கிறது?” என்று பிரமநாயகம் பிள்ளை தாயாக நடித்தார். செல்லம்மாளின் தாய் இறந்து ஐந்து வருஷங்கள் ஆகின்றன. இவளுக்கு இம்மாதிரிப் பிதற்றல் வரும்போதெல்லாம் தாய் உயிருடன் இருப்பதாக ஒரு பிரமை தொடர்ந்து ஏற்படும்.

“அம்மா, எனக்குக் கொஞ்சம் தண்ணி தா … இவுங்க இப்படித்தாம்மா… என்னைப் போட்டுட்டுப் போட்டுட்டுக் கடைக்குப் போயிடுதாக… எப்ப ஊருக்குப் போகலாம்?… யாரு எங்காலையும் கையையும் கட்டிப் போட்டுப் போட்டா?… இனிமே நான் பொடவெயே கேக்கலே… என்னைக் கட்டிப் போடாதிய… மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ! என்னெவிட்டிடுங் கன்னா! நான் உங்களை என்ன செஞ்சேன்?… கொஞ்சம் அவுத்துவிட மாட்டியளா?… நான் எங்கம்மையைப் பாத்துப்போட்டு வந்திடுதேன்… அப்புறம் என்னைக் கட்டிப் போட்டுக்கிடுங்க.”

மறுபடியும் செல்லம்மாளுக்கு நினைவு தப்பியது.

வைத்தியரைப் போய் அழைத்து வரலாமா என்று நினைத்தார் பிரமநாயகம் பிள்ளை. ‘இவளை இப்படியே தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது? கொஞ்ச தூரமா?’

மறுபடியும் சுக்குப் பிரயோகம் செய்தார்.

நாடி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.

செல்லம்மாள் செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லேசாக ஊசலாடியது.

அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு மலைப்பு.

செல்லம்மாள் சிணுங்கிக் கொண்டே ஒரு புறமாகச் சரிந்து படுத்தாள்.

என்ன சொல்லுகிறாள் என்பது பிடிபடாமல், காலுக்கு ஒற்றடமிட்டுச் சூடு உண்டாக்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, “என்ன வேண்டும்?” என்று கேட்டுக்கொண்டு அவளது தலைப் புறமாகத் திரும்புமுன், சுவாசம் சரியாக ஓட ஆரம்பித்தது. செல்லம்மாள் மயக்கத்திலிருந்து விடுபட்டுத் தூங்க ஆரம்பித்தாள். முகத்தில் வெறிச்சோடிக்கிடந்த நோய்க் களை மங்கி அகன்றது.

பத்து நிமிஷம் கழியவில்லை; செல்லம்மாள் விழித்துக் கொண்டாள். மேலெல்லாம் ஏன் நனைந்திருக்கிறது என்று தடவிப் பார்த்துக் கொண்டு சிதறிக் கிடந்த ஞாபகத்தைக் கோவை செய்ய முயன்றாள்.

“தலையை வலிக்கிறது” என்றாள் சிணுங்கிக் கொண்டே.

“மேலெல்லாம் பூட்டுப் பூட்டாக வலிக்குது” என்று சொல்லிவிட்டுக் கண்களை மெதுவாக மூடினாள்.

“மனசை அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாகத் தூங்கு; காலையில் சரியாகப் போய்விடும்” என்றார்.

“உம்” என்று கொண்டு கண்களை மூடியவள், “நாக்கை வறட்டுது; தண்ணி” என்றாள், எழுந்து உட்கார்ந்து கொண்டு.

“ஏந்திரியாதே; விளப்போறே” என்று கொண்டே முதுகைத் தாங்கியபடி வெந்நீரை ஒரு தம்ளரில் கொடுத்தார். அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “அது வாண்டாம். பச்சைத் தண்ணி கொடுங்க. நாக்கை வறட்டுது” என்றாள்.

“பச்சைத் தண்ணி குடிக்கப்படாது; வெந்நிதான் உடம்புக்கு நல்லது” என்று சொல்லிப் பார்த்தார்; தர்க்கம் பண்ணி அவளை அலட்டுவதைவிடக் குளிர்ந்த ஜலத்தைக் கொடுத்துவிடுவதே நல்லது என்று ஊற்றிக் கொடுத்துவிட்டு மெதுவாகப் படுக்க வைத்தார்.

கண்ணை மூடிச் சில விநாடிகள் கழித்ததும், “உங்களைத்தானே; எப்ப வந்திய? சாப்பிட்டியளா?” என்றாள்.

“நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத் தூங்கு; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே” என்றார் பிரமநாயகம் பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம் தூங்கிவிட்டாள்.

பிரமநாயகம் பிள்ளை கோரைப் பாயை எடுத்து வாசல் கதவுப் புறமாக விரித்துக் கொண்டு, “முருகா” என்று கொட்டாவியுடன் உட்காரும்பொழுது, ஒரு கோழி கூவியது. உலகம் துயிலகன்றது. பிள்ளையவர்களுக்குச் சற்று உடம்பைச் சரிக்க இடம் கொடுக்கவில்லை. முழங்காலைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார். மனம் மட்டும் தொடர்பற்ற பல பழைய நிகழ்ச்சிகளைத் தொட்டுத் தொட்டுத் தாவிக் கொண்டிருந்தது.

பொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத் தலையில் சுமடு எடுத்துச் செல்லும் பெண்கள், வர்த்தகத்தில் சற்றுச் செயலிருந்ததால் கை வண்டியில் காய்கறி ஏற்றி நரவாகன சவாரி செய்யும் பெண்களின் குரல் பிள்ளையவர்களை நினைவுக் கோயிலிலிருந்து விரட்டியது. உள்ளே சென்று குனிந்து கவனித்தார். கொடுங்கையாக மடித்து, கன்னத்துக்கு அண்டை கொடுத்து, உதடுகள் ஒருபுறம் சுழிக்க, அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

எழுந்திருந்ததும் வயிற்றிற்கு ஏதாவது சுடச்சுடக் கொடுத்தால் நலம் என்று நினைத்தவராய் உள்கட்டுக்குச் சென்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, புழைக்கடைப்புறம் சென்றார்.

அவர் திரும்பிவந்து “முருகா” என்று விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டிருக்கையில், செல்லம்மாள் விழித்து எழுந்திருந்து படுக்கையில் உட்கார்ந்து தலையை உதறிக் கோதிக் கட்டிக் கொண்டு சிணுங்கிய வண்ணம் உள்ளே ஏறிட்டுப் பார்த்தாள்.

“இப்பொ எப்படி இருக்கு? நல்லாத் தூங்கினெ போல இருக்கே” என்றார் பிரமநாயகம் பிள்ளை.

“மேலெல்லாம் அடிச்சுப் போட்டாப்பலே பெலகீனமா இருக்கு. பசிக்கிது… சுடச்சுட ஏதாவது இருந்தாத் தேவலை” என்று செல்லம்மாள், தலையைச் சற்று இறக்கி, உச்சியைச் சொறிந்தபடி, புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள்.

“அடுப்பிலே கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத் தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது; பல் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா?” என்றார்.

“வெந்நியெ எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான் போய்த் தேச்சுக்கிடுதேன்” என்றாள் செல்லம்மாள்.

“நல்ல கதையாத்தான் இருக்கு; நேத்துக் கெடந்த கெடப்பெ மறந்து போனியா? நடமாடப் படாது.”

“ஒங்களுக்குத்தான் என்ன, வரவர அசிங்கம் கிசிங்கம் இல்லாமெப்போகுது” என்று சொல்லிக் கொண்டே சுருட்டி வாரிக் கட்டிக் கொண்டு எழுந்தாள். கால் தள்ளாடியது.

மூசுமூசென்று இரைத்துக் கொண்டு சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டாள். பிரமநாயகம் பிள்ளை சட்டென்று பாய்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டார்.

“பைய என்னைப் பொறவாசலுக்குக் கொண்டு விட்டிருங்க. பல்லைத் தேக்கட்டும். நிக்க முடியல்லே” என்றாள்.

அவளுடைய விதண்டாவாதத்துக்குப் போக்குக் கொடுத்து, கைத்தாங்கலாகப் புழைக்கடையில் கொண்டுபோய் அவளை உட்கார வைத்தார்.

பல்லைத் தேய்த்துவிட்டு, “அப்பாடா” “அம்மாடா” என்ற அங்கலாய்ப்புகளுடன் செல்லம்மாள் மீண்டும் படுக்கையில் வந்து படுப்பதற்குள் உடல் தளர்ந்துவிட்டது. படுத்தவுடன் தளர்ச்சியாகக் கண்களை மூடினாள்.

பிள்ளையவர்கள் காப்பி எடுத்துவந்து ஆற்றிக்கொண்டு, “பதமாக இருக்கு, குடி; ஆறிப்போச்சுன்னு சொல்லாதே” என்றார். அதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. கையமர்த்தினாள். சில நிமிஷங்கள் கழித்து மெதுவாகக் கண்களைத் திறந்தாள். சிரமத்துடன் கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். தம்ளரிலிருந்த காப்பியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “சூடே இல்லையே! அடுப்பிலே கங்கு கெடக்கா? கொஞ்சம் வச்சு எடுத்து வாருங்க” என்றாள்.

“அதெ அப்பிடியே வச்சிறு; வேறெ சூடா இருக்கு; தாரேன்” என்று வேறு ஒரு பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்து தந்தார்.

காப்பியை எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக்கொண்டு, சாவகாசமாக ஒவ்வொரு மிடறாகக் குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், “நீங்க என்ன சாப்பிட்டிய?” என்றாள்.

“பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ காப்பியைச் சீக்கிரம் குடி. நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்கிட்டு வாரேன்” என்றார்.

“வைத்தியனும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். எனக்கு என்ன இப்ப? வீணாக் காசெக் கரியாக்காதிக. புளிப்பா எதுவும் தின்னாத் தேவலை. புளிச்ச தோசைமாவு இருந்துதே, அதெ என்ன பண்ணிய?” என்றாள்.

“புளிப்பாவது கத்திரிக்காயாவது? காப்பியைக் குடிச்சுப்பிட்டுப் படுத்திரு. நான் வைத்தியனைக் கூட்டிக்கிட்டு வாரேன்; நேத்துக் கெடந்த கெடப்பு மறந்து போச்சுப் போலே!” என்று எழுந்தார்.

“அந்தக் காப்பியை ஏன் வீணாக்கிறிய? நீங்க சாப்பிடுங்களேன்” என்றாள் செல்லம்மாள்.

வைத்தியனைத் தேடிச் சென்ற பிரமநாயகம் பிள்ளை, பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார். இருவரும் உள்ளே நுழைந்தபோது படுக்கையில் செல்லம்மாளைக் காணவில்லை.

அடுப்பங்கரையில் ‘சுர்’ ‘சுர்’ என்று தோசை சுடும் சப்தம் கேட்டது. வைத்தியரைப் பாயை விரித்து உட்காரவைத்துவிட்டு, “என்னத்தைச் சொன்னாலும் காதுலே ஏறமாட்டேன்கிறதே; இன்னம் என்ன சிறுபிள்ளையா?” என்று குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் பிள்ளை.

வேர்க்க விறுவிறுக்க, செல்லம்மாள் தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கை நடுக்கத்தால் தோசை மாவு சிந்திக் கிடந்தது. தட்டத்தில் ஒரு தோசை கரிந்து கிடந்தது. அடுத்தது வாக்காக வரும் என்று எண்ணெய் மிளகாய்ப் பொடி முதலிய உபகரணங்களுடன் தோசைக் கல்லைப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மாள். அவரை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தாள்.

“போதும் போதும். சிரிக்காதே; வைத்தியர் வந்திருக்கிறார். ஏந்திரி” என்று அவளைக் கையைப் பிடித்துத் தூக்கினார்.

“இதெக் கல்லை விட்டு எடுத்துப் போட்டு வருகிறேன்.”

“நீ ஏந்திரி” என்று சொல்லிக்கொண்டே வெந்து கொண்டிருந்த தோசையுடன் கல்லைச் சட்டுவத்தால் ஏந்தி எடுத்து அகற்றினார்.

“நீங்க போங்க. நானே வருதேன்” என்று குலைந்த உடையைச் சீர்திருத்திக்கொண்டு, தள்ளாடிப் பின் தொடர்ந்து வந்து பாயில் உட்கார்ந்தாள்.

வைத்தியன் நாடியைப் பரீட்சித்தான். நாக்கை நீட்டச் சொல்லிக் கவனித்தான்.

“அம்மா, இப்படி இருக்கிறபோது நீங்க எழுந்திரிச்சு நடக்கவே கூடாது. உடம்பு இத்துப் போச்சு. தெகன சக்தியே இல்லியே! இன்னும் மூணு நாளைக்கு வெறும் பால் கஞ்சிதான் ஆகாரம். உடம்புக்கு வலு கொஞ்சம் வந்ததும் மருந்து கொடுக்கலாம். காப்பியைக் கொஞ்ச நாளைக்கி நிறுத்தி வையிங்க. காலையிலும் ராத்திரியிலும் பால். மத்தியான்னமாக் கஞ்சி. படுக்கையெ விட்டு எந்திரிக்கவே கூடாது. ஐயா, மயக்கம் வந்தா இந்தச் செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கிலெ தடவுங்க. இந்தத் தைலத்தை மூக்குத் தண்டிலும் பொட்டிலும் தடவுங்க; நான் மூணு நாள் கழிஞ்சு வருகிறேன்” என்று மருந்துக்குக் கையில் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு வெளியேறினான்.

“பாத்துப் பாத்து, நல்ல வைத்தியனைத் தேடிப் புடிச்சாந்திய; பால் கஞ்சிச் சாப்பிடணுமாம்; ஆய்! நான் என்ன காச்சக்காரியா? ஒடம்பிலே பெலகீனம் இருக்கிறதெக் கண்டுபிடிக்க வைத்தியனா வரணும்? மனுசான்னா மயக்கம் வாறதில்லையா! வந்தா, வந்த வளியாப் போகுது” என்றாள் செல்லம்மாள்.

இந்தச் சமயத்தில் வெளியில், “ஐயா, ஐயா!” என்று ஒரு குரல் கேட்டது.

“என்ன, முனுசாமியா! உள்ளே வா. ஏன் வரலேன்னு கேட்டு விட்டாகளாக்கும். வீட்டிலே அம்மாவுக்கு உடம்பு குணமில்லே; நேத்துத் தப்பினது மறு பிழைப்பு; நாளைக்கு முடிஞ்சா வருகிறேன் என்று சொல்லு. முனிசாமி, நீ எனக்கு ஒரு காரியம் செய்வாயா? அந்த எதிர்ச் சரகத்திலே ஒரு மாட்டுத் தொழுவம் இருக்குது பாரு; அங்கே பால்கார நாயுடு இருப்பார். நான் கொஞ்சம் கூப்பிட்டேன் என்று கூட்டிக்கொண்டு வா” என்று அனுப்பினார்.

“என் பேரிலே பளியெப் போட்டுக் கடைக்குப் போகாமே இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தெ வாங்கிக்கிட்டு வாருங்க” என்றாள் செல்லம்மாள்.

“அடெடே! மறந்தே போயிட்டேன். நேத்துப் பொடவை எடுத்தாந்து வச்சேன்; உனக்கு எது புடிச்சிருக்கு பாரு. வேண்டாததெக் குடுத்து அனுப்பிடலாம்” என்று மூட்டையை எடுத்து வந்து வைத்தார் பிரமநாயகம் பிள்ளை.

“விடியன்னையே மூட்டையைப் பாத்தேன்; கேக்கணும்னு நெனச்சேன்; மறந்தே போச்சு” என்று கூறிக்கொண்டே மூட்டையிலிருந்த மூன்று புடைவைகளையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்.

“எனக்கு இந்தப் பச்சைதான் புடிச்சிருக்கு; என்ன வெலையாம்?” என்றாள்.

“அதெப்பத்தி ஒனக்கென்ன? புடிச்சதெ எடுத்துக்கோ” என்று பச்சைப் புடைவையை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு, மற்ற இரண்டையும் மூட்டையாகக் கட்டிச் சுவரோத்தில் வைத்தார்.

“கண்டமானிக்குக் காசெச் செலவு பண்ணிப்புட்டு, பின்னாலே கண்ணைத் தள்ளிக்கிட்டு நிக்காதிய. நான் இப்பவே சொல்லிப் பிட்டேன்” என்று கண்டிப்புப் பண்ணினாள் செல்லம்மாள்.

வந்த பால்கார நாயுடுவிடம் மூன்று தினங்களுக்குச் சுத்தமான பசும்பாலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, கடை முதலாளியிடம் தாம் கேட்டதாக ரூ.15 வாங்கி வரும்படியும், சேலை மூட்டையைச் சேர்ப்பித்து விடும்படியும் முனிசாமியிடம் சொல்லியனுப்பினார்.

அன்று பாயில் தலை சாய்க்க ஆரம்பித்ததிலிருந்து செல்லம்மாளுக்கு உடம்பு மோசமாகிக் கொண்டே போயிற்று. க்ஷீணம் அதிகமாயிற்று. மத்தியான்னம் அவளைக் கவனித்துச் சுச்ருஷை செய்ததன் பயனாக, அடுப்பில் கிடந்த பால் கஞ்சி, பசை மாதிரிக் குளு குளு என்றாகிவிட, பிரமநாயகம் பிள்ளை அதில் வெந்நீரை விட்டுக் கலக்கி அவளுக்குக் கொடுக்க முயன்றார். பலவீனத்தினால் அரோசிகம் அதிகமாகிவிடவே உடனே வாந்தி எடுத்து விட்டது. ஆனால் குமட்டல் நிற்கவில்லை. செல்லம்மாள் நினைத்து நினைத்து வாயிலெடுக்க ஆரம்பித்தாள். உடல் தளர்ச்சி மிகுந்துவிட, மறுபடியும் பழைய கோளாறுகள் தலை தூக்க ஆரம்பித்தன.

அருகில் இருந்து கொண்டு காலையும் கையையும் பிடித்துப் பிடித்துக் கை ஓய்ந்ததுதான் மிச்சம். பகல் மூன்று மணிக்கெல்லாம் சோர்வு மேலீட்டால் செல்லம்மாள் மயங்கிக் கிடந்தாள். செத்துப் போய் விடுவோமோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு சமயங்களில் மூக்கும் கையும் குரக்கு வலித்து இழுத்து வாங்க ஆரம்பித்தன.

“எனக்கு என்னவோ ஒரு மாதிரியாக வருது, வேறொரு வைத்தியனைப் பார்த்தால் தேவலை” என்றாள் செல்லம்மாள்.

“உடம்பு தளர்ந்திருப்பதால் இப்படி இருக்கிறது. சொல்லுகிறபடி, ஆடாமெ அசங்காமெ படுத்துக் கிடந்தாத்தானே! பயப்பட வேண்டாம்; எல்லாம் சரியாகப் போயிடும்” என்றார் பிரமநாயகம் பிள்ளை.

அவருக்கும் உள்ளுக்குள் சற்று விபரீதமாகப் பட்டது. “கொஞ்ச நேரத்தில் பால்காரன் வருவான். பாலை வாங்கி வைத்துவிட்டு டாக்டரைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன். குன்னத்தூர் அத்தையெ வரச்சொல்லிக் காயிதம் எழுதட்டா?” என்றார்.

“எளுதி என்னத்துக்கு? அவளாலே இந்தத் தூரா தொலைக்குத் தன்னந்தனியா வந்துக்கிட முடியுமா? கொஞ்சம் கருப்பட்டிக் காப்பி சுடச்சுடப் போட்டுத் தாரியளா? இந்த வாந்தியாவது செத்தெ நிக்கும்” என்று சொல்லிவிட்டுச் சற்று கண்ணை மூடினாள்.

“இந்த மாங்கொட்டைத் துண்டெக் கொஞ்சம் வாயிலே ஒதுக்கிக்கோ; நான் காப்பி போட்டுத் தாரேன்” என்று அடுப்பங்கரைக்குச் சென்றார்.

அவர் அடுப்பைப் பிரித்துவிட்டு அனலில் சற்று வெந்நீர் இடலாம் என்று தவலைத் தண்ணீரை அடுப்பேற்றும்போது பால்காரனும் வந்தான்.

கருப்பட்டிக் காப்பியைச் செல்லம்மாள் அருகில் வைத்துவிட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டு, “நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று வெளியே புறப்பட்டார்.

“சுருங்க வந்து சேருங்க; எனக்கு ஒருபடியா வருது” என்று மூடிய கண்களைத் திறக்காதபடி சொன்னாள் செல்லம்மாள். அவ்வளவு தளர்ச்சி. வெளிக்கதவு கிறீச்சிட்டு, பிரமநாயகம் பிள்ளை புறப்பட்டுவிட்டதை அறிவித்தது.

அவர் திரும்பி வரும்போது பொழுது கருக்கிவிட்டது. எவரோ ஓர் ஒன்றரையணா எல்.எம்.பி.யின் வீட்டு வாசலில் அவரது வருகைக்காகக் காத்துக் காத்து நின்றார். அவரும் வருவதாகக் காணவில்லை. கவலை, கற்பனையால் பல மடங்கு பெருகித் தோன்ற, நிலைமையும் விலாசமும் தெரிவித்து, உடனே வரும்படி கெஞ்சிக் கடுதாசி எழுதிவைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார்.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. செல்லம்மாள் முற்றத்தில் மயங்கிக் கிடந்தாள். சற்று முன் குடித்த காப்பி வாந்தியெடுத்துச் சிதறிக் கிடந்தது.

அவசர அவசரமாக விளக்கை ஏற்றினார். வெந்நீரை எடுத்து வந்து அவள் மேல் சிதறிக் கிடந்த குமட்டல்களைக் கழுவி, அவளைத் தூக்கிவந்து படுக்கையில் கிடத்தினார்.

வைத்தியன் கொடுத்துவிட்டுச் சென்ற செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கில் தடவினார். மூக்கிலும், கால் கைகளிலும் தைலத்தைத் தடவினார். பிரக்ஞை வரவில்லை. மூச்சு இழையோடிக்கொண்டிருந்தது. மீண்டும் தைலத்தைச் சற்றுத் தாராளமாகவிட்டு உடலில் தேய்த்து மயக்கம் தெளிவிக்க முயன்றுகொண்டிருந்தார்.

அச்சமயம் வெளியே ஒரு ரிக்ஷா வந்து நின்றது. “ஸார்! உள்ளே யார் இருக்கிறது?” என்று குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார்.

“நல்ல சமயத்தில் வந்தீர்களையா!” என்று சொல்லிக்கொண்டே அவரை வரவேற்றார் பிரமநாயகம் பிள்ளை.

“இப்போ என்ன?” என்றபடியே அருகில் வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்தார். வாயைத் திறக்க முயன்றார். பல் கிட்டிவிட்டிருந்தது.

“ஒரு நெருப்புப் பெட்டி இருந்தாக் கொண்டு வாருங்க; ஊசி குத்தணும்” என்றார்.

பிரமநாயகம் பிள்ளை அருகில் மாடத்தில் இருக்கும் நெருப்புப் பெட்டியை மறந்துவிட்டு அடுப்பங்கரைக்கு ஓடினார். அவரது வருகைக்காகக் காத்திருப்பதற்காக மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு மாடத்து நெருப்புப் பெட்டி தெரிந்தது. எடுத்து ‘ஸ்பிரிட்’ விளக்கை ஏற்றி மருந்து குத்தும் ஊசியை நெருப்பில் சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப் பெட்டியுடன் அசடு வழிய வேர்வை வழிய நின்று கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளையிடம், இடது கையைச் சற்று விளக்கருகில் தூக்கிப் பிடித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, மருந்தைக் குத்தி ஏற்றினார். இரண்டொரு விநாடிகள் இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

செல்லம்மாள் சிணுங்க ஆரம்பித்தாள்.

டாக்டர் மெதுவாகத் தம்முடைய கருவிகளை எடுத்துப் பெட்டியில் வைத்தார். “கொஞ்சம் சீயக்காய்ப் பொடி இருந்தால் கொடுங்கோ” என்று கேட்டார். பிரமநாயகம் பிள்ளை வேட்டி துவைக்கும் வெள்ளைச் சவுக்காரக் கட்டியைக் கொடுக்க, மௌனமாகக் கை கழுவிவிட்டு, “தூங்குகிறாப் போலிருக்கிறது. எழுப்ப வேண்டாம். எழுந்தால் பால் மட்டும் கொடுங்கள்; இம்மாதிரிக் கேஸ்கள் வீட்டில் வைத்திருப்பது சவுகரியக் குறைச்சல் ஐயா; ஆஸ்பத்திரிதான் நல்லது” என்று கூறிக்கொண்டே பெட்டியைத் தூக்கிக் கொண்டு எழுந்து நடந்தார்.

முன் தொடர்ந்த பிள்ளை, “எப்படி இருக்கிறது?” என்று விநயமாகக் கேட்க, “இப்பொழுது ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எதற்கும் நாளை காலை வந்து என்னிடம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்; பிறகு பார்ப்போம்; இந்த ரிக்ஷாக்காரனுக்கு ஒரு நாலணா கொடுங்கள்” என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறிக்கொண்டார். மடியிலிருந்த சில்லறை மனித மாட்டின் மடிக்கு மாறியது. ரிக்ஷா செல்லுவதைப் பார்த்து நின்றுவிட்டு உள்ளே திரும்பினார்.

செல்லம்மாள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

பிரமநாயகம் பிள்ளை ஓசைப்படாமல் அருகில் வந்து உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். தொட்டால் விழித்து விடுவாளோ என்ற அச்சம்.

அவளுடைய நெஞ்சின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. மென்மையான துணியின் மேல் அதற்கு உட்கார்ந்திருக்கப் பிரியம் இல்லை. மறுபடியும் பறந்து வட்டமிட்டு, அவளது உள்ளங்கையில் உட்கார்ந்தது. மறுபடியும் பறந்து, எங்கு அமர்வது என்று பிடிபடாதது போல வட்டமிட்டுப் பறந்தது. கடைசியாக அவளுடைய உதட்டின் மேல் உட்கார்ந்தது.

“தூ தூ” என்று துப்பிக்கொண்டு உதட்டைப் புறங்கையால் தேய்த்தபடி செல்லம்மாள் விழித்துக் கொண்டாள்.

சற்று நேரம் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உங்களுக்குக் கொஞ்சங்கூட இரக்கமே இல்லை. என்னை இப்படிப் போட்டுட்டுப் போயிட்டியளே” என்று கடிந்து கொண்டாள்.

“நான் இல்லாமலிருக்கப்போ நீ ஏந்திரிச்சு நடமாடலாமா?” என்று சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தைத் தடவிக்கொடுத்தார்.

“நான் செத்துத்தான் போவேன் போலிருக்கு; வீணாத் தடபுடல் பண்ணாதிய” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடினாள்.

“உடம்பில் தளர்ச்சியாக இருக்கிறதால் தான் அப்படித் தோணுது; காலைப் பிடிக்கட்டா?” என்று மெதுவாகத் தடவிக்கொடுத்தார்.

“அப்பாடா! மேலெல்லாம் வலிக்குது. உள்ளுக்குள்ளே ஜில்லுன்னு வருது. என் கையைப் புடிச்சிக்கிட்டுப் பக்கத்திலேயே இருங்க” என்று அவர் கையைச் செல்லம்மாள் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.

சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு, “அம்மையெப் பாக்கணும் போல இருக்கு” என்று கண்களைத் திறக்காமலே சொன்னாள்.

“நாளைக்கு உடனே வரும்படி தந்தி கொடுத்தாப் போகுது; அதுக்கென்ன பிரமாதம்?” என்றார் பிள்ளை. அவருக்குப் பயம் தட்டியது. பிரக்ஞை தடம் புரண்டுவிட்டதா?

“ஊம், துட்டெ வீணாக்க வேண்டாம். கடுதாசி போட்டால் போதும். அவ எங்கெ வரப்போறா? நாளைக்காவது நீங்க கடைக்குப் போங்க” என்றாள் செல்லம்மாள்.

“நீ கொஞ்சம் மனசெ அலட்டிக்காமே படுத்துக்கோ” என்று சொல்லிக்கொண்டே அவள் கைப்பிடிப்பிலிருந்து வலது கையை விடுவித்துக்கொண்டு நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.

“வலிக்குது. தாகமாக இருக்கு, கொஞ்சம் வெந்நி” என்றாள்.

“வெந்நி வயத்தைப் பெரட்டும்; இப்பந்தானே வாந்தியெடுத்தது?” என்றார். மெதுவாக அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். செல்லம்மாளுக்குக் காலையிலிருந்த முகப்பொலிவு மங்கிவிட்டது. உதடுகள் சற்று நீலம் பாரித்துவிட்டன. அடிக்கடி வறட்சியைத் தவிர்க்க உதட்டை நக்கிக் கொண்டாள்.

“நெஞ்சில் என்னமாவோ படபடவென்று அடிக்குது” என்றாள் மறுபடியும்.

“எல்லாம் தளர்ச்சியின் கோளாறுதான்; பயப்படாதே” என்று நெஞ்சைத் தடவிக்கொடுத்தார்.

ஒரு விநாடி கழித்து, “பசிக்குது; பாலைத் தாருங்க. நான் தூங்குதேன்” என்றாள் செல்லம்மாள்.

“இதோ எடுத்து வாரேன்” என்று உள்ளே ஓடிச் சென்றார் பிரமநாயகம் பிள்ளை. பால் திறைந்து போயிருந்தது. அவருக்குத் திக்கென்றது. மாடத்திலே உலர்ந்துபோன எலுமிச்சம்பழம் இருந்தது. அதை எடுத்து வெந்நீரில் பிழிந்து சர்க்கரையிட்டு அவளருகில் கொண்டுவந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். சற்று நேரம் சூடான பானகத்தைக் குடிக்கும் பக்குவத்துக்கு ஆற்றினார்.

“செல்லம்மா!” என்று மெதுவாகக் கூப்பிட்டார்.

பதில் இல்லை. மூச்சு நிதானமாக வந்து கொண்டிருந்தது.

“செல்லம்மா, பால் தெரைஞ்சு போச்சு; பானகம் தாரேன். குடிச்சுப்புட்டுத் தூங்கு” என்றார்.

“ஆகட்டும்” என்பது போல அவள் மெதுவாக அசைத்தாள்.

சிறு தம்ளரில் ஊற்றி மெதுவாக வாயில் ஊற்றினார். இரண்டு மடக்குக் குடித்துவிட்டுத் தலையை அசைத்துவிட்டாள்.

“ஏன், வெளக்கை…” – விக்கலுடன் உடல் குலுங்கியது. நெஞ்சு விம்மி அமர்ந்தது. காலும் கையும் வெட்டி வாங்கின.

அதிர்ச்சி ஓய்ந்ததும் பிள்ளை பானகத்தைக் கொடுத்தார். அது இருபுறமும் வழிந்துவிட்டது.

பாத்திரத்தை மெதுவாக வைத்துவிட்டுத் தொட்டுப் பார்த்தார்.

உடல்தான் இருந்தது.

வைத்த கையை மாற்றாமல் பூதாகாரமாகச் சுவரில் விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப் பிடுங்குவனபோல் இருந்தன.

சித்த வைத்தியன் கொடுத்த மருந்தில் மிஞ்சிக் கிடந்தவற்றை உடம்பில் பிரயோகித்துப் பார்த்தார். “இனிமேல் ஆவது ஒன்றுமில்லை” என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம் கொடுத்துப் பார்த்தார்.

அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண் இமையில் சொட்டியது.

அரைக்கண் போட்டிருந்த அதை நன்றாக மூடினார். குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக் கிடத்தினார். கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார்.

அருகில் உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில் தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின் அழைப்புக் கேட்டது.

உள்ளே சென்று செல்லம்மாள் எப்போதும் குளிக்கும் பருவத்துக்குப் பக்குவப்படுத்தினார்.

உடலை எடுத்து வந்தார். “செல்லம்மாள் இவ்வளவு கனமில்லையே; என்னமாக் கனக்கிறது!” என்று எண்ணமிட்டார்.

தலை வசப்படாமல் சரிந்து சரிந்து விழுந்தது.

கீழே உட்காரவைத்து, நின்று தமது முழங்காலில் சாய்த்து வைத்துத் தவலைத் தண்ணீர் முழுவதையும் விட்டுக் குளிப்பாட்டினார். மஞ்சள் இருக்குமிடம் தெரியாததனால் அதற்கு வசதி இல்லாமற் போய்விட்டது. மேல்துணியை வைத்து உடலைத் துவட்டினார்.

மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார். அவளுக்கு என வாங்கிய பச்சைப் புடவையை அந்த உடலில் சுற்றிக் கட்டப்பட்டது. நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டார். தலைமாட்டினருகில் குத்துவிளக்கை ஏற்றிவைத்தார். எப்பொழுதோ ஒரு சரஸ்வதி பூஜைக்கு வாங்கின சாம்பிராணி ஞாபகம் வந்தது. கனல் எடுத்து வந்து வைத்துப் பொடியைத் தூவினார். நிறை நாழி வைத்தார்.

செல்லம்மாள் உடம்புக்குச் செய்யவேண்டிய பவித்திரமான பணிவிடைகளைச் செய்து முடித்துவிட்டு அதையே பார்த்து நின்றார்.

கூடத்தில் மூச்சுத் திணறுவது போல் இருந்தது. வெளிவாசலுக்கு வந்து தெருவில் இறங்கி நின்றார்.

ஊசிக் காற்று அவர் உடம்பை வருடியது.

வானத்திலே தெறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்குக் கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம் தெரியாது. சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக் கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கவோ உதயமாகவோ முடியாமல் தவித்தது.

அருகில், “ஐயா!” என்றான் முனிசாமி.

“முதலாளி குடுத்தாங்க” என்று நோட்டுகளை நீட்டினான்; “அம்மாவுக்கு எப்படி இருக்கு?” என்றான்.

“அம்மா தவறிப் போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக் குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு. வரும்போது அம்பட்டனுக்கும் சொல்லிவிட்டு வா” என்றார்.

நிதானமாகவே பேசினார்; குரலில் உளைச்சல் தொனிக்கவில்லை.

பிரமித்துப்போன முனிசாமி தந்தி கொடுக்க ஓடினான்.

பிரமநாயகம் பிள்ளை உள்ளே திரும்பி வந்து உட்கார்ந்தார். கனலில் மீண்டும் கொஞ்சம் சாம்பிராணியைத் தூவினார்.

அந்த ஈ மறுபடியும் அந்த உடலின் முகத்தில் வட்டமிட்டு உட்கார்ந்தது.

பிரமநாயகம் பிள்ளை அதை உட்காரவிடாமல் விரட்டுவதற்கு விசிறியால் மெதுவாக வீசிக்கொண்டே இருந்தார்.

அதிகாலையில், மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம் தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச் சங்கு பிலாக்கணம் தொடுத்தது.செல்லம்மாள்
- புதுமைப்பித்தன்

செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு அறுநூறு மைல் தூரத்திலே, பட்டணத்துத் தனிமையிலே மாண்டு போனாள்.

நெற்றியில் வியர்வை ஆறாகப் பொழிந்து கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, கையிலிருந்த தவிட்டு முடிப்பைச் சற்று எட்ட வைத்துவிட்டு, செல்லம்மாளாக இருந்த அந்த உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சற்று அரைக்கண் போட்டபடி திறந்திருந்த இமைகளை மூடினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வசமிழந்து கிடந்த கைகளை எடுத்து நெஞ்சின் மேல் மடித்து வைத்தார். இடது கால் சற்று ஒரு புறமாக மடிந்து கோணியிருந்தது. அதை நிமிர்த்தி, இரண்டு கால்களையும் சேர்த்துவைத்துக் கிடத்தினார். வாயிதழ் சற்றுத் திறந்திருந்தது. அதையும் மூடினார். செல்லம்மாள் இறந்துவிட்டாள் என்று உள்மன உணர்ச்சி இருந்ததே ஒழிய, ஸ்பரிசத்தில் அவருக்குப் புலப்படவில்லை. அப்பொழுதுதான் மூச்சு அடங்கியது.

ஒரு பெரும்பளுவை இறக்கிக் கழுத்துக்கு ஆசுவாசம் கொடுப்பது போலவே, அவரது மனசிலிருந்து பெரும்பளு இறங்கியது. மனசிலே, மரணப் பிரிவினால் துன்பப் பிரவாகம் மதகுடைத்துக் கொண்டு பெருகி அவரை நிலைகுலையச் செய்யவில்லை. சகதர்மிணியாக இருந்த ஒரு ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது என்பதிலே அவருடைய மனசுக்கு ஒரு நிம்மதி.

பிரமநாயகம் பிள்ளைக்கு மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டது. சாவின் சாயையிலே அவரது மனம் நிலை குலையவில்லை. அதனால் பிரமநாயகம் பிள்ளையைப் பந்தவினையறுத்த யோகி என நினைத்து விடக் கூடாது; அல்லது, அவரது மனசுக்கு வேலி போட்டுப் பாதுகாத்து வளர்த்து, ‘போதி’ மரம் வரையில் கொண்டுவிடும் ஞானமிகுந்த சுத்தோதனப் பெருந்தகையல்ல அவரது பிதா. வறுமை, நோய், சாக்காடு மூன்றையும் நேரில் அநுபவித்தவரே.

பிரமநாயகம் பிள்ளை வாழ்வின் மேடுபள்ளங்களைப் பார்த்திருக்கிறார் என்றால், அவர் ஏறிய சிறுசிறு மேடுகள் யாவும் படிப்படியாக இறங்கிக் கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளேயாகும். வாழ்வு என்ற ஓர் அநுபவம் அவருக்கு ஏற்படும்போது அவர் மேட்டிலிருந்துதான் புறப்பட்டார்.

குடும்பத்தின் சகல செலவுகளுக்கும் வருஷந்தோறும் வருமானம் அளிக்கும் நிலபுலன்களைப் பங்கிட்டால், பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்ளக்கூடிய அளவு துண்டுகளாகப் பாகப் படுத்துவதை அவசியமாக்கும் அளவுக்கு வம்ச விருத்தி உடையவர் பிரமநாயகம் பிள்ளையின் பிதா.

பிரமநாயகம் பிள்ளை நான்காவது குழந்தை. சிறு வயசில் படிப்பில் சற்றுச் சூடிகையாக இருந்ததால், மற்றவர்களுக்குக் கையெழுத்து வாசிக்கும்வரையில் கைகாட்டிவிட்டு அவரைப் படிப்பித்தார் அவர் தகப்பனார். அவருக்கு இருந்த பொருள் வசதி, மகன் ஊரைவிட்டு ஐந்நூறு அறுநூறு மைல் எட்டி வந்தும், பட்டினி கிடக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளக் கூடிய அளவுக்கே கல்வி வசதி அளித்தது. உற்ற பருவத்தில் பிரமநாயகம் பிள்ளைக்குச் செல்லம்மாள் கையைப் பிடித்து, அம்மி மிதித்து அருந்ததி பார்க்க வைக்கும் பாக்கியம் கிடைத்தது.

பிரமநாயகம் பிள்ளையின் தகப்பனார் காலமானார். சொத்து பாகமாயிற்று. குடும்பக் கடன் விவகாரம் வியாச்சிய எல்லையை எட்டாதபடி மூத்தவர் இருந்த சமாளிக்க, பிரமநாயகம் பிள்ளை ஜீவனோபாயத்துக்காகச் செல்லம்மாளைக் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து தஞ்சம் புகுந்தார்.

சென்னை அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்து அக்கினிப் பரீட்சை செய்தது. செல்லம்மாள் வீட்டிலே அவருக்கு நிம்மதியற்ற வாழ்வைக் கொடுத்துச் சோதித்தாள்; குணத்தினால் அல்ல, உடம்பினால். அவளுக்கு உடம்பு நைந்துவிட்டது. பிள்ளைக்கு வெளியில் சதா தொல்லை. வீட்டிலே உள்ளூர அரிக்கும் ரணம்.

பிரமநாயகம் பிள்ளை ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்க்கிறார். ஜவுளிக்கடை முதலாளி, ஒரு ஜோடி ஜீவன்கள் உடலைக் கீழே போட்டுவிடாமல் இருக்கவேண்டிய அளவு ஊதியம் தருகிறார். செல்லம்மாளின் வியாதி அதில் பாதியைத் தின்றுவிடுவதுடன் கடன் என்ற பெயரில் வெளியிலும் படருகிறது.

பிரமநாயகம் பிள்ளைக்கு மனசில் எழும் தொல்லைகள், முதலில் ரணம் காட்டி, பிறகு ஆறி மரத்துப் போன வடுவாகிவிட்டன. சம்பளத்தேதி என்று ஒன்று இல்லை. தேவையான போது வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது சம்பிரதாயம். அதாவது தேவையை முன்கூட்டி எதிர்பார்த்து, அதற்காக முதலாளியின் மனசைப் பக்குவமடையச் செய்து, பிறகு தினசரி இடைவிடாமல் கேட்டுக் கேட்டு, வழக்கம்போல இன்றும் கிடைக்காது என்ற மன ஓய்ச்சலுடன் கேட்கும்போது, நிதானத்தைக் குலைக்கும்படியாக அவர் கொடுத்து விடுவதைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புவதே அவர் வேலை பார்க்கும் ஸ்தாபனத்தின் வளமுறை.

இப்படியாக, மாதம் முழுவதும் தவணை வாரியாகத் தேவைகளைப் பிரித்து, ஒரு காரியத்துக்காக எதிர்பார்த்த தொகையை அத்தியாவசியமாக முளைத்த வேறு ஒன்றுக்காகச் செலவழித்துவிட்டு, பாம்பு தன் வாலைத் தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளைத் தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவணை என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.

செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று. இடைவிடாத மன உளைச்சலும் பட்டினியும் சேர்ந்து நோய் அவளைக் கிடத்திவிடும். காலையில் கண்ட ஆரோக்கியம் மாலையில் அஸ்தமித்துவிடும். இதை முன்னிட்டும் சிக்கனத்தை உத்தேசித்தும் பிரமநாயகம் பிள்ளை நகரின் எல்லை கடந்து, சற்றுக் கலகலப்புக் குறைவாக உள்ள, மின்சார வசதி இல்லாத இடத்தில் வசித்து வந்தார். அதிகாலையில் பசியை ஆற்றிக் கொண்டு கைப் பொட்டணத்துடன் கால் நடையாகவே புறப்பட்டுத் தமது வயிற்றுப் பிழைப்பின் நிலைக்களத்துக்கு வந்துவிடுவார்.

பிறகு அங்கிருந்து நன்றாக இருட்டி, செயலுள்ளவர்கள் சாப்பிட்டுக் களைப்பாறும் தருணத்தில் வீட்டு நடையை மிதிப்பார். செல்லம்மாள் அன்றைப் பொழுதைக் கழித்த நிலைதான் அவரது சாப்பாட்டுக்கு மூலாதார வசதி. வரும்போது வீடு இருட்டி, வெளிவாசல் கதவு தாழிடாமல் சாத்திக் கிடந்தது என்றால் அவர் உள்ளே சென்று கால் முகம் கழுவி அநுட்டானாதிகளை முடித்துக் கொண்ட பிற்பாடு அடுப்பு மூட்டினால் தான் இரு ஜீவன்கள் பசியாறுவதற்கு மார்க்கம் உண்டு. அவர் வீடு அடையும் தருணத்தில் அந்தப் பிராந்தியத்துக் கடைகள் யாவும் மூடிக் கிடக்குமாகையால் வீட்டில் உள்ளதை வைத்துத்தான் கழிக்க வேண்டும். சில சமயங்களில் வீட்டில் உள்ளது என்பது காலியான பாத்திரங்கள் என்ற பொருட் பொலிவுக்குள் பந்தப்பட்டுக் கிடக்கும். அச்சமயங்களிலும் பிள்ளையவர்களின் நிதானம் குலைந்துவிடாது. வெந்நீர் வைத்தாவது மனைவிக்குக் கொடுப்பார்.

இப்படியாக, பிரமநாயகம் பிள்ளை சென்னையில் பத்து வருஷங்களையும் கழித்துவிட்டார். அவருக்கு ஒவ்வொரு சமயங்களில் ஊருக்குப் போய்விடுமோமா என்ற துணிச்சலான நினைவு தோன்றுவதும் உண்டு. ஆனால் அடுத்த நிமிஷம், சக்தியின்மை மனசில் ஆழ்ந்த ஏமாற்றத்தை, கைப்பை, தரையிட்டுவிடும். மேலும் அங்கு எப்படியெல்லாம் இருக்குமோ என்ற பயம் அவருடைய மனசை வெருட்டியது.

சங்கடங்களை நிவர்த்தித்துக் கொள்ளும் மார்க்கங்களைப் பற்றி அவர், அதோ கிடத்தி இருக்கிறதே அந்தச் சடலத்துடன், அதில் மூச்சு ஓடிக்கொண்டு பேசாத சில சமயங்களில், உல்லாசமாக ஊருக்குப் போய்விடுவதில் உள்ள சுகங்களைப் பற்றிப் பேசியதும் உண்டு. செல்லம்மாள், வறண்ட உதடுகளில் சில சமயம் உற்சாகமிகுதியால் களுக்கென்று சிரித்து வெடிப்பு உண்டு பண்ணிக் கொள்வாள். ஊர்ப் பேச்சு, தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் சௌகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது.

அன்று பிரமநாயகம் பிள்ளை அதிகாலையில் பழஞ்சோற்று மூட்டையுடன் நடைப்படியைத் தாண்டும்பொழுது செல்லம்மாளுக்கு எழுந்து நடமாட முடிந்தது. இரவு அவர் திரும்பும்போது திருப்தியுடன் சாப்பிட, அவருக்குப் பிரியமான காணத் துவையலும் ஒரு புளியிட்ட கறியும் வைக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, கையில் உமிக்கரிச் சாம்பலுடன் புழைக்கடைக்குச் சென்றாள்.

“இண்ணைக்கித்தான் சித்தெ தலெ தூக்கி நடமாடுதெ. வீணா உடம்பெ அலெட்டிக்கிடாதே” என்று நடைப்படியைத் தாண்டிய திரு. பிள்ளை திரும்பி நின்று மனைவியை எச்சரித்துவிட்டு, வெளிப் புறமாகக் கதவை இழுத்துச் சாத்தி, ஒரு கையால் அதைச் சற்றுப் பிடித்துச் சமன் செய்து, நிலைக்கும் கதவுக்கும் இருந்த இடைவெளியில் விரலை விட்டு உள்தாழ்ப்பாளைச் சமத்காரமாகப் போட்டார். பிறகு தாழ்ப்பாள் கொண்டியில் விழுந்துவிட்டதா என்பதைக் கதவைத் தள்ளிப்பார்த்து விட்டு, தெருவில் இறங்கி நடந்தார்.

அன்று வழி நெடுக அவரது மனசு கடைக்காரப் பிள்ளையின் மனப் பக்குவத்தையும் செல்லம்மாளின் அபிலாஷைகளையுமே சுற்றிச் சுற்றி வட்டமிட்டு வந்தது.

செல்லம்மாள், பேச்சின் போக்கில், அதாவது முந்திய நாள் இரவு, நெஞ்சு வலிக்கு ஒற்றடமிட்டுக்கொண்டிருக்கும்போது, “வருகிற பொங்கலுக்கு வீட்டு அரிசி சாப்பிடவேணும். ஊருக்கு ஒருக்க போய்ப்போட்டு வரலாம்; வரும்போது நெல்லிக்காய் அடையும், ஒரு படி முருக்க வத்தலும் எடுத்துக்கிட்டு வரணும்” என்று சொல்லி விட்டாள்.

பேச்சிலே வார்த்தைகள் மேன்மையாகத்தான் இருந்தன. அதைவிட அவள் புலிப் பால் கொண்டுவரும்படி கேட்டிருக்கலாம்; பிரம்ம வித்தை கற்று வரும்படி சொல்லியிருக்கலாம். அவை அவருக்கு எட்டாக் கனவாகப் பட்டிரா.

“அதற்கு என்ன, பார்த்துக் கொள்ளுவோமே! இன்னம் புரட்டாசி களியலியே; அதற்கப்புறமல்லவா பொங்கலைப் பற்றி நினைக்கணும்?” என்றார்.

“அது சதிதான்; இப்பமே சொன்னாத்தானே, அவுக ஒரு வளி பண்ணுவாக!” என்று அவகாச அவசியத்தை விளக்கினாள் செல்லம்மாள். ‘அவுக’ என்றது கடை முதலாளிப் பிள்ளையைத்தான்.

“தீபாவளிக்கு ஒங்க பாடு கவலையில்லே; கடையிலேயிருந்து வரும்; இந்த வருஷம் எனக்கு என்னவாம்?” என்று கேட்டாள்.

“எதுவும் உனக்குப் பிடித்தமானதாப் பாத்து எடுத்துப் போட்டாப் போச்சு. மொதல்லே நீ எளுந்து தலையைத் தூக்கி உக்காரு” என்று சிரித்தார் பிரமநாயகம்.

வழி நெடுக, ‘அவளுக்கு என்னத்தைப் பற்றுக் கணக்கில் எழுதிவிட்டு எடுத்துக் கொண்டு வருவது? பழைய பாக்கியே தீரவில்லையே! நாம் மேலும் மேலும் கணக்கேற்றிக் கொண்டே போனால் அநுமதிப்பார்களா?’ என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டே நடந்தார். கடைக்குள் நுழைந்து சோற்றுப் பொட்டணத்தையும் மேல்வேட்டியையும் அவருடைய மூலையில் வைத்தார்.

“என்னடே பெரமநாயகம், ஏன் இத்தினி நாளிய? யாரு வந்து கடையெத் தெறப்பான்னு நெனச்சுக்கிட்டே? வீட்டிலே எப்படி இருக்கு? சதி, சதி, மேலே போயி அரைப் பீசு 703 எடுத்துக்கிட்டு வா; கையோட வடக்கு மூலையிலே, பனியன் கட்டு இருக்கு பாரு, அதையும் அப்படியே தூக்கியா” என்ற முதலாளி ஆக்ஞை அவரை ஸ்தாபன இயக்கத்தில் இணைத்துவிட்டது. ஒரு கஜம், அரைக் கஜன், பட்டு, பழுக்கா, சேலம், கொள்ளேகாலம், பாப்லின், டுவில் – என்றெல்லாம் பம்பரமாக வயிற்றுக் கடவுளுக்கு லக்ஷார்ச்சனை செய்து கொண்டிருந்தார் பிரமநாயகம் பிள்ளை.

மாலை ஒன்பது மணிக்கு முதலாளிப் பிள்ளையவர்களிடம் தயங்கித் தயங்கித் தமது தேவையை எடுத்துச் சொல்லி, மாதிரி காட்டுவதற்காக மூன்று சேலைகளைப் பதிவு செய்துவிட்டு, மேல் வேட்டியில் முடிந்தவராக வீடு நோக்கி நடந்தார்.

நடைப்படியருகில், பிரமநாயகம் பிள்ளை வந்து மூட்டையை இறக்கிவைத்துவிட்டு, கதவுச் சந்துக்கிடையில் வழக்கம்போல் விரல்களை விட்டு உள்தாழை நெகிழ்த்தினார். தெருவில், இருள் விழுங்கிய நாய் ஒன்று உறக்கக் கலக்கத்துடன் ஊளையிட்டு அழுதது. அதன் ஏக்கக் குரல் அலைமேல் அலையாக மேலோங்கி எழுந்து மங்கியது.

பிரமநாயகம் பிள்ளை கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.

வீட்டில் விளக்கில்லை. ‘உறங்கி இருப்பாள். நாளியாகலே…’ என நினைத்துக் கொண்டே நிலைமாடத்தில் இருந்த நெருப்புப் பெட்டியை எடுத்து அருகிலிருந்த சிமினி விளக்கை ஏற்றினார். அந்த மினுக்கட்டான் பூச்சி இருளைத் திரட்டித் திரட்டிக் காட்டியது. அதன் மங்கலான வெளிச்சம் அவரது ஆகிருதியைப் பூதாகாரமாகச் சுவரில் நடமாட வைத்தது.

முதல் கட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தார். செல்லம்மாள் புடைவைத் துணியை விரித்து, கொடுங்கை வைத்து இடதுபுறமாக ஒருக்களித்துக் கிடந்தாள். வலதுகை பின்புறமாக விழுந்து தொய்ந்து கிடந்தது. அவள் கிடந்த நிலை, தூக்கமல்ல என்பதை உணர்த்தியது. பிரமநாயகம் பிள்ளை குனிந்து முகத்துக்கு நேரே விளக்கைப் பிடித்துப் பார்த்தார். கண் ஏறச் செருகியிருந்தது. நெஞ்சில் மட்டும் சிறிது துடிப்பு; சுவாசம் மெல்லிய இழைபோல் ஓடிக்கொண்டிருந்தது.

நிமிர்ந்து பின்புறமாகப் புழைக்கடைக்குச் சென்றார். போகும்போது அவரது பார்வை சமையற் கட்டில் விழுந்தது. உணவெல்லாம் தயாரித்து வரிசையாக எடுத்து அடுக்கி இருந்தது. அடுப்பில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்தது.

சாவகாசமாக, கிணற்றில் ஜலம் மொண்டு கால் கைகளைச் சுத்தம் செய்துகொண்டார். திரும்ப உள் நுழைந்து அடுப்படியிலிருந்த அகல் விளக்குத் திரியை நிமிண்டித் திருத்தி ஏற்றினார். பக்கத்திலிருந்த மாடத்திலிருந்து ஒரு சுக்குத் துண்டையும் நெருப்புப் பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்கட்டுக்குத் திரும்பி வந்தார்.

சுவரின் பக்கத்திலிருந்த குத்துவிளக்கை ஏற்றிவைத்துவிட்டு, செல்லம்மாளருகில் வந்து உட்கார்ந்தார். கையும் காலும் ஜில்லிட்டிருந்தன. கற்பூரத் தைலத்தை உள்ளங்கையில் ஊற்றி, சூடு ஏறும்படித் தேய்த்துவிட்டு, கமறலான அதன் நெடியை மூக்கருகில் பிடித்தார். பிரயோஜனம் இல்லை. எண்ணெயை ஊற்றிச் சற்றுப் பதற்றத்துடன் மூக்கின் மேலும் கபாலத்திலும் தடவினார். பிறகு எழுந்து சென்று கொதிக்கும் நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு வந்து, கையிலும் காலிலும் நெஞ்சிலுமாக ஒற்றடமிட்டார். அதிலும் பிரயோஜனம் இல்லை. சுக்குத் துண்டை விளக்கில் கரித்துப் புகையை மூக்கருகில் பிடித்தார்.

முகம் ஒரு புறமாகச் சாய்ந்திருந்ததனால் வாக்காக இல்லை. மெதுவாக அவளைப் புரட்டி மலர்த்திப் படுக்க வைத்தார். மறுபடியும் சுக்குப் புகையைப் பிரயோகித்தார்.

இரண்டு முறை ஊதியதும் செல்லம்மாள், புகையைத் தவிர்க்கச் சிறிது தலையை அசைக்க ஆரம்பித்தாள். உடலையே அதிர வைக்கும் ஒரு பெரிய தும்மல். மறுபடியும் மயக்கம். மறுபடியும் புகையை ஊத, முனகி, சிறு குழந்தை மாதிரி அழுதுகொண்டே, “தண்ணி…” என்று கேட்டாள் செல்லம்மாள்.

“இந்தா, கொஞ்சம் வாயை இப்படித் திறந்துக்கோ” என்று சிறு தம்ளரில் வெந்நீரை எடுத்து வாயை நனைக்க முயன்றார். அதற்குள் மறுபடியும் பல் கிட்டிவிட்டது; மயக்கம்.

பிரமநாயகம் பிள்ளை, தாம் அநுபவபூர்வமாகக் கண்ட சிகிச்சையை மீண்டும் பிரயோகித்தார்.

செல்லம்மாள் சிணுங்கிக்கொண்டே ஏறிட்டு விழித்தாள். எங்கிருக்கிறோம் என்பது அவளுக்குப் புரியாததுபோல அவள் பார்வை கேள்விகளைச் சொரிந்தது.

“நீங்க எப்ப வந்திய? அம்மெயெ எங்கே? உங்களுக்காகச் சமைச்சு வச்சிக்கிட்டு எத்தனை நேரமாக் காத்துக்கிட்டு இருப்பா?” என்றாள்.

பிரமநாயகம் பிள்ளை இம்மாதிரியான கேள்விக்குப் பதில் சொல்லி, இதமாக, புரண்டு கிடந்த பிரக்ஞையைத் தெளிவிப்பதில் நிபுணர். கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்ல வேண்டும் என்பதில்லை; கேட்டதற்கு உரிய பதில் சொன்னால் போதும்.

திடீரென்று செல்லம்மாள் அவரது கையை எட்டிப் பிடித்துக் கொண்டு, “அம்மா, அம்மா, ஊருக்குப் போயிடுவோம். அந்தத் துரோகி வந்தா புடிச்சுக் கட்டிப் போட்டு விடுவான்… துரோகி! துரோகி…” என்று உச்ச ஸ்தாயியில் கத்திக் கொண்டு போனாள். குரல் கிரீச்சிட்டது. பிரமநாயகம் பிள்ளை இடது கையால் ஒரு துணியைக் குளிர்ந்த ஜலத்தில் நனைத்து நெற்றியில் இட்டார்.

செல்லம்மாள் மறுபடியும் பிதற்ற ஆரம்பித்தாள். எதிரிலிருப்பது யார் என்பது அவளுக்குப் புலப்படவில்லை. “அம்மா, அம்மா… நீ எப்போ வந்தே?… தந்தி கொடுத்தாங்களா…?” என்றாள்.

“ஆமாம். இப்பந்தான் வந்தேன். தந்தி வந்தது. உடம்புக்கு எப்படி இருக்கிறது?” என்று பிரமநாயகம் பிள்ளை தாயாக நடித்தார். செல்லம்மாளின் தாய் இறந்து ஐந்து வருஷங்கள் ஆகின்றன. இவளுக்கு இம்மாதிரிப் பிதற்றல் வரும்போதெல்லாம் தாய் உயிருடன் இருப்பதாக ஒரு பிரமை தொடர்ந்து ஏற்படும்.

“அம்மா, எனக்குக் கொஞ்சம் தண்ணி தா … இவுங்க இப்படித்தாம்மா… என்னைப் போட்டுட்டுப் போட்டுட்டுக் கடைக்குப் போயிடுதாக… எப்ப ஊருக்குப் போகலாம்?… யாரு எங்காலையும் கையையும் கட்டிப் போட்டுப் போட்டா?… இனிமே நான் பொடவெயே கேக்கலே… என்னைக் கட்டிப் போடாதிய… மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ! என்னெவிட்டிடுங் கன்னா! நான் உங்களை என்ன செஞ்சேன்?… கொஞ்சம் அவுத்துவிட மாட்டியளா?… நான் எங்கம்மையைப் பாத்துப்போட்டு வந்திடுதேன்… அப்புறம் என்னைக் கட்டிப் போட்டுக்கிடுங்க.”

மறுபடியும் செல்லம்மாளுக்கு நினைவு தப்பியது.

வைத்தியரைப் போய் அழைத்து வரலாமா என்று நினைத்தார் பிரமநாயகம் பிள்ளை. ‘இவளை இப்படியே தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது? கொஞ்ச தூரமா?’

மறுபடியும் சுக்குப் பிரயோகம் செய்தார்.

நாடி மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது.

செல்லம்மாள் செத்துப் போவாளோ என்ற பயம் பிரமநாயகம் பிள்ளையின் மனசில் லேசாக ஊசலாடியது.

அந்தப் பயத்திலே மன உளைச்சலோ சொல்லை மீறும் துக்கத்தின் வலியோ இல்லை. வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு நிம்மதியும் இருந்தன. எவ்வளவு கஷ்டப்பட்டும் என்ன பலன் என்ற ஒரு மலைப்பு.

செல்லம்மாள் சிணுங்கிக் கொண்டே ஒரு புறமாகச் சரிந்து படுத்தாள்.

என்ன சொல்லுகிறாள் என்பது பிடிபடாமல், காலுக்கு ஒற்றடமிட்டுச் சூடு உண்டாக்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளை, “என்ன வேண்டும்?” என்று கேட்டுக்கொண்டு அவளது தலைப் புறமாகத் திரும்புமுன், சுவாசம் சரியாக ஓட ஆரம்பித்தது. செல்லம்மாள் மயக்கத்திலிருந்து விடுபட்டுத் தூங்க ஆரம்பித்தாள். முகத்தில் வெறிச்சோடிக்கிடந்த நோய்க் களை மங்கி அகன்றது.

பத்து நிமிஷம் கழியவில்லை; செல்லம்மாள் விழித்துக் கொண்டாள். மேலெல்லாம் ஏன் நனைந்திருக்கிறது என்று தடவிப் பார்த்துக் கொண்டு சிதறிக் கிடந்த ஞாபகத்தைக் கோவை செய்ய முயன்றாள்.

“தலையை வலிக்கிறது” என்றாள் சிணுங்கிக் கொண்டே.

“மேலெல்லாம் பூட்டுப் பூட்டாக வலிக்குது” என்று சொல்லிவிட்டுக் கண்களை மெதுவாக மூடினாள்.

“மனசை அலட்டிக் கொள்ளாமல் நிம்மதியாகத் தூங்கு; காலையில் சரியாகப் போய்விடும்” என்றார்.

“உம்” என்று கொண்டு கண்களை மூடியவள், “நாக்கை வறட்டுது; தண்ணி” என்றாள், எழுந்து உட்கார்ந்து கொண்டு.

“ஏந்திரியாதே; விளப்போறே” என்று கொண்டே முதுகைத் தாங்கியபடி வெந்நீரை ஒரு தம்ளரில் கொடுத்தார். அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “அது வாண்டாம். பச்சைத் தண்ணி கொடுங்க. நாக்கை வறட்டுது” என்றாள்.

“பச்சைத் தண்ணி குடிக்கப்படாது; வெந்நிதான் உடம்புக்கு நல்லது” என்று சொல்லிப் பார்த்தார்; தர்க்கம் பண்ணி அவளை அலட்டுவதைவிடக் குளிர்ந்த ஜலத்தைக் கொடுத்துவிடுவதே நல்லது என்று ஊற்றிக் கொடுத்துவிட்டு மெதுவாகப் படுக்க வைத்தார்.

கண்ணை மூடிச் சில விநாடிகள் கழித்ததும், “உங்களைத்தானே; எப்ப வந்திய? சாப்பிட்டியளா?” என்றாள்.

“நான் சாப்பிட்டாச்சு. நீ படுத்துத் தூங்கு; சும்மா ஒண்ணை மாத்தி ஒண்ணை நெனச்சுக்காதே” என்றார் பிரமநாயகம் பிள்ளை. பதில் அவள் செவியில் விழுந்தது; பிரக்ஞையில் பதியவில்லை. செல்லம் தூங்கிவிட்டாள்.

பிரமநாயகம் பிள்ளை கோரைப் பாயை எடுத்து வாசல் கதவுப் புறமாக விரித்துக் கொண்டு, “முருகா” என்று கொட்டாவியுடன் உட்காரும்பொழுது, ஒரு கோழி கூவியது. உலகம் துயிலகன்றது. பிள்ளையவர்களுக்குச் சற்று உடம்பைச் சரிக்க இடம் கொடுக்கவில்லை. முழங்காலைக் கட்டிக்கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்தார். மனம் மட்டும் தொடர்பற்ற பல பழைய நிகழ்ச்சிகளைத் தொட்டுத் தொட்டுத் தாவிக் கொண்டிருந்தது.

பொழுதும் புலர ஆரம்பித்தது. கறிகாய் விற்பனைக்காகத் தலையில் சுமடு எடுத்துச் செல்லும் பெண்கள், வர்த்தகத்தில் சற்றுச் செயலிருந்ததால் கை வண்டியில் காய்கறி ஏற்றி நரவாகன சவாரி செய்யும் பெண்களின் குரல் பிள்ளையவர்களை நினைவுக் கோயிலிலிருந்து விரட்டியது. உள்ளே சென்று குனிந்து கவனித்தார். கொடுங்கையாக மடித்து, கன்னத்துக்கு அண்டை கொடுத்து, உதடுகள் ஒருபுறம் சுழிக்க, அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

எழுந்திருந்ததும் வயிற்றிற்கு ஏதாவது சுடச்சுடக் கொடுத்தால் நலம் என்று நினைத்தவராய் உள்கட்டுக்குச் சென்று அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு, புழைக்கடைப்புறம் சென்றார்.

அவர் திரும்பிவந்து “முருகா” என்று விபூதியை நெற்றியில் இட்டுக்கொண்டிருக்கையில், செல்லம்மாள் விழித்து எழுந்திருந்து படுக்கையில் உட்கார்ந்து தலையை உதறிக் கோதிக் கட்டிக் கொண்டு சிணுங்கிய வண்ணம் உள்ளே ஏறிட்டுப் பார்த்தாள்.

“இப்பொ எப்படி இருக்கு? நல்லாத் தூங்கினெ போல இருக்கே” என்றார் பிரமநாயகம் பிள்ளை.

“மேலெல்லாம் அடிச்சுப் போட்டாப்பலே பெலகீனமா இருக்கு. பசிக்கிது… சுடச்சுட ஏதாவது இருந்தாத் தேவலை” என்று செல்லம்மாள், தலையைச் சற்று இறக்கி, உச்சியைச் சொறிந்தபடி, புருவத்தை நெறித்துக் கொண்டு சொன்னாள்.

“அடுப்பிலே கருப்பட்டிக் காப்பிப் போட்டிருக்கேன்; பல்லைத் தேச்சுப்பிட்டுச் சாப்பிட்டாப் போகுது; பல் தேய்க்க வெந்நி எடுத்துத் தரட்டுமா?” என்றார்.

“வெந்நியெ எடுத்துப் பொறவாசல்லெ வச்சிருங்க. நான் போய்த் தேச்சுக்கிடுதேன்” என்றாள் செல்லம்மாள்.

“நல்ல கதையாத்தான் இருக்கு; நேத்துக் கெடந்த கெடப்பெ மறந்து போனியா? நடமாடப் படாது.”

“ஒங்களுக்குத்தான் என்ன, வரவர அசிங்கம் கிசிங்கம் இல்லாமெப்போகுது” என்று சொல்லிக் கொண்டே சுருட்டி வாரிக் கட்டிக் கொண்டு எழுந்தாள். கால் தள்ளாடியது.

மூசுமூசென்று இரைத்துக் கொண்டு சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டாள். பிரமநாயகம் பிள்ளை சட்டென்று பாய்ந்து அவளது தோள்பட்டையைப் பிடித்துக் கொண்டார்.

“பைய என்னைப் பொறவாசலுக்குக் கொண்டு விட்டிருங்க. பல்லைத் தேக்கட்டும். நிக்க முடியல்லே” என்றாள்.

அவளுடைய விதண்டாவாதத்துக்குப் போக்குக் கொடுத்து, கைத்தாங்கலாகப் புழைக்கடையில் கொண்டுபோய் அவளை உட்கார வைத்தார்.

பல்லைத் தேய்த்துவிட்டு, “அப்பாடா” “அம்மாடா” என்ற அங்கலாய்ப்புகளுடன் செல்லம்மாள் மீண்டும் படுக்கையில் வந்து படுப்பதற்குள் உடல் தளர்ந்துவிட்டது. படுத்தவுடன் தளர்ச்சியாகக் கண்களை மூடினாள்.

பிள்ளையவர்கள் காப்பி எடுத்துவந்து ஆற்றிக்கொண்டு, “பதமாக இருக்கு, குடி; ஆறிப்போச்சுன்னு சொல்லாதே” என்றார். அதற்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. கையமர்த்தினாள். சில நிமிஷங்கள் கழித்து மெதுவாகக் கண்களைத் திறந்தாள். சிரமத்துடன் கைகளை ஊன்றிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். தம்ளரிலிருந்த காப்பியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “சூடே இல்லையே! அடுப்பிலே கங்கு கெடக்கா? கொஞ்சம் வச்சு எடுத்து வாருங்க” என்றாள்.

“அதெ அப்பிடியே வச்சிறு; வேறெ சூடா இருக்கு; தாரேன்” என்று வேறு ஒரு பாத்திரத்தில் இன்னும் கொஞ்சம் எடுத்துவந்து தந்தார்.

காப்பியை எடுத்து நெஞ்சுக்கு இதமாக ஒற்றடமிட்டுக்கொண்டு, சாவகாசமாக ஒவ்வொரு மிடறாகக் குடித்துக் கொண்டிருந்த செல்லம்மாள், “நீங்க என்ன சாப்பிட்டிய?” என்றாள்.

“பழையது இருந்தது. ஓர் உருண்டை சாப்பிட்டேன். நீ காப்பியைச் சீக்கிரம் குடி. நேரமாகுது. வைத்தியனைப் போய்ப் பார்த்துக்கிட்டு வாரேன்” என்றார்.

“வைத்தியனும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். எனக்கு என்ன இப்ப? வீணாக் காசெக் கரியாக்காதிக. புளிப்பா எதுவும் தின்னாத் தேவலை. புளிச்ச தோசைமாவு இருந்துதே, அதெ என்ன பண்ணிய?” என்றாள்.

“புளிப்பாவது கத்திரிக்காயாவது? காப்பியைக் குடிச்சுப்பிட்டுப் படுத்திரு. நான் வைத்தியனைக் கூட்டிக்கிட்டு வாரேன்; நேத்துக் கெடந்த கெடப்பு மறந்து போச்சுப் போலே!” என்று எழுந்தார்.

“அந்தக் காப்பியை ஏன் வீணாக்கிறிய? நீங்க சாப்பிடுங்களேன்” என்றாள் செல்லம்மாள்.

வைத்தியனைத் தேடிச் சென்ற பிரமநாயகம் பிள்ளை, பஞ்சத்தில் அடிபட்டவன் போன்ற சித்த வைத்திய சிகாமணி ஒருவனைத் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தார். இருவரும் உள்ளே நுழைந்தபோது படுக்கையில் செல்லம்மாளைக் காணவில்லை.

அடுப்பங்கரையில் ‘சுர்’ ‘சுர்’ என்று தோசை சுடும் சப்தம் கேட்டது. வைத்தியரைப் பாயை விரித்து உட்காரவைத்துவிட்டு, “என்னத்தைச் சொன்னாலும் காதுலே ஏறமாட்டேன்கிறதே; இன்னம் என்ன சிறுபிள்ளையா?” என்று குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார் பிள்ளை.

வேர்க்க விறுவிறுக்க, செல்லம்மாள் தன் சக்திக்கு மீறிய காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். கை நடுக்கத்தால் தோசை மாவு சிந்திக் கிடந்தது. தட்டத்தில் ஒரு தோசை கரிந்து கிடந்தது. அடுத்தது வாக்காக வரும் என்று எண்ணெய் மிளகாய்ப் பொடி முதலிய உபகரணங்களுடன் தோசைக் கல்லைப் பார்த்துக் கொண்டிருந்தாள் செல்லம்மாள். அவரை ஏறிட்டுப் பார்த்துச் சிரித்தாள்.

“போதும் போதும். சிரிக்காதே; வைத்தியர் வந்திருக்கிறார். ஏந்திரி” என்று அவளைக் கையைப் பிடித்துத் தூக்கினார்.

“இதெக் கல்லை விட்டு எடுத்துப் போட்டு வருகிறேன்.”

“நீ ஏந்திரி” என்று சொல்லிக்கொண்டே வெந்து கொண்டிருந்த தோசையுடன் கல்லைச் சட்டுவத்தால் ஏந்தி எடுத்து அகற்றினார்.

“நீங்க போங்க. நானே வருதேன்” என்று குலைந்த உடையைச் சீர்திருத்திக்கொண்டு, தள்ளாடிப் பின் தொடர்ந்து வந்து பாயில் உட்கார்ந்தாள்.

வைத்தியன் நாடியைப் பரீட்சித்தான். நாக்கை நீட்டச் சொல்லிக் கவனித்தான்.

“அம்மா, இப்படி இருக்கிறபோது நீங்க எழுந்திரிச்சு நடக்கவே கூடாது. உடம்பு இத்துப் போச்சு. தெகன சக்தியே இல்லியே! இன்னும் மூணு நாளைக்கு வெறும் பால் கஞ்சிதான் ஆகாரம். உடம்புக்கு வலு கொஞ்சம் வந்ததும் மருந்து கொடுக்கலாம். காப்பியைக் கொஞ்ச நாளைக்கி நிறுத்தி வையிங்க. காலையிலும் ராத்திரியிலும் பால். மத்தியான்னமாக் கஞ்சி. படுக்கையெ விட்டு எந்திரிக்கவே கூடாது. ஐயா, மயக்கம் வந்தா இந்தச் செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கிலெ தடவுங்க. இந்தத் தைலத்தை மூக்குத் தண்டிலும் பொட்டிலும் தடவுங்க; நான் மூணு நாள் கழிஞ்சு வருகிறேன்” என்று மருந்துக்குக் கையில் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு வெளியேறினான்.

“பாத்துப் பாத்து, நல்ல வைத்தியனைத் தேடிப் புடிச்சாந்திய; பால் கஞ்சிச் சாப்பிடணுமாம்; ஆய்! நான் என்ன காச்சக்காரியா? ஒடம்பிலே பெலகீனம் இருக்கிறதெக் கண்டுபிடிக்க வைத்தியனா வரணும்? மனுசான்னா மயக்கம் வாறதில்லையா! வந்தா, வந்த வளியாப் போகுது” என்றாள் செல்லம்மாள்.

இந்தச் சமயத்தில் வெளியில், “ஐயா, ஐயா!” என்று ஒரு குரல் கேட்டது.

“என்ன, முனுசாமியா! உள்ளே வா. ஏன் வரலேன்னு கேட்டு விட்டாகளாக்கும். வீட்டிலே அம்மாவுக்கு உடம்பு குணமில்லே; நேத்துத் தப்பினது மறு பிழைப்பு; நாளைக்கு முடிஞ்சா வருகிறேன் என்று சொல்லு. முனிசாமி, நீ எனக்கு ஒரு காரியம் செய்வாயா? அந்த எதிர்ச் சரகத்திலே ஒரு மாட்டுத் தொழுவம் இருக்குது பாரு; அங்கே பால்கார நாயுடு இருப்பார். நான் கொஞ்சம் கூப்பிட்டேன் என்று கூட்டிக்கொண்டு வா” என்று அனுப்பினார்.

“என் பேரிலே பளியெப் போட்டுக் கடைக்குப் போகாமே இருக்க வேண்டாம். போய்ச் சம்பளப் பணத்தெ வாங்கிக்கிட்டு வாருங்க” என்றாள் செல்லம்மாள்.

“அடெடே! மறந்தே போயிட்டேன். நேத்துப் பொடவை எடுத்தாந்து வச்சேன்; உனக்கு எது புடிச்சிருக்கு பாரு. வேண்டாததெக் குடுத்து அனுப்பிடலாம்” என்று மூட்டையை எடுத்து வந்து வைத்தார் பிரமநாயகம் பிள்ளை.

“விடியன்னையே மூட்டையைப் பாத்தேன்; கேக்கணும்னு நெனச்சேன்; மறந்தே போச்சு” என்று கூறிக்கொண்டே மூட்டையிலிருந்த மூன்று புடைவைகளையும் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்.

“எனக்கு இந்தப் பச்சைதான் புடிச்சிருக்கு; என்ன வெலையாம்?” என்றாள்.

“அதெப்பத்தி ஒனக்கென்ன? புடிச்சதெ எடுத்துக்கோ” என்று பச்சைப் புடைவையை எடுத்து அலமாரியில் வைத்துவிட்டு, மற்ற இரண்டையும் மூட்டையாகக் கட்டிச் சுவரோத்தில் வைத்தார்.

“கண்டமானிக்குக் காசெச் செலவு பண்ணிப்புட்டு, பின்னாலே கண்ணைத் தள்ளிக்கிட்டு நிக்காதிய. நான் இப்பவே சொல்லிப் பிட்டேன்” என்று கண்டிப்புப் பண்ணினாள் செல்லம்மாள்.

வந்த பால்கார நாயுடுவிடம் மூன்று தினங்களுக்குச் சுத்தமான பசும்பாலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, கடை முதலாளியிடம் தாம் கேட்டதாக ரூ.15 வாங்கி வரும்படியும், சேலை மூட்டையைச் சேர்ப்பித்து விடும்படியும் முனிசாமியிடம் சொல்லியனுப்பினார்.

அன்று பாயில் தலை சாய்க்க ஆரம்பித்ததிலிருந்து செல்லம்மாளுக்கு உடம்பு மோசமாகிக் கொண்டே போயிற்று. க்ஷீணம் அதிகமாயிற்று. மத்தியான்னம் அவளைக் கவனித்துச் சுச்ருஷை செய்ததன் பயனாக, அடுப்பில் கிடந்த பால் கஞ்சி, பசை மாதிரிக் குளு குளு என்றாகிவிட, பிரமநாயகம் பிள்ளை அதில் வெந்நீரை விட்டுக் கலக்கி அவளுக்குக் கொடுக்க முயன்றார். பலவீனத்தினால் அரோசிகம் அதிகமாகிவிடவே உடனே வாந்தி எடுத்து விட்டது. ஆனால் குமட்டல் நிற்கவில்லை. செல்லம்மாள் நினைத்து நினைத்து வாயிலெடுக்க ஆரம்பித்தாள். உடல் தளர்ச்சி மிகுந்துவிட, மறுபடியும் பழைய கோளாறுகள் தலை தூக்க ஆரம்பித்தன.

அருகில் இருந்து கொண்டு காலையும் கையையும் பிடித்துப் பிடித்துக் கை ஓய்ந்ததுதான் மிச்சம். பகல் மூன்று மணிக்கெல்லாம் சோர்வு மேலீட்டால் செல்லம்மாள் மயங்கிக் கிடந்தாள். செத்துப் போய் விடுவோமோ என்ற பயம் அவளுக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு சமயங்களில் மூக்கும் கையும் குரக்கு வலித்து இழுத்து வாங்க ஆரம்பித்தன.

“எனக்கு என்னவோ ஒரு மாதிரியாக வருது, வேறொரு வைத்தியனைப் பார்த்தால் தேவலை” என்றாள் செல்லம்மாள்.

“உடம்பு தளர்ந்திருப்பதால் இப்படி இருக்கிறது. சொல்லுகிறபடி, ஆடாமெ அசங்காமெ படுத்துக் கிடந்தாத்தானே! பயப்பட வேண்டாம்; எல்லாம் சரியாகப் போயிடும்” என்றார் பிரமநாயகம் பிள்ளை.

அவருக்கும் உள்ளுக்குள் சற்று விபரீதமாகப் பட்டது. “கொஞ்ச நேரத்தில் பால்காரன் வருவான். பாலை வாங்கி வைத்துவிட்டு டாக்டரைக் கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன். குன்னத்தூர் அத்தையெ வரச்சொல்லிக் காயிதம் எழுதட்டா?” என்றார்.

“எளுதி என்னத்துக்கு? அவளாலே இந்தத் தூரா தொலைக்குத் தன்னந்தனியா வந்துக்கிட முடியுமா? கொஞ்சம் கருப்பட்டிக் காப்பி சுடச்சுடப் போட்டுத் தாரியளா? இந்த வாந்தியாவது செத்தெ நிக்கும்” என்று சொல்லிவிட்டுச் சற்று கண்ணை மூடினாள்.

“இந்த மாங்கொட்டைத் துண்டெக் கொஞ்சம் வாயிலே ஒதுக்கிக்கோ; நான் காப்பி போட்டுத் தாரேன்” என்று அடுப்பங்கரைக்குச் சென்றார்.

அவர் அடுப்பைப் பிரித்துவிட்டு அனலில் சற்று வெந்நீர் இடலாம் என்று தவலைத் தண்ணீரை அடுப்பேற்றும்போது பால்காரனும் வந்தான்.

கருப்பட்டிக் காப்பியைச் செல்லம்மாள் அருகில் வைத்துவிட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டு, “நான் போய் டாக்டரைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று வெளியே புறப்பட்டார்.

“சுருங்க வந்து சேருங்க; எனக்கு ஒருபடியா வருது” என்று மூடிய கண்களைத் திறக்காதபடி சொன்னாள் செல்லம்மாள். அவ்வளவு தளர்ச்சி. வெளிக்கதவு கிறீச்சிட்டு, பிரமநாயகம் பிள்ளை புறப்பட்டுவிட்டதை அறிவித்தது.

அவர் திரும்பி வரும்போது பொழுது கருக்கிவிட்டது. எவரோ ஓர் ஒன்றரையணா எல்.எம்.பி.யின் வீட்டு வாசலில் அவரது வருகைக்காகக் காத்துக் காத்து நின்றார். அவரும் வருவதாகக் காணவில்லை. கவலை, கற்பனையால் பல மடங்கு பெருகித் தோன்ற, நிலைமையும் விலாசமும் தெரிவித்து, உடனே வரும்படி கெஞ்சிக் கடுதாசி எழுதிவைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தார்.

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. செல்லம்மாள் முற்றத்தில் மயங்கிக் கிடந்தாள். சற்று முன் குடித்த காப்பி வாந்தியெடுத்துச் சிதறிக் கிடந்தது.

அவசர அவசரமாக விளக்கை ஏற்றினார். வெந்நீரை எடுத்து வந்து அவள் மேல் சிதறிக் கிடந்த குமட்டல்களைக் கழுவி, அவளைத் தூக்கிவந்து படுக்கையில் கிடத்தினார்.

வைத்தியன் கொடுத்துவிட்டுச் சென்ற செந்தூரத்தைத் தேனில் குழப்பி நாக்கில் தடவினார். மூக்கிலும், கால் கைகளிலும் தைலத்தைத் தடவினார். பிரக்ஞை வரவில்லை. மூச்சு இழையோடிக்கொண்டிருந்தது. மீண்டும் தைலத்தைச் சற்றுத் தாராளமாகவிட்டு உடலில் தேய்த்து மயக்கம் தெளிவிக்க முயன்றுகொண்டிருந்தார்.

அச்சமயம் வெளியே ஒரு ரிக்ஷா வந்து நின்றது. “ஸார்! உள்ளே யார் இருக்கிறது?” என்று குரல் கொடுத்துக் கொண்டே கைப்பெட்டியும் வறுமையுமாக டாக்டர் உள்ளே வந்தார்.

“நல்ல சமயத்தில் வந்தீர்களையா!” என்று சொல்லிக்கொண்டே அவரை வரவேற்றார் பிரமநாயகம் பிள்ளை.

“இப்போ என்ன?” என்றபடியே அருகில் வந்து உட்கார்ந்து கையைப் பிடித்துப் பார்த்தார். வாயைத் திறக்க முயன்றார். பல் கிட்டிவிட்டிருந்தது.

“ஒரு நெருப்புப் பெட்டி இருந்தாக் கொண்டு வாருங்க; ஊசி குத்தணும்” என்றார்.

பிரமநாயகம் பிள்ளை அருகில் மாடத்தில் இருக்கும் நெருப்புப் பெட்டியை மறந்துவிட்டு அடுப்பங்கரைக்கு ஓடினார். அவரது வருகைக்காகக் காத்திருப்பதற்காக மோட்டுவளையைப் பார்க்க முயன்ற டாக்டரின் கண்களுக்கு மாடத்து நெருப்புப் பெட்டி தெரிந்தது. எடுத்து ‘ஸ்பிரிட்’ விளக்கை ஏற்றி மருந்து குத்தும் ஊசியை நெருப்பில் சுடவைத்துச் சுத்தப்படுத்தினார். கையில் நெருப்புப் பெட்டியுடன் அசடு வழிய வேர்வை வழிய நின்று கொண்டிருந்த பிரமநாயகம் பிள்ளையிடம், இடது கையைச் சற்று விளக்கருகில் தூக்கிப் பிடித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு, மருந்தைக் குத்தி ஏற்றினார். இரண்டொரு விநாடிகள் இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

செல்லம்மாள் சிணுங்க ஆரம்பித்தாள்.

டாக்டர் மெதுவாகத் தம்முடைய கருவிகளை எடுத்துப் பெட்டியில் வைத்தார். “கொஞ்சம் சீயக்காய்ப் பொடி இருந்தால் கொடுங்கோ” என்று கேட்டார். பிரமநாயகம் பிள்ளை வேட்டி துவைக்கும் வெள்ளைச் சவுக்காரக் கட்டியைக் கொடுக்க, மௌனமாகக் கை கழுவிவிட்டு, “தூங்குகிறாப் போலிருக்கிறது. எழுப்ப வேண்டாம். எழுந்தால் பால் மட்டும் கொடுங்கள்; இம்மாதிரிக் கேஸ்கள் வீட்டில் வைத்திருப்பது சவுகரியக் குறைச்சல் ஐயா; ஆஸ்பத்திரிதான் நல்லது” என்று கூறிக்கொண்டே பெட்டியைத் தூக்கிக் கொண்டு எழுந்து நடந்தார்.

முன் தொடர்ந்த பிள்ளை, “எப்படி இருக்கிறது?” என்று விநயமாகக் கேட்க, “இப்பொழுது ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எதற்கும் நாளை காலை வந்து என்னிடம் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்; பிறகு பார்ப்போம்; இந்த ரிக்ஷாக்காரனுக்கு ஒரு நாலணா கொடுங்கள்” என்று சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறிக்கொண்டார். மடியிலிருந்த சில்லறை மனித மாட்டின் மடிக்கு மாறியது. ரிக்ஷா செல்லுவதைப் பார்த்து நின்றுவிட்டு உள்ளே திரும்பினார்.

செல்லம்மாள் தூங்கிக்கொண்டிருந்தாள்.

பிரமநாயகம் பிள்ளை ஓசைப்படாமல் அருகில் வந்து உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். தொட்டால் விழித்து விடுவாளோ என்ற அச்சம்.

அவளுடைய நெஞ்சின் மேல் ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. மென்மையான துணியின் மேல் அதற்கு உட்கார்ந்திருக்கப் பிரியம் இல்லை. மறுபடியும் பறந்து வட்டமிட்டு, அவளது உள்ளங்கையில் உட்கார்ந்தது. மறுபடியும் பறந்து, எங்கு அமர்வது என்று பிடிபடாதது போல வட்டமிட்டுப் பறந்தது. கடைசியாக அவளுடைய உதட்டின் மேல் உட்கார்ந்தது.

“தூ தூ” என்று துப்பிக்கொண்டு உதட்டைப் புறங்கையால் தேய்த்தபடி செல்லம்மாள் விழித்துக் கொண்டாள்.

சற்று நேரம் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உங்களுக்குக் கொஞ்சங்கூட இரக்கமே இல்லை. என்னை இப்படிப் போட்டுட்டுப் போயிட்டியளே” என்று கடிந்து கொண்டாள்.

“நான் இல்லாமலிருக்கப்போ நீ ஏந்திரிச்சு நடமாடலாமா?” என்று சொல்லிக்கொண்டே அவள் கன்னத்தைத் தடவிக்கொடுத்தார்.

“நான் செத்துத்தான் போவேன் போலிருக்கு; வீணாத் தடபுடல் பண்ணாதிய” என்று சொல்லிவிட்டுக் கண்ணை மூடினாள்.

“உடம்பில் தளர்ச்சியாக இருக்கிறதால் தான் அப்படித் தோணுது; காலைப் பிடிக்கட்டா?” என்று மெதுவாகத் தடவிக்கொடுத்தார்.

“அப்பாடா! மேலெல்லாம் வலிக்குது. உள்ளுக்குள்ளே ஜில்லுன்னு வருது. என் கையைப் புடிச்சிக்கிட்டுப் பக்கத்திலேயே இருங்க” என்று அவர் கையைச் செல்லம்மாள் தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.

சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு, “அம்மையெப் பாக்கணும் போல இருக்கு” என்று கண்களைத் திறக்காமலே சொன்னாள்.

“நாளைக்கு உடனே வரும்படி தந்தி கொடுத்தாப் போகுது; அதுக்கென்ன பிரமாதம்?” என்றார் பிள்ளை. அவருக்குப் பயம் தட்டியது. பிரக்ஞை தடம் புரண்டுவிட்டதா?

“ஊம், துட்டெ வீணாக்க வேண்டாம். கடுதாசி போட்டால் போதும். அவ எங்கெ வரப்போறா? நாளைக்காவது நீங்க கடைக்குப் போங்க” என்றாள் செல்லம்மாள்.

“நீ கொஞ்சம் மனசெ அலட்டிக்காமே படுத்துக்கோ” என்று சொல்லிக்கொண்டே அவள் கைப்பிடிப்பிலிருந்து வலது கையை விடுவித்துக்கொண்டு நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.

“வலிக்குது. தாகமாக இருக்கு, கொஞ்சம் வெந்நி” என்றாள்.

“வெந்நி வயத்தைப் பெரட்டும்; இப்பந்தானே வாந்தியெடுத்தது?” என்றார். மெதுவாக அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். செல்லம்மாளுக்குக் காலையிலிருந்த முகப்பொலிவு மங்கிவிட்டது. உதடுகள் சற்று நீலம் பாரித்துவிட்டன. அடிக்கடி வறட்சியைத் தவிர்க்க உதட்டை நக்கிக் கொண்டாள்.

“நெஞ்சில் என்னமாவோ படபடவென்று அடிக்குது” என்றாள் மறுபடியும்.

“எல்லாம் தளர்ச்சியின் கோளாறுதான்; பயப்படாதே” என்று நெஞ்சைத் தடவிக்கொடுத்தார்.

ஒரு விநாடி கழித்து, “பசிக்குது; பாலைத் தாருங்க. நான் தூங்குதேன்” என்றாள் செல்லம்மாள்.

“இதோ எடுத்து வாரேன்” என்று உள்ளே ஓடிச் சென்றார் பிரமநாயகம் பிள்ளை. பால் திறைந்து போயிருந்தது. அவருக்குத் திக்கென்றது. மாடத்திலே உலர்ந்துபோன எலுமிச்சம்பழம் இருந்தது. அதை எடுத்து வெந்நீரில் பிழிந்து சர்க்கரையிட்டு அவளருகில் கொண்டுவந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். சற்று நேரம் சூடான பானகத்தைக் குடிக்கும் பக்குவத்துக்கு ஆற்றினார்.

“செல்லம்மா!” என்று மெதுவாகக் கூப்பிட்டார்.

பதில் இல்லை. மூச்சு நிதானமாக வந்து கொண்டிருந்தது.

“செல்லம்மா, பால் தெரைஞ்சு போச்சு; பானகம் தாரேன். குடிச்சுப்புட்டுத் தூங்கு” என்றார்.

“ஆகட்டும்” என்பது போல அவள் மெதுவாக அசைத்தாள்.

சிறு தம்ளரில் ஊற்றி மெதுவாக வாயில் ஊற்றினார். இரண்டு மடக்குக் குடித்துவிட்டுத் தலையை அசைத்துவிட்டாள்.

“ஏன், வெளக்கை…” – விக்கலுடன் உடல் குலுங்கியது. நெஞ்சு விம்மி அமர்ந்தது. காலும் கையும் வெட்டி வாங்கின.

அதிர்ச்சி ஓய்ந்ததும் பிள்ளை பானகத்தைக் கொடுத்தார். அது இருபுறமும் வழிந்துவிட்டது.

பாத்திரத்தை மெதுவாக வைத்துவிட்டுத் தொட்டுப் பார்த்தார்.

உடல்தான் இருந்தது.

வைத்த கையை மாற்றாமல் பூதாகாரமாகச் சுவரில் விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப் பிடுங்குவனபோல் இருந்தன.

சித்த வைத்தியன் கொடுத்த மருந்தில் மிஞ்சிக் கிடந்தவற்றை உடம்பில் பிரயோகித்துப் பார்த்தார். “இனிமேல் ஆவது ஒன்றுமில்லை” என்பது தெரிந்தும் தவிட்டு ஒற்றடம் கொடுத்துப் பார்த்தார்.

அவரது நெற்றியின் வியர்வை அந்த உடலின் கண் இமையில் சொட்டியது.

அரைக்கண் போட்டிருந்த அதை நன்றாக மூடினார். குரக்குவலி இழுத்த காலை நிமிர்த்திக் கிடத்தினார். கைகளை நெஞ்சில் மடித்து வைத்தார்.

அருகில் உட்கார்ந்திருந்தவர் பிரக்ஞையில் தளதளவென்று கொதிக்கும் வெந்நீரின் அழைப்புக் கேட்டது.

உள்ளே சென்று செல்லம்மாள் எப்போதும் குளிக்கும் பருவத்துக்குப் பக்குவப்படுத்தினார்.

உடலை எடுத்து வந்தார். “செல்லம்மாள் இவ்வளவு கனமில்லையே; என்னமாக் கனக்கிறது!” என்று எண்ணமிட்டார்.

தலை வசப்படாமல் சரிந்து சரிந்து விழுந்தது.

கீழே உட்காரவைத்து, நின்று தமது முழங்காலில் சாய்த்து வைத்துத் தவலைத் தண்ணீர் முழுவதையும் விட்டுக் குளிப்பாட்டினார். மஞ்சள் இருக்குமிடம் தெரியாததனால் அதற்கு வசதி இல்லாமற் போய்விட்டது. மேல்துணியை வைத்து உடலைத் துவட்டினார்.

மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினார். அவளுக்கு என வாங்கிய பச்சைப் புடவையை அந்த உடலில் சுற்றிக் கட்டப்பட்டது. நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டார். தலைமாட்டினருகில் குத்துவிளக்கை ஏற்றிவைத்தார். எப்பொழுதோ ஒரு சரஸ்வதி பூஜைக்கு வாங்கின சாம்பிராணி ஞாபகம் வந்தது. கனல் எடுத்து வந்து வைத்துப் பொடியைத் தூவினார். நிறை நாழி வைத்தார்.

செல்லம்மாள் உடம்புக்குச் செய்யவேண்டிய பவித்திரமான பணிவிடைகளைச் செய்து முடித்துவிட்டு அதையே பார்த்து நின்றார்.

கூடத்தில் மூச்சுத் திணறுவது போல் இருந்தது. வெளிவாசலுக்கு வந்து தெருவில் இறங்கி நின்றார்.

ஊசிக் காற்று அவர் உடம்பை வருடியது.

வானத்திலே தெறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்குக் கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம் தெரியாது. சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக் கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கவோ உதயமாகவோ முடியாமல் தவித்தது.

அருகில், “ஐயா!” என்றான் முனிசாமி.

“முதலாளி குடுத்தாங்க” என்று நோட்டுகளை நீட்டினான்; “அம்மாவுக்கு எப்படி இருக்கு?” என்றான்.

“அம்மா தவறிப் போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக் குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு. வரும்போது அம்பட்டனுக்கும் சொல்லிவிட்டு வா” என்றார்.

நிதானமாகவே பேசினார்; குரலில் உளைச்சல் தொனிக்கவில்லை.

பிரமித்துப்போன முனிசாமி தந்தி கொடுக்க ஓடினான்.

பிரமநாயகம் பிள்ளை உள்ளே திரும்பி வந்து உட்கார்ந்தார். கனலில் மீண்டும் கொஞ்சம் சாம்பிராணியைத் தூவினார்.

அந்த ஈ மறுபடியும் அந்த உடலின் முகத்தில் வட்டமிட்டு உட்கார்ந்தது.

பிரமநாயகம் பிள்ளை அதை உட்காரவிடாமல் விரட்டுவதற்கு விசிறியால் மெதுவாக வீசிக்கொண்டே இருந்தார்.

அதிகாலையில், மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம் தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச் சங்கு பிலாக்கணம் தொடுத்தது.